கோகுல்ராஜ் கொலை வழக்கு: யுவராஜை 5 நாள் போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி
நாமக்கல்: தலித் இளைஞர் கோகுல்ராஜ் கொலை வழக்கில் சரணடைந்த யுவராஜை, 5 நாள் காவலில் எடுத்து விசாரிக்க, சிபிசிஐடி போலீசாருக்கு நாமக்கல் குற்றவியல் நீதிமன்றம் அனுமதி வழங்கியது. இதனையடுத்து நாமக்கல் சிபிசிஐடி அலுவலகத்தில் யுவராஜிடம் விசாரணை தொடங்கியுள்ளது.
சேலம் மாவட்டம் ஓமலூரைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரி மாணவர் கோகுல்ராஜ் கடந்த ஜூன் மாதம் படுகொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக 21 பேர் கைது செய்யப்பட்டனர். இதில் 5 பேர் நிபந்தனை ஜாமீனில் விடுதலையாகி தினமும் நாமக்கல்லில் உள்ள சிபிசிஐடி போலீசில் கையெழுத்து போட்டு வருகின்றனர்.
இந்த கொலை வழக்கில் தேடப்பட்ட தீரன் சின்னமலை பேரவைத் தலைவர் யுவராஜ் மாறுவேடத்தில் வந்து நேற்று காலையில் சரண் அடைந்தார். அவரது வக்கீல் பழ.ஆனந்த் சிபிசிஐடி இன்ஸ்பெக்டர் பிருந்தாவிடம் அதற்கான கடிதத்தை கொடுத்தார். பின்னர் யுவராஜ் சிபிசிஐடி அலுவலகத்தில் தரையில் அமர்ந்து இருந்தார். அவரிடம் சிபிசிஐடி எஸ்.பி நாகஜோதி, கூடுதல் சூப்பிரண்டு ஸ்டாலின் ஆகியோர் விசாரணை நடத்தினர்.

தொடர்பு இல்லை
கோகுல்ராஜ் கொலை தொடர்பாக அவரிடம் நூற்றுக்கணக்கான கேள்விகளை போலீசார் கேட்டனர். அதற்கு யுவராஜ் பொறுமையாக பதில் அளித்தார். இரவு 7 மணி வரை அவரிடம் விசாரணை நடந்தது. ஆனால் அவர் தனக்கும், கோகுல்ராஜ் கொலைக்கும் தொடர்பு இல்லை என்று கூறினார்.

மருத்துவ பரிசோதனை
விஷ்ணு பிரியா தற்கொலை குறித்தும் அவரிடம் கேள்விகள் கேட்கப்பட்டன. பின்னர் இரவு 7 மணிக்குப் பிறகு நாமக்கல் அரசு மருத்துவமனையில் இருந்து டாக்டர்கள் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் யுவராஜை மருத்துவ பரிசோதனை செய்து அவர் நல்ல உடல் நிலையில் இருப்பதாக சான்றிதழ் கொடுத்தனர்.

சிறையில் அடைப்பு
இதைத் தொடர்ந்து நாமக்கல் முதன்மை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி மலர்மதி வீட்டில் யுவராஜை ஆஜர்படுத்தினார்கள். அவரை இன்று காலை 11 மணிக்குப்பிறகு மீண்டும் நாமக்கல் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என்றும், அதுவரை தற்காலிகமாக சிறையில் அடைக்கவும் நீதிபதி உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து யுவராஜ் நாமக்கல் சிறையில் அடைக்கப்பட்டார்.

சிபிசிஐடி மனு
யுவராஜ் இன்று மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். இதையொட்டி 300க்கும் மேற்பட்ட போலீசார் நீதிமன்ற வளாகத்தில் குவிக்கப்பட்டு இருந்தனர். வேனில் இருந்து தலையில் துண்டை போர்த்தியபடி யுவராஜ் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டார்.
அவரை 15 நாள் காவலில் வைத்து விசாரிக்க அனுமதிக்க வேண்டும் என்று சிபிசிஐடி சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

5 நாள் போலீஸ் காவல்
ஆனால் இதற்கு யுவராஜ் வக்கீல் கிருஷ்ணன் எதிர்ப்பு தெரிவித்தார். யுவராஜூக்கு இந்த கொலையில் தொடர்பு இல்லை. எனவே அவரை போலீஸ் காவலில் விசாரணைக்கு அனுப்பக்கூடாது என்று வக்கீல் கூறினார். வழக்கு விசாரணையை பிற்பகல் 1 மணிக்கு ஒத்திவைப்பதாக நீதிபதி மலர்மதி கூறினார். இன்று பிற்பகல் விசாரணைக்கு பிறகு, 5 நாள் மட்டுமே காவலில் எடுத்து விசாரிக்க நீதிபதி அனுமதி அளித்தார். இதையடுத்து, யுவராஜை விசாரணைக்கு சிபிசிஐடி காவல்துறையினர் வேனில் அழைத்து சென்றனர்.

அருண் இருப்பது எங்கே?
இந்த கொலை வழக்கில் தேடப்படும் யுவராஜின் கூட்டாளி அருண் இன்னும் 2 நாட்களில் தென் மாவட்டத்தில் ஒரு நீதிமன்றத்தில் சரண் அடைய உள்ளதாக யுவராஜின் நண்பரும், வக்கீலுமான அருள் அரசு கூறிஇருந்தார். அவரை விசாரணைக்காக சிபிசிஐடி போலீசார் அழைத்து சென்றுள்ளனர். அருண் பதுங்கி இருக்கும் இடம் குறித்து அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.












Click it and Unblock the Notifications