கள்ளச்சாராயம் குடித்து இறந்தவர்களுக்கு உடனே நிவாரணம்! விவசாயிகளுக்கு எங்கே? சவுமியா அன்புமணி கேள்வி
தஞ்சாவூர்: கள்ளச்சாராயம் குடித்து இறந்தவர்களுக்கு உடனடியாக நிவாரணம் அறிவிக்கும் இந்த தமிழக அரசு விவசாயிகள் கத்தி கதறும் வரை நிவாரணம் வழங்காமல் காத்திருப்பதாக சௌமியா அன்புமணி குற்றம்சாட்டியுள்ளார்.
கும்பகோணம் அருகே உள்ள அம்மன்குடி பகுதியில் மழை நீரில் பாதிக்கப்பட்ட பயிர்களை "பசுமை தாயகம்" தலைவர் சௌமியா அன்புமணி பார்வையிட்டு விவசாயிகளிடம் குறைகளை கேட்டறிந்தார்.

நடவு செய்து ஒரு மாத காலமே ஆன பயிர்கள் மூழ்கி அழுகி வீணாகியுள்ளதை விவசாயிகள் அவரிடம் காண்பித்து வேதனை தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து சௌமியா அன்புமணி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறுகையில், காலநிலை மாற்றத்திற்கு ஏற்ப இன்னும் அதிகளவில் மழை பெய்வதற்கு வாய்ப்பு உள்ளது. எனவே உடனடியாக வடிகால்களை சீரமைத்து விவசாயிகள் பாதிக்காதவாறு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அரசு தூர்வாரும் பணி முடிந்துவிட்டதாக கணக்கு காட்டுகின்றனர். ஆனால் எந்த பணிகளும் செய்யப்படவில்லை. அவ்வாறு தூர்வாரி இருந்தால் வயல்களில் தண்ணீர் தேங்கி இருக்காது.
கள்ளச்சாராயம் குடித்து இறந்தவர்களுக்கு உடனடியாக நிவாரணம் அறிவிக்கிறார்கள். ஆனால் நமக்கெல்லாம் சோறு போடும் விவசாயிகளுக்கு உடனடியாக நிவாரணம் அறிவிக்க வேண்டாமா? விவசாயிகள் கத்தி கதறும் வரை காத்திருக்கிறார்கள்.
டாஸ்மாக்குக்கு கேமரா போலீஸ் என பாதுகாப்பு கொடுக்கப்படுகிறது. ஆனால் நெல் கொள்முதல் நிலையங்கள் திறந்தவெளி கிடங்குகளாக உள்ளன. மழையில் நனைந்து மட்கிப் போயும், முளைத்தும் நெற்கள் வீணாகி வருவதாகவும், எனவே பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும் என தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications