ஊரெல்லாம் தண்ணி கிடக்கு.. ஆனா குடிக்க சொட்டு தண்ணி கூட இல்லை.. அதிராம்பட்டினம் மக்கள் கதறல்!
Recommended Video
தஞ்சை: குடிநீர், உணவு வழங்கக் கோரி தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர்.
கடந்த 11-ஆம் தேதி வங்கக் கடலில் டேரா போட்டது கஜா புயல். இந்த புயல் நேற்று வேதாரண்யத்தில் கரையை கடந்தது. இதனால் திருவாரூர், தஞ்சை, நாகை உள்ளிட்ட மாவட்டங்களில் கஜா புயல் பாதிப்பை ஏற்படுத்தியது.
இதனால் டெல்டா பகுதிகள் அதிக பாதிப்பிற்கு உள்ளாகி உள்ளது. முக்கியமாக தஞ்சாவூர் மாவட்டத்தில் மரங்கள் விழுந்துள்ளது. மின்சாரம் துண்டிக்கப்பட்டு உள்ளது.
வேதாரண்யத்தை 25 ஆண்டுகளுக்குப் பின்னால் தள்ளி விட்ட கஜா புயல்.. வீடியோ #SaveVedaranyam
தொலைபேசி சேவை
இந்த நிலையில் கஜா புயல் காரணமாக தஞ்சையில் மொத்தமாக தொலைபேசி சேவை முடங்கி உள்ளது. மொத்தமாக அனைத்து நிறுவன தொலைபேசி சேவையும் பாதிக்கப்பட்டுள்ளது.
அவதி
அதிராம்பட்டினம் கிராமத்தில் பெரும்பாலான மக்கள் வீடுகளையும், தங்கள் உடைமைகளையும் இழந்து பரிதவித்து வருகின்றனர். உண்ண உணவின்றி, உடுத்த உடையின்றி, குடிக்க தண்ணீரின்றி மக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
கோரிக்கை
இந்நிலையில் அதிராம்பட்டினம் பேரூராட்சி அலுவலகம் முன் கிழக்கு கடற்கரை சாலையில் மக்கள் மறியலில் ஈடுபட்டுள்ளனர். அப்போது குடிநீர், உணவு வழங்கவும் அதிகாரிகள் தங்கள் பகுதிகளை பார்வையிடவும் மக்கள் கோரிக்கை வைத்தனர்.
3 நாட்களில் மின்சாரம்
கஜா புயல் தாண்டவம் ஆடிய பெரும்பாலான பகுதிகளில் ஏராளமான மின்கம்பங்கள் முறிந்து விழுந்தன. இதனால் அங்கு இருளில் மூழ்கியுள்ளனர். அதிராம்பட்டினம், வேதாரண்யம் ஆகிய பகுதிகளில் 3 நாட்களில் மின்சாரம் வரும் என மின்வாரிய அதிகாரிகள் விளக்கம் அளித்தனர்.
பார்த்ததில்லை
2 ஊர்களிலுமே புதிதாக இணைப்பு கொடுக்கும் நிலைக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். அதிராம்பட்டினத்தை பொருத்தவரை இதுவரை இது போன்ற சேதத்தை தாங்கள் பார்த்ததில்லை என கூறுகின்றனர்.
வாழ்நாளில் பார்த்ததில்லை
இதுகுறித்து பாதிக்கப்பட்ட மக்கள் கூறுகையில் ஊரெல்லாம் தண்ணீர் சூழ்ந்து கிடக்கிறது. ஆனால் நாங்கள் குடிப்பதற்கு ஒரு சொட்டு தண்ணீர் கூட இல்லை. எங்கள் வாழ்நாளில் இதுபோன்ற ஒரு சேதத்தை பார்த்ததே இல்லை. டெல்டா மாவட்டங்களை சேர்ந்த நாங்கள், இன்று உணவுக்காக கையேந்தும் நிலை வந்துவிட்டதாக வேதனை தெரிவித்தனர்.