நல்லா இருக்கீங்களாமா?.. வயல்வெளியில் வேலை செய்த பெண்களிடம் நலம் விசாரித்த சசிகலா!
தஞ்சாவூர்: அ.ம.மு.க பொதுச்செயலாளர் டிடிவி தினகரனின் மகள் ஜெயஹரினி. இவருக்கும், தஞ்சாவூர் காங்கிரஸ் முன்னாள் எம்.பி.யான துளசி வாண்டையார் பேரனும், கிருஷ்ணசாமி வாண்டையார் மகனுமான ராமநாதன் துளசி அய்யா வாண்டையாருக்கும் கடந்த 16.09.2021 அன்று திருவண்ணாமலையில் திருமணம் நடைபெற்றது.
இவர்கள் இருவருக்கும் தஞ்சை மாவட்டம், பூண்டியில் இன்று திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த திருமண வரவேற்பில் ஜெயலலிதாவின் தோழி சசிகலா கலந்து கொண்டார்.

திருமண வரவேற்பு நிகழ்ச்சி
இந்த திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள நேற்று இரவு தஞ்சாவூருக்கு வந்த சசிகலா, பரிசுத்தம் நகரில் உள்ள தனது வீட்டில் தங்கினார். பின்னர் இன்று மதியம் 12 மணிக்கு திருமண வரவேற்பில் கலந்து கொள்ள பூண்டிக்குச் சென்றார். செல்லும் வழியில் மாரியம்மன் கோயில் அருகே வயலில் பெண்கள் நடவுப் பணியில் ஈடுபட்டிருந்தனர். இதனை பார்த்த சசிகலா டிரைவரிடம் காரை நிறுத்தும்படி கூறினார்.

பெண்களிடம் நலம் விசாரித்தார்
உடனடியாக காரை விட்டு இறங்கிய அவர் வயல்வெளியில் இருந்த பெண்களை நோக்கி நடந்து சென்றார். நல்லா இருக்கீங்களாமா? விவசாயம் எப்படி போகுது? என்று கூறியதுடன் அவர்களிடம் குடும்பத்தை பற்றியும் நலம் விசாரித்தார் சசிகலா. சசிகலாவின் திடீர் வரவால் மகிழ்ச்சி அடைந்த பெண்கள் அவரிடம் மகிழ்ச்சியுடன் பதில் கூறினார்கள். இதனை தொடர்ந்து சசிகலா காரில் ஏறி பூண்டி நோக்கி சென்றார்.

அதிரடி காட்டினார்
சொத்துகுவிப்பு வழக்கில் தண்டனை பெற்று பெங்களூரு சிறையில் இருந்து விடுதலையான சசிகலா அதிமுக கொடி பொருத்தப்பட்ட காரில் சென்னைக்கு வந்து அதிரடி காட்டினார். ஆனால் சென்னை வந்த சசிகலா அரசியலில் இருந்து ஒதுங்குவதாக அறிவித்து அமைதி கொண்டார். கடந்த சில மாதங்களாக அதிமுகவினரை சசிகலா தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசும் ஆடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வந்தது.

முழு நேர அரசியல்வாதி
தற்போது அதிமுகவை கைப்பற்ற வேண்டும் என்ற தீவிரமாக இறங்கி விட்டார் சசிகலா. சமீபத்தில் அண்ணா, எம்.ஜி.ஆர் , ஜெயலலிதாவின் நினைவிடங்களுக்குச் சென்று மரியாதை செலுத்தினர். விரைவில் தொண்டர்களை சந்திக்க இருக்கிறார். சாலையில் காரில் செல்லும்போது தொழிலாளிகள், பெண்களை சந்திக்க சர்ப்ரைஸ் விசிட் கொடுப்பது முழு நேர அரசியல்வாதிகளின் வழக்கம். தற்போது சசிகலாவும் முழு நேர அரசியல்வாதியாக மாறிக் கொண்டிருக்கிறார் என்று கூறுகிறார்கள் அரசியல் நிபுணர்கள்.












Click it and Unblock the Notifications