யாரு பெரிய ''முட்டை''.. வைகோ Vs தமிழிசை சண்டை
சென்னை: பூஜ்ஜியத்துடன் பூஜ்ஜியம் இணைந்துள்ளதால், எந்த பலனும் கிடைக்காது என, விஜயகாந்த் அணி பற்றி, தமிழக பாஜக தலைவர் தமிழிசை கருத்து தெரிவித்துள்ளார்.
மக்கள் நலக்கூட்டணியுடன் தேமுதிக கூட்டணி அமைத்து சட்டசபைத் தேர்தலை சந்திக்கிறது. இதனால் அதிகம் பாதிக்கப்பட்டது பாஜகதான். அவர்களுக்கு என்று இருந்த ஒரே ஆதரவும் கையை விட்டு போய்விடவே, பாஜக தலைவர்கள் செய்வதறியாக திகைத்து வருகின்றனர்.

சென்னை கமலாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தராஜன், பாஜகவுடன் விஜயகாந்த் கூட்டணி அமைத்திருந்தால், அது தமிழகத்தில் ஒரு மிகப்பெரிய அதிகார பலத்தை ஏற்படுத்தியிருக்கும் என்றார்.
ஜீரோக்களுடன் எண்கள் சேர்ந்தால்தான் அதற்கு மதிப்பு உண்டு. ஜீரோக்களுடன் ஜீரோ சேர்ந்தால் அதற்கு எந்தவித மதிப்புமே இல்லை. இதனை சகோதரர் விஜயகாந்த் உணர்ந்து கொள்வார் என்றும் கூறினார்.
பாஜக தலைமையை ஏற்கும் கட்சிகளுடன் கூட்டணி அமைக்க தயார் என்றும், தேவைப்பட்டால் 234 தொகுதிகளிலும் தனித்துப்போட்டியிடுவோம் என்றும் தமிழிசை குறிப்பிட்டார். மக்கள் நல கூட்டணியுடன் விஜயகாந்த ஏற்படுத்தியுள்ள கூட்டணி, பூஜ்ஜியத்துடன் பூஜ்ஜியம் இணைந்ததை போன்று, ஒரு வெற்றிபெறாத கூட்டணி என்றும் மீண்டும் தமிழிசை விமர்சித்தார்.
பாஜவில் 5 லட்சம் உறுப்பினர்கள் உள்ளனர், எம்பி, நகராட்சி தலைவர்கள் உள்ளனர். நாங்கள் எந்தவகையிலும் குறைந்தவர்கள் அல்ல. 234 தொகுதியிலும் போட்டியிட்டு அவர்களுக்கு சவாலாக இருப்போம். இந்த கூட்டணியினால் பாஜக தொண்டர்களுக்கு எந்த வருத்தமும் இல்லை என்று சற்று வருத்தத்துடனே கூறினார் தமிழிசை சவுந்தரராஜன்.
வைகோ பதிலடி
தமிழிசையின் கருத்துக்கு மக்கள் நலக்கூட்டணியின் ஒருங்கிணைப்பாளர் வைகோ பதிலடி கொடுத்துள்ளார். நாங்கள் பூஜ்யம் தான். ஆனால், பூஜ்யத்தில் இருந்து தான் கணக்கே துவங்குகிறது. எங்களுக்கு ஆதரவாக மக்கள் உள்ளனர். எங்களைப் பூஜ்ஜியம் என்று கூறும் உங்களுக்கு ஒரு சீட் கூட கிடைக்காது என்று ஆவேசமாக கூறியுள்ளார் வைகோ.












Click it and Unblock the Notifications