எங்க ஊர்ல வந்து, எங்களை கூப்பிடாம விழா நடத்துவீங்களா? மேடையேறி செம டோஸ் விட்ட பழனிமாணிக்கம்
தஞ்சை: மத்திய அரசு விழாவில் தமிழகத்தின் அமைச்சர்கள், எம்பிக்களை ஏன் அழைக்கவில்லை என தஞ்சை திமுக எம்பி பழனிமாணிக்கம் நிகழ்ச்சி மேடை ஏறி ஆவேசமாக கேள்வி எழுப்பிய சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.
Recommended Video
இந்தியாவிலேயே முதன்முறையாக தஞ்சாவூரில் உணவு அருங்காட்சியகம் திறப்பு விழா இந்திய உணவு கழகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டு நடைபெற்றது.
திமுகவுக்கு தாவிய 3 அதிமுக ஒன்றியச் சேர்மன்கள்; கோட்டைவிட்ட தங்கமணி; பின்னணி என்ன?
இந்த விழாவிற்கு தமிழக அமைச்சர்கள், எம்பி, எம்எல்ஏக்கள், ஆட்சியர் உள்பட யாருக்கும் அழைப்பு விடுக்கப்படவில்லை.
பழனிமாணிக்கம் சென்றார்
இது குறித்து அறிந்த தஞ்சாவூர் (திமுக) எம்.பி பழனிமாணிக்கம், அழைக்காமலேயே அங்கு போய் கலந்து கொண்டார். காணொளி மூலம் மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் விழாவில் பேசிக்கொண்டிருந்தார். அந்த நேரத்தில் வந்த பழனிமாணிக்கம் மேடையில் ஏறி இருக்கையில் அமர்ந்திருந்தார். 15 நிமிடம் தனியாக அமர்ந்திருந்த பழனிமாணிக்கம். பின்னர் நிகழ்ச்சி முடிந்ததும் இந்திய உணவுக் கழக அதிகாரிகள் அவரிடம் சென்று பேசினார்கள்.
அதிகாரிகளை கடிந்து கொண்ட எம்.பி
அப்போது "தன்னை ஏன் அழைக்கவில்லை, தனது பெயரை ஏன் அழைப்பிதழில் போடவில்லை" என்று பழனிமாணிக்கம் ஆவேசமாக கேட்டு கடிந்துகொண்டார். ஹரியானா போன்ற மாநிலங்களில் இது போன்று நீங்கள் விழா நடத்த முடியுமா என கேட்டார்.
கோபித்து கொண்டு கிளம்பினார்
அப்போது அவரிடம் இந்திய உணவுக் கழக அதிகாரிகள் வருத்தம் தெரிவித்தனர். பின்னர் அதிகாரிகள் அருங்காட்சியகத்தின் உள்ளே வந்து பார்வையிடுமாறு கேட்டுக்கொண்டனர். அதற்கு பழனி மாணிக்கம் நான் வர முடியாது எனக் கூறி மேடையில் இருந்து கிளம்பி வளாகத்துக்கு வெளியே வந்தார். அவரோடு உணவுக் கழக அதிகாரிகளும் வந்து மீண்டும் உள்ளே வருமாறு கேட்டுக் கொண்டனர். ஆனால் உள்ளே வர மறுத்து கோபித்துக்கொண்டு பழனிமாணிக்கம் காரில் சென்றார்.
அதிகாரிகள் விளக்கம்
இது தொடர்பாக அதிகாரிகளிடம் கேட்டபோது, இந்திய உணவு கழகம் சார்பில் தஞ்சாவூர் மற்றும் கர்நாடக மாநிலம் கூப்ளி ஆகிய இரு இடங்களில் இன்று நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியில் உணவுக் கழக அதிகாரிகள் மட்டுமே கலந்து கொள்கின்றனர். மற்ற துறையினரும் மக்கள் பிரதிநிதிகளும் யாரும் கலந்து கொள்ளவில்லை. இது தொடர்பாக யாரையும் நாங்கள் அழைக்கவும் இல்லை. இது கொரனா காலம் என்பதால் முழுக்க முழுக்க அதன் வழிகாட்டுதல் நெறிமுறைகளின்படி பின்பற்றப்படுகிறது என கூறினர்.
பழனிமாணிக்கம் ட்வீட்
இன்று இந்த விவகாரத்தை ட்விட்டரில் எழுப்பியுள்ளார் பழனிமாணிக்கம். அவர் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், தஞ்சையில் மக்கள் பிரதிநிதிகளை புறக்கணித்துவிட்டு மத்திய அரசின் விழா!? அகில இந்திய அளவில் முதன்முறையாக தஞ்சாவூரில் அமையப் பெற்ற அகில இந்திய உணவுக் கழகத்தின் மத்திய அரசின் சார்பில் நடைபெற்ற நிகழ்வில் இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருந்தும் அவர்களையும் மாவட்ட ஆட்சி தலைவரையும் அழைக்காமல் விழா நடைபெறுவதை அறிந்து நேரிடையாக நிகழ்ச்சிக்கு சென்று வடமாநில அதிகாரிகளிடம், ஏன் மக்கள் பிரதிநிதிகளான எங்களை அழைக்கவில்லை என்று கேட்டறிந்தேன். இவ்வாறு அவர் ட்வீட் செய்துள்ளார்.