எதிர்காலத்தில் திமுகவுக்கு உதயநிதி ஸ்டாலின் தலைமை தாங்க வேண்டும் -எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் எம்.பி.
தஞ்சை: எதிர்காலத்தில் திமுகவுக்கு உதயநிதி ஸ்டாலின் தலைமை தாங்க வேண்டும் என முன்னாள் மத்திய இணை அமைச்சரும், திமுகவின் மூத்த முன்னோடிகளில் ஒருவருமான எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் எம்.பி.விருப்பம் தெரிவித்துள்ளார்.
உதயநிதி ஸ்டாலினின் செயல்பாடுகள் சிறப்பாக இருப்பதாக பாராட்டிய அவர், இளைஞர் படையை வழிநடத்தும் ஆற்றல் அவருக்கு உள்ளதாக புகழாரம் சூட்டியுள்ளார்.

உதயநிதி ஸ்டாலின் குறித்த எஸ்.எஸ்.பழனிமாணிக்கத்தின் இந்த பாராட்டு , திமுகவில் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக கருதப்படுகிறது.
இதனிடையே தமிழ் தேசியம் பேசும் மணியரசன் மற்றும் சீமான் போன்றோர் தனிநபர் மீதான விமர்சனத்தை கைவிட வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். திராவிடம் என்பது மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட அனைத்து மொழிகளும் இணைந்தது தான் என்றும் அதில் தமிழ் என்பது தனி அடையாளம் எனவும் குறிப்பிட்டார்.
விமர்சனங்களை திமுக எப்போதும் வரவேற்கும் கட்சி என்றும் சீமானும், மணியரசனும் புலி சின்னத்தை எடுத்து விட்டு பேச வேண்டும் எனவும் தெரிவித்தார். உதயநிதி ஸ்டாலினை பொறுத்தவரை அவர் மீதான விமர்சனங்களை பக்குவமாக ஏற்றுக்கொள்கிறார் என்றும் இந்தக் கால இளைஞர்களை விட கூடுதலாகவே அவருக்கு பக்குவம் வந்துவிட்டதாக தெரிவித்திருக்கிறார்.
தன்னைப் பொறுத்தவரை திமுகக்கு எதிர்காலத்தில் உதயநிதி தலைமை தாங்குவது இந்த கட்சியின் நலனுக்கு ஏற்றது என்றும் ஏற்கனவே பொதுமக்களிடம் அறிமுகமான நபரை கட்சி பயன்படுத்திக் கொள்வதில் தவறேதும் இல்லை எனவும் தெரிவித்தார்.
இதனிடையே முன்பைக்காட்டிலும் இப்போது அரசியல் முதிர்ச்சியோடு உதயநிதி ஸ்டாலின் எந்தவொரு விவகாரத்தையும் அணுகுவது குறிப்பிடத்தக்கது. தனது தாத்தாவும் மறைந்த திமுக தலைவருமான கருணாநிதியை போல் நகைச்சுவை நயம் ததும்ப அவர் பேசி வருவது குறிப்பிடத்தக்கது.
இதேபோல் சீனியர் கட்சி நிர்வாகிகளை அணுகும் முறையும் அனைவரும் பாராட்டும் வகையில் உள்ளது. இப்படி அரசியலில் நாளுக்கு நாள் பாடம் கற்று தன்னை தேர்த்தி வருவதால் உதயநிதி ஸ்டாலினுக்கு பாராட்டும் குவிந்து வருகிறது.
திமுகவில் இளைஞரணி செயலாளராக உள்ள உதயநிதி ஸ்டாலின் , இனி அடுத்தடுத்து கட்சியில் உயர்ந்த பதவிகளுக்கு செல்வார் என எதிர்பார்க்கப்படுகிரது.












Click it and Unblock the Notifications