ஹஜ் விஷயத்துல அரசியல் பண்ணாதீங்க! இந்த ஆண்டு ஒரு லட்சம் பேர் ஹஜ் பயணம் - ஹஜ் கமிட்டி தலைவர்
தஞ்சாவூர்: இந்தியாவிலிருந்து ஓரு லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் இந்த ஆண்டு ஹஜ் பயணம் மேற்கொள்வார்கள் எனவும் ஹஜ் விஷயத்தில் அரசியல் வேண்டாம் என்றும் அகில இந்திய ஹஜ் கமிட்டியின் தலைவர் அபுபக்கர் தெரிவித்துள்ளார்.
கும்பகோணம் மேலக்காவேரி பள்ளிவாசலில் நடைபெற்ற ஜக்காத் எனப்படும் ஏழை எளியோருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பங்கேற்ற அகில இந்திய ஹஜ் கமிட்டியின் தலைவர் அபூபக்கர், நாடாளுமன்ற உறுப்பினர் ராமலிங்கம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதில், அபுபக்கர் தனது சொந்த நிதியில் மேலக்காவேரி மக்கள் அவசர தேவைக்காக பயன்படுத்திக்கொள்ளும் வகையில் ஒரு காரையும் ரம்ஜான் பண்டிகையை சிறப்பாக கொண்டாடும் வகையில் 500க்கும் மேற்பட்ட ஏழை எளிய மக்களுக்கு புடவை கைலி ரொக்கப்பணம் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அபூபக்கர், "இந்த ஆண்டு ஹஜ் பயணம் நிச்சயமாக நடைபெறும். அதில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் பயணம் செய்வார்கள். எந்தெந்த மாநிலத்திற்கு எவ்வளவு என்பது இன்னும் இரு தினங்களில் டெல்லியில் நடைபெறும் ஹஜ் கமிட்டி கூட்டத்தில் முடிவு செய்யப்படும். தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் சென்னையிலிருந்து ஹஜ் பயணம் செய்வதற்கு உத்தரவு கிடைக்கும்.
எவ்வளவு பேர் விண்ணப்பிக்கிறார்களோ அனைவரும் ஹஜ் பயணம் செய்வதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும்." என்றார். ஹஜ் பயணத்தில் மத்திய அரசு மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடத்துகிறதா என்ற எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், "நிச்சயமாக இல்லை. ஹஜ் மானிய நிறுத்தப்பட்டதற்கு உச்சநீதிமன்றமே காரணம். ஹஜ் பயண விஷயத்தில் அரசியல் வேண்டாம்." என கேட்டுக் கொண்டார்.