ஐஏஎஸ் அதிகாரிகள் முதல் அமைச்சர்கள் வரை.. 8 மணி நேரம் லாக்தான்! அச்சுறுத்தும் நீடாமங்கலம் ரயில் கேட்!
தஞ்சை: அமைச்சர்கள், ஐஏஎஸ் அதிகாரிகள் என யாராக இருந்தாலும் நீடாமங்கலம் ரயில்வே கேட்டில் 8 மணி நேரம் காத்திருக்க வேண்டிய சூழல் நிலவி வந்த நிலையில் தற்போது அதற்கு ஒரு விடிவுக்காலம் பிறந்துவிட்டது.
திருவாரூர் , தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலையில் நீடாமங்கலம் பகுதியில் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக ரயில்வே கேட் இயங்கி வருகிறது. காரைக்காலில் இருந்து எர்ணாகுளம் செல்லும் விரைவு ரயில், மன்னார்குடியில் இருந்து செல்லும் விரைவு ரயில், காரைக்கால் மற்றும் வேளாங்கண்ணியிலிருந்து திருச்சி செல்லும் பயணிகள் ரயில் என 28 சரக்கு ரயில் உள்பட 42 ரயில்கள் இந்த கேட் வழியாக கடந்து செல்கின்றன.

இதனால் நாள் ஒன்றுக்கு 8 மணி நேரத்திற்கு மேலாக இந்த ரயில்வே கேட்டில் பயணிகள் காத்திருக்க வேண்டிய சூழல் இருந்தது.
இந்த ரயில்வே கேட் வழியாக நாகை, வேளாங்கண்ணி, காரைக்கால் ஆகிய பகுதிகளுக்கும் திருத்துறைப்பூண்டி, பட்டுக்கோட்டை, முத்துப்பேட்டை, மன்னார்குடி ஆகிய பகுதிகளுக்கும் மன்னார்குடியில் இருந்து கும்பகோணம் மற்றும் அதன்வழியாக சென்னைக்கும் செல்லும் வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கும் நிலை இருந்தது.
இதனால் நீடாமங்கலம் பகுதி மக்கள் மட்டுமின்றி இந்த ஊரைக் கடந்து செல்லும் அனைத்து வாகன ஓட்டிகளும் அவதியடைந்து வந்தனர். இதனால் இந்த பகுதியில் ரயில்வே மேம்பாலம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு 170 கோடி ரூபாயில் மேம்பாலம் கட்ட டெண்டர் அறிவிப்பு வெளியாகியிருந்தது.
இதை நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் எ.வ.வேலு, தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, திருவாரூர் சட்டசபை உறுப்பினர் பூண்டி கலைவாணன் ஆகியோர் ரயில்வே மேம்பாலத்திற்காக நேற்றைய தினம் அடிக்கல் நாட்டினர். இந்த நிதி சிஆர்ஐஎப் சேது பந்தன் திட்டத்தின் கீழ் பெறப்பட்டது.
இந்த பாலமானது 3 வளைவுகளுடன் ரவுண்டானா போல் அமைகிறது. இதன் மொத்த நீளம் 1437 கி.மீ, அகலம் 12 மீ, ஆகும். முதற்கட்டமாக சுற்றுச்சாலையுடன் கூடிய 1110 மீ நீளம் உள்ள பாலப் பணிகள் 80 கோடி ரூபாய் செலவில் கட்டப்படும். இரண்டாம் கட்ட பணிகளாக இரு ரயில்வே பாலம் உள்பட மொத்தம் 327 மீ. நீளமுள்ள பாலப்பணி, மற்றும் இரு சுரங்க பாலப்பணிகள் 90 கோடி ரூபாய் செலவில் செயல்படுத்தப்படுகிறது.
விரைவில் இந்த பணிகளுக்கும் ஒப்பந்தம் கோரப்பட்டு பணிகள் தொடங்கும். அனைத்து பணிகளையும் ஜனவரி 2026 ஆம் ஆண்டுக்குள் கட்டி முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில் நீடாமங்கலத்தில் ரயில்வே கேட் பிரச்சினை என்பது பெரிய பிரச்சினையாக இருந்து வருகிறது.
எவ்வளவு பெரிய விஐிபி வந்தாலும் சரி, ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள், அமைச்சர்கள் என யாராக இருந்தாலும் சரி இந்த கேட்டை கடக்க மணிக்கணக்கில் காத்திருக்கத்தான் வேண்டும். இந்த கேட் பிரச்சினை திருப்பதிக்கு லட்டு, திண்டுக்கல்லுக்கு பூட்டு அது போல் நீடாமங்கலத்திற்கு ஒரு ரயில்வே கேட் என்றே மாறிவிட்டது.
உடல்நலம் சரியில்லாமல் மருத்துவமனைக்கு செல்ல வேண்டும் என்றாலும் கூட இந்த ரயில்வே கேட்டில் மணிக்கணக்கில் காத்திருக்க வேண்டிய நிலையே இருந்தது. இதனால் ஊசலாடும் உயிருடன் யார் இந்த வழியாக சென்றாலும் காத்திருப்பு நேரம் அதிகரிப்பால் அவர்கள் இறந்த சம்பவங்களும் நடந்துள்ளன.
அது போல் சிலர் காத்திருக்காமல் அந்த கம்பிகளுக்கு இடையே டூவீலரை எடுத்துச் செல்வர். அப்போதும் சிலரது உயிர்கள் ரயிலில் அடிப்பட்டும் போயிருக்கின்றன. மும்மதங்களின் வழிபாட்டுத் தலங்களும் இங்கு உள்ளதால் நிறைய பயணிகள் வருகிறார்கள். அவர்கள் எல்லாம் இந்த கேட் பிரச்சினையால் அவதிப்படுவர். இவ்வாறு மக்கள் வேதனையுடன் தெரிவித்துள்ளனர். 30 ஆண்டு கால பிரச்சினை இன்னும் இரு ஆண்டுகளில் விடிவுகாலம் பிறக்க போகிறது.












Click it and Unblock the Notifications