இந்நேரம் அவர்களே சம்பாதிக்கத் தொடங்கி இருப்பார்கள்.. கும்பகோணம் பள்ளி தீ விபத்தின் 21ம் நினைவு நாள்!
கும்பகோணம்: கும்பகோணம் பள்ளி தீ விபத்தில் சிக்கி 94 குழந்தைகள் உயிரிழந்தனர். இதன் 21 ஆம் ஆண்டு நினைவு தினமான இன்று தீயின் கோரத் தாண்டவத்துக்கு குழந்தைகளைப் பறிகொடுத்த பெற்றோர்கள், பள்ளியின் முன் திரண்டு கதறியபடி குழந்தைகளின் படங்கள் மீது மலர் தூவி அஞ்சலி செலுத்தியது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
21 ஆண்டுகளுக்கு முன் கருகிய அந்தப் பிஞ்சுகள் இன்றைக்கு கல்லூரிப் படிப்பை முடித்து வேலைகளில் இருந்திருப்பார்கள், அவர்களுக்கும் திருமணமாகி குழந்தைகள் இருந்திருக்கலாம், பெற்றோருக்கு சம்பாதித்து சோறு போட்டுக் கொண்டிருந்திருப்பார்கள். இதைச் சொல்லி பெற்றோர்கள் கதறியது அனைவரையும் உலுக்குவதாக உள்ளது.

கும்பகோணம் பள்ளி தீ விபத்து
கும்பகோணம் காசிராமன் தெருவில் செயல்பட்டு வந்த ஸ்ரீ கிருஷ்ணா பள்ளியில் கடந்த 2004 ஆம் ஆண்டு ஜூலை 16ஆம் தேதி ஏற்பட்ட தீ விபத்தில் அங்கு படித்த 94 சின்னஞ்சிறு குழந்தைகள் தீக்கு இரையாகி பரிதாபமாக உயிரிழந்தனர். உலகையே உலுக்கிய இந்தச் சம்பத்தின் 21 ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது.
இதனையொட்டி சம்பவம் நடந்த பள்ளி முன்பு குழந்தைகளை இழந்த பெற்றோர்கள், பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் என பல தரப்பினர் மெழுகுவர்த்தி ஏற்றி வைத்து, குழந்தைகளுக்கு பிரியமான பிஸ்கட், இனிப்பு வகைகள், பழங்கள் மற்றும் குளிர்பானங்கள் வைத்து அவர்களது திருவுருவ படத்திற்கு மலர்கள் தூவி கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
21 ஆம் ஆண்டு நினைவு நாள்
இந்தக் கோரச் சம்பவம் நடந்து 21 ஆண்டுகள் உருண்டோடினாலும், இதன் சோகமும், வடுவும் இன்னும் மாறவில்லை என்பது பெற்றோர்களின் கண்களில் தெரிகிறது. சில பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் புகைப்படத்தைத் தொட்டுப் பார்த்தும், தங்கள் முகத்தைப் புதைத்தும், இந்நேரம் நீ இருந்திருந்தா உனக்கு 27 வயசுக்கு மேல் ஆகியியிருக்கும்." என பிஞ்சுகளை நினைத்து கதறினர்.
பல்வேறு அரசியல் கட்சிகள் சார்பிலும் ஏராளமானோர் ஊர்வலமாக வந்து நெருப்புக்கு இரையான குழந்தைகளின் திருவுருவப்படத்திற்கு முன்பு, மலர் வளையம் வைத்தும், மலர் மாலைகள் அணிவித்தும், மலர்கள் தூவியும் அஞ்சலி செலுத்தினர்.
குழந்தைகளை இழந்து வாடும் பெற்றோர்கள் சம்பவம் நடந்த பள்ளியில் இருந்து மலர் வளையமுடன் ஊர்வலமாக புறப்பட்டு, பாலக்கரை பகுதியில் உள்ள நினைவிடத்தில், மலர் வளையம் வைத்தும் மலர்கள் தூவியும் மரியாதை செலுத்தினர்.












Click it and Unblock the Notifications