தஞ்சாவூரே அசந்துடுச்சு.. மசூதியில் ஒலித்த "வேதம்".. விபூதி எடுத்த முஸ்லிம்.. பூரித்து போன இந்துக்கள்
தஞ்சாவூர்: தஞ்சாவூரே பூரித்து போய் உள்ளது.. மொகரம் பண்டிகையை சிறப்பாக கொண்டாடியுள்ளனர் இந்துக்கள்.. அப்படி என்ன நடந்தது தஞ்சாவூரில்?
இஸ்லாமியர்களின் மொஹரம் பண்டிகை கொண்டாட்டங்கள் களைகட்டி உள்ளன.. வழக்கமாக, மொகரம் பண்டிகை என்றாலே திருப்புவனம் களைகட்டி விடும். அதிலும், திருப்புவனம் அருகே முதுவந்திடல் கிராமத்தில், இந்துக்கள் மிக சிறப்பாக மொகரம் பண்டிகையை இங்கு சிறப்பாக கொண்டாடுவார்கள்.
ரம்ஜான்:ரம்ஜான், மொகரம், தீபாவளி என 2 மத பண்டிகைகளையும், இங்குள்ள முஸ்லிம்களும், இந்துக்களும் கொண்டாடுவது வழக்கம். அறுவடையாகட்டும், திருமணம், தொழில் எதுவானாலும் சரி, பள்ளிவாசலில் வந்து அனுமதி கேட்டபிறகுதான் அங்குள்ள இந்துக்கள் அவைகளை தொடங்குவார்கள்..

பொதுவாக இஸ்லாமியர்கள் வேண்டுதல் முறைகள் கடுமையாக இருக்கும் என்பதால், இந்துக்களும் தங்களை வருத்தி கொண்டு தீ மிதித்து நேர்த்திகடன் செலுத்துவார்கள்.. இதற்காக பள்ளிவாசலில் காப்பு கட்டி ஆண்களும், பெண்களும் ஒரு வாரம் விரதம் இருப்பார்கள்.. வேண்டுதல் நிறைவேறிய பக்தர்கள் விறகு கட்டைகளை தானமாக வழங்குவார்கள்.. பள்ளி வாசல் முன்பாக, மிகப்பெரிய அளவில் குழி வெட்டி, அதிகாலையில் கண்மாயில் நீராடிய பிறகு, ஆண்கள் வரிசையாக 3 முறை தீக்குழி இறங்குவார்கள்.
திருநீறு: பெண்கள் முக்காடிட்டு உட்கார்ந்து கொள்ள, ஆண்கள் தலை மீது தீ கங்குகளை வாரி இறைப்பர்.. இதன் மூலம் பெண்கள் தங்களை நோய் நொடி அண்டாது என்பது இவர்களின் நம்பிக்கை.. தீக்குழி இறங்கியவர்களுக்கு இஸ்லாமியர்கள் திருநீறு பூசி ஆசி வழங்குவார்கள்.. இந்துக்கள் நேர்த்திக்கடன் செலுத்த, முஸ்லிம் மக்கள் விபூதி வழங்கி ஆசீர்வதிக்கும் காட்சி நெகிழ்ச்சியை தந்துவிடும்..
இப்படி, இந்து - முஸ்லிம் மக்களின் ஒற்றுமை காலகாலத்துக்கும் இறுக்கமாகவே பயணித்து வருவதுபோல், தஞ்சாவூரிலும் இப்படி நெகிழ்ச்சி வருடா வருடம் நடந்துகொண்டுதான் இருக்கிறது.
கிராம மக்கள்: தஞ்சாவூர் அருகே உள்ளது காசவளநாடு புதூர் என்ற கிராமம்... இந்த கிராமத்தில் 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இதில் பெரும்பாலானோர் இந்துக்கள் ஆவர்... இவர்கள் ஒவ்வொரு வருடமும், இஸ்லாமியர்களின் பண்டிகையான மொகரம் பண்டிகையை சிறப்பாக கொண்டாடுவார்கள்.. இந்த கிராமத்தில் உள்ள யாருமே, சாதி மத பேதம் இல்லாமல் ஒற்றுமையாக வாழ்ந்து வருகின்றனர்.
அதுவும், மொகரம் பண்டிகை வந்துவிட்டால், தங்கள் வீட்டு பண்டிகையாக கொண்டாட ஆரம்பித்துவிடுவார்கள் இந்துக்கள்.. 10 நாட்களுக்கு முன்பே, மொகரம் பண்டிகை இந்துக்கள் வீடுகளில் களை கட்டிவிடும்.. இந்த வருடமும் அப்படித்தான், தங்களுடைய வேண்டுதல் நிறைவேற்ற, விரதமிருந்து பயபக்தியோடு பண்டிகைக்கு தயாராகி வந்தனர். அதன்படி இன்று இஸ்லாமியர்களின் பஞ்சா எனப்படும் கரகத்தை கிராமத்தில் உள்ள இந்துக்களின் வீடுகளுக்கு தாரை தப்பட்டையுடன் கொண்டு சென்றனர்.
வேண்டுதல்கள்: அப்போது ஒவ்வொரு வீடுகளிலும் உள்ள மக்கள் தங்களது வேண்டுதல் நிறைவேற, அந்த கரகத்திற்கு தண்ணீர் ஊற்றி எலுமிச்சை பழம் மாலை, பட்டுத் துண்டை சாத்தி வேண்டிக்கொண்டனர்.

பிறகு அங்குள்ள அல்லா கோவிலுக்கு கொண்டு வந்து, பாத்தியா ஓதி தங்களது உறவினர்கள், பொதுமக்களுக்கு வழங்கினார்கள்.. இதையடுத்து அந்த பஞ்சா கரகம் அங்குள்ள பூக்குழியில் இறங்கியவுடன், அல்லா சாமியை சுமந்து வந்தவர்கள் முதலில் தீ மிதித்து வழிபாடு செய்தனர்.. தொடர்ந்து அனைவருக்கும் திருநீறு, எலுமிச்சை பழம் பிரசாதமாக தரப்பட்டது.. இதனால், அந்த கிராமமே விழாக்கோலம் பூண்டுள்ளது.
ஏற்கனவே இப்படித்தான் சமீபத்தில் கேரளாவில் உள்ள தர்கா ஒன்றில், இந்து - முஸ்லிம் தம்பதிக்கு, திருமணம் நடத்தி வைத்த நிகழ்வு, மொத்த பேரையும் சிலிர்க்க வைத்துவிட்டு போனது.
இதுதான் இந்தியா: எவ்வளவுதான் இடர்பாடுகளையும், இன, மத ரீதியான பிளவுகளையும் ஒரு சில குரூரர்கள் கட்டவிழ்த்து விட்டாலும்.. ஈரம் கசியும் மனசு இங்கு இருக்கும்வரை.. சகிப்புத்தன்மையையும், மத நல்லிணக்கத்தையும், நம்மிடமிருந்து யாராலும் ஒருபோதும் பிரித்து விட முடியாது என்பதைதான் இந்த பள்ளிவாசல் - இந்துமத உணர்வுகள் நாட்டுக்கு பறைசாற்றி கொண்டிருக்கின்றன... தொடர்ந்து தழைத்தோங்கட்டும் மனித நேயம்... அன்புக்கும் உண்டோ அடைக்குந்தாழ்.. !!












Click it and Unblock the Notifications