தஞ்சாவூர் மாவட்டம் முழுவதும் 12ஆம் தேதி விடுமுறை.. கும்பகோணம் மகாமக குளத்தில் மாசி மக தீர்த்தவாரி!
தஞ்சாவூர்: கும்பகோணம் மகாமக குளத்தில் நடைபெற உள்ள மாசி மக தீர்த்தவாரியை முன்னிட்டு வரும் 12 ஆம் தேதி (புதன் கிழமை) தஞ்சாவூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் அமைந்துள்ள மகாமகக் குளத்தின் வடகரையில், புகழ்பெற்ற காசி விசாலாட்சி அம்பாள் உடனுறை காசி விஸ்வநாதர் கோவில் அமைந்துள்ளது. ஆண்டுதோறும் மாசி மக பெருவிழா இங்கு சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இந்த மாசி மகப் பெருவிழா 10 நாட்கள் நடப்பது வழக்கம். இந்த ஆண்டு விழா கோலாகலமாக கொடியேற்றத்துடன் தொடங்கியுள்ளது.

விழாவின் முக்கிய நிகழ்வுகளாக, இன்று வெண்ணைத்தாழி பல்லக்கில் சுவாமி வீதியுலா, நாளை 11 ஆம் தேதி தேரோட்டம், 12 ஆம் தேதி மகாமக குளத்தில் மாசிமக தீர்த்தவாரி திருவிழா சிறப்பாக நடைபெற உள்ளது. இதற்கான அனைத்தும் ஏற்பாடுகளையும் கோவில் நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது.
கும்பகோணம் மகாமக குளத்தில் நடைபெற உள்ள மாசி மக தீர்த்தவாரியை முன்னிட்டு வரும் புதன் கிழமை தஞ்சாவூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் உத்தரவு பிறப்பித்தார். இதனை ஈடுகட்ட வரும் மார்ச் 29 ஆம் தேதி சனிக்கிழமை அன்று அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்கள் செயல்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதே போல் நாளை (செவ்வாய்க்கிழமை) 11 ஆம் தேதி மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறையானது அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பள்ளி கல்லூரி மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அதேபோல் அரசு அலுவலகங்களில் முக்கியமான துறைகள் அனைத்தும் குறைந்த பணியாளர்களுடன் வழக்கம் போல் இயங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications