ஒரத்தநாடு பேரூராட்சியை கைப்பற்றிய அமமுக! சமுதாய பலத்தால் புதிய தெம்பு பெறும் டிடிவி தினகரன்!
தஞ்சாவூர்: தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு பேரூராட்சியை கைப்பற்றி அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் தனது முதல் வெற்றியை பலமாக பதிவு செய்திருக்கிறது.
ஒரத்தநாடு பேரூராட்சியில் உள்ள 15 வார்டுகளில் 9 வார்டுகளில் தனிப்பெரும்பான்மையுடன் அமமுக வெற்றிபெற்றிருக்கிறது.
அமமுகவின் இந்த வெற்றிக்கு சமுதாய ரீதியிலான வாக்குகளே காரணம் எனத் தெரிவிக்கப்படுகிறது.

டெல்டா மாவட்டங்கள்
தமிழக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் சுடச்சுட வெளிவந்துகொண்டிருக்கும் சூழலில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் பரவலாக தனது வெற்றியை பதிவு செய்து வருகிறது. மாநகராட்சிகளில் நண்பகல் 12 மணி நிலவரப்படி ஒரு இடம் கூட கிடைக்காவிட்டாலும் கூட, நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் அமமுக வேட்பாளர்கள் ஒரு சில இடங்களில் வெற்றிபெற்றிருக்கின்றனர். அந்த வகையில் தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு பேரூராட்சியில் 9 வார்டுகளில் வெற்றுபெற்றுள்ளதன் மூலம் அந்தப் பேரூராட்சியை அமமுக கைப்பற்றியுள்ளது.

திமுக அதிர்ச்சி
இது ஆளுங்கட்சியான திமுகவுக்கும், எதிர்க்கட்சியான அதிமுகவுக்கும் மிகுந்த அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது. நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் ஒரத்தநாட்டில் தனது முதல் வெற்றியை பலமாக பதிவு செய்துள்ள அமமுக, நகராட்சிகளிலும் கணிசமான இடங்களில் வெற்றியை எதிர்பார்த்து வருகிறது. முடிவுகள் இன்னும் முழுமையாக வெளியிடப்படாததால் பிற்பகல் 3 மணிக்கு மேல் அமமுகவுக்கு கிடைத்துள்ள கவுன்சிலர்களின் எண்ணிக்கை ஓரளவு முழுமையாக தெரியவரும்.

சமுதாய பலம்
டிடிவி தினகரன் குடும்ப உறுப்பினர்கள் வழி உறவுகளும், சமுதாய ரீதியிலான வாக்குகளுமே ஒரத்தநாட்டில் அமமுகவை கை தூக்கிவிட்டிருக்கக் கூடும் எனத் தெரிவிக்கப்படுகிறது. களப்பணியை பொறுத்தவரை திமுக, அதிமுக வேட்பாளர்களை காட்டிலும் அதிக முனைப்போடு அமமுக வேட்பாளர்கள் ஆற்றியதும் ஒரத்தநாடு வெற்றிக்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.

தினகரன் ரியாக்ஷன்
ஒரத்தநாடு பேரூராட்சியை அமமுக கைப்பற்றிய தகவல் அறிந்ததும் தினகரன் மிகுந்த மகிழ்ச்சி அடைந்திருக்கிறார். பிரச்சாரத்துக்கு தாம் செல்லாத நிலையில் குக்கர் சின்னத்தை மட்டும் முன்னிறுத்தி சாமர்த்தியமாக பரப்புரை செய்து வெற்றிபெற்ற அமமுக வேட்பாளர்களை நேரில் அழைத்து பாராட்டுவார் எனத் தெரிகிறது.












Click it and Unblock the Notifications