"அட கொலைகார பாவிகளா".. அரசு ஊழியர்கள், ஆசிரியர்களை விளாசிய திண்டுக்கல் சீனிவாசன் - பரபரப்பு
தஞ்சாவூர்: ‛‛தமிழ்நாடு முழுவதும் ஏறத்தாழ அரசு அதிகாரிகள், ஆசிரியர்கள் அவர்களின் குடும்பத்தினருக்கு என்று மொத்தம் 80 லட்சம் ஓட்டுகள் உள்ளது. திண்டுக்கல் சட்டசபை தேர்தலில் எனக்கு ஒரு தபால் ஓட்டு கிடைக்கவில்லை . தபால் ஓட்டில் எத்தனை ஓட்டு தான்யா வந்துள்ளது என்று கேட்டேன். ஒரு ஓட்டு கூட எனக்கு வரவில்லை என்று கூறினார்கள். எவ்வளவு தெளிவா இருக்காங்க பாருங்க.. அட கொலைகார பாவிகளா'' என்று அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசியுள்ளார்.
தமிழகத்தில் 2026 ல் சட்டசபை தேர்தல் என்பது நடைபெற உள்ளது. இந்த தேர்தலுக்கான பணியை அதிமுக இப்போது இருந்தே தொடங்கி விட்டது. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவில் மாவட்ட வாரியாக களஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்த களஆய்வுக்கு என்று தனியே குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவில் முன்னாள் அமைச்சர்கள் எஸ்பி வேலுமணி, திண்டுக்கல் சீனிவாசன், தங்கமணி, வளர்மதி உள்பட 10 பேர் இடம்பெற்றுள்ளனர். இந்த குழுவினர் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட மாவட்டங்களில் களஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் சட்டசபை தேர்தலை எப்படி எதிர்கொள்ள வேண்டும். தேர்தல் பணிகளை மேற்கொள்வது எப்படி ? என்பது தொடர்பாக இந்த குழுவினர் ஆலோசனைகளை வழங்கி வருகின்றனர். அந்த வகையில் தஞ்சாவூரில் இன்று அதிமுக களஆய்வு என்பது நடந்தது. அப்போது அதிமுக நிர்வாகிகள் மத்தியில் திண்டுக்கல் சீனிவாசன் பேசினார். அப்போது அவர் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் தபால் ஓட்டுகள் கிடைப்பது இல்லை என்று விமர்சனம் செய்தார்.
இதுதொடர்பாக திண்டுக்கல் சீனிவாசன் கூறியதாவது; நமக்கு எதிராக இருந்தவர்கள் அரசு அதிகாரிகளும், ஆசிரிய பெருமக்களும். அது தெரியுமா? தெரியாதா?. நமக்கு எதிராக தானே ஓட்டுப்போட்டார்கள். எனக்கு என்ன? நான் இப்போது திண்டுக்கல் தொகுதி எம்எல்ஏ. 22 ஆயிரம் ஓட்டில் நான் வெற்றி பெற்றதாக கூறினார்கள். சரியென்று கையெழுத்துப்போட நான் உட்கார்ந்து இருந்தேன். கலெக்டர் எல்லோரும் உட்கார்ந்து இருந்தோம்.
அப்போது துணை தாசில்தார் ஓடிவந்தாங்க. அய்யா.. அய்யா தபால் ஓட்டு எண்ணி கொண்டு இருக்கிறோம். கொஞ்சம் இருங்க.. கையெழுத்து போடாதீர்கள் என்று சொன்னார். சரி வரட்டும். ஒரு ஆயிரம், இரண்டாயிரம் ஓட்டு கிடைக்கும் என்று உட்கார்ந்து இருந்தேன். ஆனால் வெற்றி வித்தியாசத்தில் 5 ஆயிரம் ஓட்டு எனக்கு குறைந்து போய்விட்டதாக கூறினார்கள்.
என்னய்யா.. என்று கேட்டேன். அதற்கு எல்லா தபால் ஓட்டுகளும் திமுகவுக்கு போய்விட்டது. இதனால் 17,500 ஓட்டில் நீங்கள் ஜெயித்து உள்ளீர்கள் என்றார்கள். அதையாவது கொடுங்களேன்யப்பா.. நான் ஜெயிச்சிட்டேல்ல என்று கூறி தாய்மார்கள் பிரசவத்தின்போது குழந்தையை பார்த்து மகிழ்ச்சியடைவது மகிழ்ச்சியடைந்தேன்.
இதை எதுக்கு சொல்கிறேன் என்றால் என் தொகுதியில் மட்டும் 5 ஆயிரம் ஓட்டு.. தபால் ஓட்டில் எத்தனை ஓட்டு தான்யா எங்களுக்கு வந்துள்ளது என்று கேட்டேன். ஒரு ஓட்டு கூட எனக்கு வரவில்லை என்று கூறினார்கள். எவ்வளவு தெளிவா இருக்காங்க பாருங்க.. அட கொலைகார பாவிகளா என்று சொல்ல வேண்டிய சூழ்நிலை. தமிழ்நாடு முழுவதும் ஏறத்தாழ அரசு அதிகாரிகள், ஆசிரியர்கள் அவர்களின் குடும்பம் என்று மொத்தம் 80 லட்சம் ஓட்டுகள் தோழர்களே. இதனால் இது விளையாட்டு கிடையாது. அந்த ஓட்டுகளால் தான் நாம் தோற்றோம். இதனால் அவர்களின் ஓட்டுகளை பெற முயற்சிக்க வேண்டும்'' என்றார்.












Click it and Unblock the Notifications