முசிறி தலைமலையில் இருந்து தவறி விழுந்த இளைஞர் ஆறுமுகம் உடல் கண்டெடுப்பு
முசிறி தலைமலை கோயிலில் கிரிவலம் வந்தபோது 3000 அடி உயரத்திலிருந்து தவறி விழுந்த இளைஞரின் உடல் மீட்கப்பட்டது.
Recommended Video
முசிறி: திருச்சி மாவட்டம், முசிறியில் தலைமலையில் உள்ள நல்லேந்திர பெருமாள் கோயிலில் கிரிவலம் வந்தபோது 3000 அடி உயரத்திலிருந்து தவறி விழுந்த இளைஞர் ஆறுமுகத்தின் உடல் கண்டெடுக்கப்பட்டது.
திருச்சி மாவட்டம் தொட்டியம் அருகே நல்லேந்திர பெருமாள் கோயில் சிறப்பு பெற்ற வைணவ கோயிலாகும். புரட்டாசி சனிக்கிழமைகளில் இந்த கோயிலுக்கு பக்தர்கள் கூட்டம் அலைமோதும். புரட்டாசி கடைசி சனிக்கிழமை என்பதால் நேற்று ஏராளமான பக்தர்கள் காலை முதலே கிரிவலம் வந்தனர்.
ஆபத்தான மலை பள்ளம்
நேற்று காலையில் கிரிவலம் வந்த இளைஞர் ஒருவர் 3000 அடி உயரத்திலிருந்து தவறி விழுந்தார். ஆபத்தான மலை பள்ளத்தில் விழுந்த இளைஞரின் நிலை என்னவானது என்பது தெரியவில்லை.
மீட்பதில் சிக்கல் இருந்தது
இதுகுறித்து தகவலறிந்த எருமைப்பட்டி போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். தவறி விழுந்த இளைஞரை மீட்பதற்கு வனத்துறை, தீயணைப்புத் துறை ஆகியோரின் உதவியை போலீஸார் நாடியுள்ளனர். எனினும் அந்த இளைஞர் குறித்து அவரது குடும்பத்தார் யாரும் புகார் அளிக்காததால் அவரை மீட்பதில் சிக்கல் உள்ளதாக போலீஸார் தெரிவித்தனர்.
கிரிவலத்தின்போது விபரீதம்
அந்த இளைஞரின் பெயர் ஆறுமுகம் என்றும் திருமணம் ஆகி 8 ஆண்டுகள் ஆகியும் குழந்தையில்லாததால் குழந்தை வரம் வேண்டி கிரிவலம் வந்ததும் தெரியவந்தது. அந்த இளைஞரின் உடலை தீயணைப்புத் துறையினர் தேடி வந்தனர்.
உடல் முழுவதும் காயங்கள்
இந்நிலையில் அந்த இளைஞரின் உடல் இன்று கண்டெடுக்கப்பட்டது. அந்த உடல் முழுவதும் காயங்களாகவும், ஜீன்ஸ் பேன்ட், சர்ட் கிழிந்த நிலையிலும் இருக்கிறது. அவரை மீட்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.