7 லட்சத்துக்கு ரூ 45 லட்சம் வட்டி கட்டியாச்சு.. அது போதாதா?.. கந்து வட்டியை தட்டி கேட்ட இளைஞர் கொலை
கும்பகோணம்: ரூ 7 லட்சம் கடனாக பெற்றதற்கு ரூ 45 லட்சம் வட்டி செலுத்தியாகிவிட்டது. இது போதாதா என தட்டி கேட்ட இளைஞரை கூலிப்படையை ஏவி படுகொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் பாணாதுறை பத்துக்கட்டு தெருவில் வசித்து வருபவர் சிவசுப்பிரமணியன் (53). அதே பகுதியில் மளிகை கடை வைத்துள்ளார். இவரது மகன் அருண் (22).
இவர் தந்தைக்கு உதவியாக கடையை பார்த்து வந்தார். இந்த நிலையில் குடும்பச் செலவு மற்றும் வியாபார நிமித்தமாகவும் பாமக முன்னாள் நிர்வாகி ஒருவரிடம் ரூ 7 லட்சம் வரை சிவசுப்பிரமணியன் கடன் வாங்கியிருந்தார்.
ஜீப்பிலிருந்து குதித்து.. போலீஸாருக்கு கத்திக் குத்து.. சேலம் என்கவுண்டரில் ரவுடி சுட்டுக் கொலை
ரூ 45 லட்சம்
இந்த சிவசுப்பிரமணியன் பெற்ற கடனுக்கு கந்து வட்டி மூலம் வட்டியாக ரூ. 45 லட்சத்தை பாமக முன்னாள் நிர்வாகி பெற்றுவிட்டார். எனினும் அசல் 7 லட்சத்தை கொடுக்குமாறு சிவசுப்பிரமணியனை தொல்லை செய்துள்ளார்.
கண்டபடி பேச்சு
ஒரு நாள் கடைக்கு வந்த பாமக முன்னாள் நிர்வாகி, சிவசுப்பிரமணியத்திடம் கொடுத்த கடனை கேட்டுள்ளார். மேலும் சிவசுப்பிரமணியனின் வயதை பொருட்படுத்தாமல் அந்த முன்னாள் நிர்வாகி கண்டபடி பேசியுள்ளார்.
கடும் ஆத்திரம்
இதனால் ஆத்திரமடைந்த அருண், எங்கள் அப்பா வாங்கியது ரூ 7 லட்சம்தான். அதற்கு நீங்கள் 6 மடங்காக ரூ. 45 லட்சத்தை வட்டியாகவே பெற்றுவிட்டீர்கள். இது போதாமல் அசலை வேறு கேட்கிறீர்களா. அதெல்லாம் கொடுக்க முடியாது என்று திட்டவட்டமாக கூறிவிட்டார். இது பாமக முன்னாள் நிர்வாகிக்கு கடும் ஆத்திரத்தை ஏற்படுத்தியது.
கொலை
இதையடுத்து நேற்று இரவு கடையில் தனது அப்பாவுக்கு உதவியாக அருண் இருந்தார். அப்போது பைக்கில் வந்த இருவர் அருணை சரமாரியாக அடித்து கொலை செய்தனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.