மு.க.ஸ்டாலின் மரத்தடி ஜோசியர் போல ஆகிவிட்டார்.. அமைச்சர் துரைக்கண்ணு விமர்சனம்
மு.க.ஸ்டாலின் மரத்தடி ஜோசியர் போல ஆகிவிட்டார் என்று அமைச்சர் துரைக்கண்ணு விமர்சித்துள்ளார்.
கும்பகோணம்: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், மக்களை கவர சைக்கிள் ஓட்டிப்பார்த்தார்.. டீக்கடையில் டீ குடித்தார்.. எதுவும் பலனளிக்காத நிலையில், இப்போது மரத்தடி ஜோசியர் போல ஆகிவிட்டார் என்று அமைச்சர் துரைக்கண்ணு விமர்சித்துள்ளார்.
எம்ஜிஆர் பிறந்த நாளையொட்டி கும்பகோணம் அருகே உள்ள நாச்சியார்கோவில் கடைவீதியில் அதிமுக பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில், தமிழக வேளாண்மைத்துறை அமைச்சர் துரைக்கண்ணு கலந்து கொண்டு சிறப்பித்தார். அப்போது அவர் பேசியதாவது:
இன்னைக்கு ஆட்சி கலைந்துவிடும், நாளைக்கு நாங்கள்தான் ஆட்சிக்கு வருவோம் என்று மரத்தடி ஜோசியர் போல அடிக்கடி ஆரூடம் சொல்லி வருகிறார். மக்களை கவர, சைக்கிளில் பயணம் செய்து பார்த்தார், டீக்கடையில் உட்கார்ந்து டீ குடித்தார்.. இதில் எதுவுமே பலன் அளிக்கவில்லை என்றதும், இப்போது மரத்தடி ஜோசியர் ஆகிவிட்டார். ஆனால் அவர் சொல்வதெல்லாம் பலிக்காது. ஏனெனில் அவர் மீது நிறைய வழக்குகள் உள்ளன. அதனால் திகார் ஜெயிலுக்கு போவது உறுதி.
அதேபோலதான் டிடிவி தினகரனும். அவர் செய்த துரோகம் காரணமாகவே சசிகலா ஜெயிலில் உள்ளார். அவர் பேச்சை கேட்ட மற்ற 18 எம்எல்ஏக்களும் பதவியை இழந்து நிற்கின்றனர். அதனால் குக்கரால் இனி விசில் அடிக்கவே முடியாது. எத்தனை ஸ்டாலின் வந்தாலும் சரி, எத்தனை தினகரன் வந்தாலும் சரி அதிமுகவை அசைக்கவே முடியாது' என்றார்.