தலை துண்டிக்கப்பட்ட நிலையில் மீன் பெட்டியில் இளைஞர் சடலம்... திருவள்ளூர் அருகே!
திருவள்ளூர்: திருவள்ளூர் அருகே தலை துண்டிக்கப்பட்ட நிலையில், மீன் பதப்படுத்தும் பெட்டியில் இளைஞர் ஒருவரது உடல் மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூரை அடுத்த சித்துக்காடு பகுதியில் உள்ள தனியார் செங்கல் சூளை ஒன்று உள்ளது. நேற்று காலை அந்த பகுதி மக்கள் செங்கல் சூளை அருகே உள்ள வயல்வெளிகளில் ஆடு, மாடுகளை மேய்ப்பதற்காக சென்றுள்ளனர்.

அப்போது அங்குள்ள முட்புதர்களின் உள்ளே மீன் பதப்படுத்தும் பெட்டி ஒன்று கிடந்துள்ளதை அவர்கள் கண்டுள்ளனர். மெலும் அதிலிருந்து துர்நாற்றம் வீசவே, அதனை திறந்து பார்த்துள்ளனர்.
அதன் உள்ளே இளைஞர் ஒருவரது உடல் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் இருந்ததைக் கண்டு அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக இது குறித்து கிராம நிர்வாக அலுவலருக்கும், போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர்.
விரைந்து வந்த போலீசார், இளைஞரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். முகம் சிதைந்த நிலையில் இருந்ததால் கொலை செய்யப்பட்ட இளைஞரது உடலை அடையாளம் காண்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அதோடு அவர் கொலை செய்யப்பட்டு 3 நாட்களுக்கு மேல் இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
மோப்ப நாய், தடயவியல் நிபுணர்களும் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டு தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டது. இறந்துபோனவருக்கு சுமார் 30 வயது இருக்கலாம் எனவும், போலீசாரின் விசாரணையை குழப்புவதற்காக அவரை மர்மநபர்கள் வேறு இடத்தில் வைத்து கொலை செய்துவிட்டு இங்கு வந்து போட்டு சென்றிருக்கலாம் எனவும் போலீசார் சந்தேகிக்கின்றனர்.
எனவே, வெள்ளவேடு, திருவள்ளூர், பூந்தமல்லி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மாயமானவர்கள் பற்றிய விவரங்களைப் போலீசார் சேகரித்து வருகின்றனர். கொலையாளியைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
கொலை செய்யப்பட்ட நபர் மஞ்சள் நிறத்தில் கருப்பு கோடு போட்ட சட்டையும், சிமெண்டு நிற பேண்டும் அணிந்திருந்தார்.












Click it and Unblock the Notifications