வைத்திலிங்கம் மச்சான் வீட்டு பூட்டை உடைத்த ED அதிகாரிகள்.. ஆள் இல்லாத நிலையில் வீட்டை திறந்து சோதனை!
தஞ்சாவூர்: தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள அதிமுக முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கத்தின் மைத்துனர் பன்னீர்செல்வம் வீட்டில் யாரும் இல்லாததால், வீட்டின் பூட்டை உடைத்து அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஒரத்தநாடு தொகுதியின் எம்.எல்.ஏவாக இருந்து வருகிறார் அதிமுக முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம். ஜெயலலிதா தலைமையிலான அதிமுக ஆட்சி காலத்தில் 2011 - 2016 வரை வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சராக இருந்தார் வைத்திலிங்கம். அப்போது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வைத்திலிங்கம் மீது லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

தனியார் நிறுவனம் குடியிருப்புகள் கட்ட அனுமதி வழங்க 27.90 கோடி ரூபாய் லஞ்சம் பெற்றதாக அதிமுக முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் மீது அறப்போர் இயக்கம் சார்பில் கொடுக்கப்பட்ட புகாரின் பேரில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர்.
இந்தநிலையில் அந்த விவகாரத்தில் சட்டவிரோத பணப் பரிவர்த்தனை நடந்தது தொடர்பாக அமலாக்கத்துறை அதிகாரிகள் முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் தொடர்புடைய இடங்களில் இன்று அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.
தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே தெலுங்கன் குடிக்காட்டில் உள்ள அதிமுக முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் வீடு உள்ளிட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று திடீர் சோதனை நடத்தி வருகின்றனர். சென்னையில் எம்எல்ஏ விடுதியில் உள்ள வைத்திலிங்கம் அறையிலும் அமலாகத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும், வைத்திலிங்கம் மகன் வீட்டிலும் அமலாக்கத் துறையினர் தற்போது சோதனை மேற்கொண்டு வருகின்றனர். சென்னை கோடம்பாக்கத்தில் நிதி நிறுவன ஊழியர் கோடீஸ்வரி என்பவர் வீட்டிலும், திருவேற்காட்டில் உள்ள கட்டுமான நிறுவன அலுவலகத்திலும், ரவிக்குமார் என்பவர் வீட்டிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும், ஒரத்தநாடு அருகே பேய்கரும்பன் கோட்டையில் உள்ள முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கத்தின் மைத்துனர் பன்னீர்செல்வம் வீட்டிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
பன்னீர்செல்வம் வீட்டில் யாரும் இல்லாத நிலையில், வீட்டின் பூட்டை, உறவினர்கள் முன்னிலையில் சுத்தியல் கொண்டு உடைத்து அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications