தஞ்சையில் எல் முருகன் முன்னிலையில் பாஜக நிர்வாகிகள் மோதல்.. கடும் வாக்குவாதம்.. என்ன நடந்தது?
தஞ்சாவூர்: தஞ்சையில் உள்ள தனியார் மண்டபத்தில் தஞ்சை தெற்கு மாவட்ட பாஜக நிர்வாகிகள் அறிவிப்புக் கூட்டம் மத்திய அமைச்சர் எல் முருகன் முன்னிலையில் இன்று நடந்தது. இந்தக் கூட்டத்தில் தஞ்சை மாவட்ட பொறுப்பாளர்கள் வரிசையாக வாசிக்கப்பட்டது அப்போது தஞ்சை தெற்கு மாவட்ட தலைவராக ஜெய் சதீஷ் அறிவிக்கப்பட்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர் தரப்பினர் அமைச்சர் எல் முருகன் முன்னிலையில் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
தஞ்சை தெற்கு மாவட்ட பாஜக தலைவர் அறிவிப்பு நிகழ்ச்சி தஞ்சையில் உள்ள தனியார் மண்டபத்தில் இன்று நடந்தது. மத்திய அமைச்சர் எல் முருகன் தலைமையில் இன்று நடந்தது. முன்னதாக தஞ்சை தெற்கு மாவட்ட பாஜக தலைவருக்கான போட்டியில், தஞ்சையைச் சேர்ந்த ஜெய் சதீஷ், ஒரத்தநாடு கர்ணன் உஞ்சியவிடுதி துரை, கண்ணுகுடி துரைமுருகன் ஆகியோர் போட்டியில் இருந்தனர்.

இந்நிலையில் தஞ்சை பாஜக தெற்கு மாவட்ட தலைவராக ஜெய் சதீஷ் என்பவரை மீண்டும் தேர்ந்தெடுக்கப்படுவதாக தேர்தல் பொறுப்பாளர்கள் அறிவித்தனர். ஏற்கனவே தஞ்சை மாவட்ட தலைவராக இருந்த ஜெய் சதீஷை எப்படி தேர்வு செய்யலாம்.. பட்டியலில் இல்லாதவர் பெயரை எப்படி அறிவிக்கலாம் என்று எதிர் தரப்பினர் தெரிவித்தனர். முறையாக தேர்தல் நடத்தாமல் எந்த அடிப்படையில் தலைவரை தேர்ந்தெடுக்க முடியும். இந்த தலைவர் தேர்தலை ஏற்றுக் கொள்ள மாட்டோம் என்று கூறினார்கள். மத்திய அமைச்சர் எல் முருகன் முன்னிலையிலேயே பாஜக நிர்வாகிகள் காரசாரமாக வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அங்கு சலசலப்பு ஏற்பட்டது.
இதையடுத்து கட்சியின் மூத்த நிர்வாகிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டவர்களை மற்ற நிர்வாகிகள் அமைதியாக இருக்கும் படி தெரிவித்து அமர வைத்தார்கள். இதன் காரணமாக சுமார் ஐந்து நிமிடத்திற்கு மேலாக பரபரப்பான நிலை இருந்தது. பு அனைவரையும் சமாதானப்படுத்தி மீண்டும் நிகழ்ச்சி நடந்தது. இதனிடையே பாஜக நிர்வாகிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வருகிறது.












Click it and Unblock the Notifications