3 நாளாச்சு.. குடிக்க தண்ணீர் இல்லை.. சாப்பாடும் இல்லை.. குமுறும் பேராவூரணி மக்கள்
தண்ணீர், சாப்பாடு இன்றி தவிப்பதாக பேராவூரணி மக்கள் தெரிவித்துள்ளனர்.
பேராவூரணி: புயல் பாதித்து 3 நாள் ஆகியும் எங்களுக்கு குடிக்க தண்ணீரும், சாப்பாடும் இல்லை என்று பேராவூரணி மக்கள் புலம்புகிறார்கள்.
கஜா புயல் தாக்கத்திற்கு தஞ்சையும் விதிவிலக்கல்ல. குறிப்பாக பேராவூரணி பகுதியானது கஜா புயலால் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளது. தங்கள் பகுதிகளை அதிகாரிகள் யாருமே இதுவரை வந்து பார்வையிடவில்லை என்று அப்பகுதி மக்கள் குறைபட்டு சொல்கிறார்கள்.
3 நாளாக சாப்பாடு இல்லாமல் பசி பட்டினியால் குழந்தைகளுடன் தவித்து வருகிறோம் என்றும் மாவட்ட நிர்வாகத்தின் எந்த உதவியும் கிடைக்காமல் மின்சாரமும் இல்லாமல் கடும் அவஸ்தையில் உள்ளதாகவும் தெரிவித்தனர்.
இதுகுறித்து பேராவூரணியின் தற்போதைய அவல நிலையினை ஒருசிலர் ட்விட்டர் பதிவில் வெளியிட்டு வருகின்றனர். அந்த பதிவுகள் அனைத்தும் மக்களை கலங்க செய்வதாக உள்ளது.
[நள்ளிரவு.. சுழற்றியடித்த கஜா.. மிரண்டு போன சிறுமி.. உயிரை பறித்த தென்னை மரம்.. ஒரு பரிதாப மரணம்!]
|
தண்ணீர் இல்லை
பேராவூரணியில் போர் தண்ணீருக்காக 2 கிலோமீட்டர் தூரத்துக்கு போகிறோம் என்றும், முன்னெல்லாம் மாட்டு வண்டியில் தண்ணீருக்கு அலைந்தோம்.... இப்போது ஸ்கூட்டியில் அலைகிறோம்... அவ்வளவுதானே தவிர பஞ்சம் இன்னும் தீரவில்லை என்று ஒருவர் பதிவிட்டுள்ளார்.
|
ஆடு மாடுகள் பலி
அதேபோல ஆடு, மாடுகளையும் கஜா விட்டு வைக்கவில்லை போல தெரிகிறது. மாடு ஒன்று உயிரிழந்துவிட, ஒத்தை ஆளே பள்ளம் தோண்டி அந்த மாட்டை புதைக்கும் அவலமும் வெளிப்பட்டு உள்ளது.
|
எங்களுக்கு உதவிக்கு ஆள் இல்லையே
உலகத்துக்கே சாப்பாடு போட்ட ஊரில் தண்ணிக்கும் சாப்பாட்டுக்கும் பஞ்சமாக உள்ளது... விழுந்து கிடக்கும் மரங்களை அகற்ற ஆள் இல்லை.. கரண்ட் இல்லை... பஞ்சாயத்து அமைப்புகளும் இல்லை என்று மற்றொருவர் பதிவிட்டுள்ளார்.
|
யாரும் நடவடிக்கை எடுக்கவில்லை
பேராவூரணியை சுற்றியுள்ள பகுதியில் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளதோடு, அரசின் அலட்சியப்போக்கால் இதுவரை எந்த அதிகாரிகளும் நடவடிக்கை எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டும் கூறப்பட்டுள்ளது.
பேராவூரணி மக்களுக்கு உடனடி தேவை குடிநீரும்... சாப்பாடும்.. கரண்ட்டும் என்பதுதான் உடனடி தேவையாக உள்ளது.