என்ன படிக்க ஆசை கண்ணா?.. 9 வயது சிறுவன் பிரகதீஷின் வித்தியாசமான பதிலை கேளுங்க!
தஞ்சாவூர்: தஞ்சை அருகே விளையாடும் வயதில் விவசாயம் செய்து வரும் 4ஆம் வகுப்பு பள்ளி மாணவன், விவசாயக் கல்லூரியில் சேர்ந்து விவசாயி ஆக போவதாக தெரிவிக்கிறார். பொதுவாக டாக்டர், என்ஜீனியர், ஐஏஎஸ் என கூறும் குழந்தைகளுக்கு மத்தியில் நாட்டின் முதுகெலும்பான விவசாயத்தை படிக்க வேண்டும் என இந்த சிறுவன் சொல்வது பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Recommended Video
தஞ்சை மாவட்டம், திருவையாறு அருகே மானாங்கோரை பகுதியைச் சேர்ந்தவர் முகுந்தன். இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி வரலட்சுமி. இவர்களது மகன் பிரகதீஷ் இவர் தஞ்சையில் உள்ள பள்ளியில் தற்போது நான்காம் வகுப்பு படித்து வருகிறார்.
கடந்த 8 ஆண்டுகளாக காவேரி ஆற்றில் தண்ணீர் வராததால் பெரும்பாலான பகுதிகளில் விவசாயம் பொய்த்துப் போனது. இதனால் முகுந்தன் வருமானத்திற்காக வெளிநாட்டிற்கு வேலைக்கு சென்றுள்ளார். தற்போது கொரோனா பரவலை தடுக்கும் விதமாக விமான சேவை பாதிக்கப்பட்டு உள்ளதால், வெளிநாட்டிற்கு சென்ற முகுந்தன் தாயகம் திரும்ப முடியவில்லை.

மேட்டூர் அணை
இந்நிலையில் கடந்த ஜூன் மாதம் தமிழக முதல்வரால் மேட்டூர் அணையில் இருந்து குறுவை சாகுபடிக்கு தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால் முகுந்தனின் மனைவி வரலட்சுமி குறுவை விவசாயம் செய்ய முடிவு செய்து தனது நிலத்தில் விவசாயம் பணிகளை மேற்கொண்டார். ஆனால் கொரோனா ஊரடங்கு காரணமாக விவசாயப் பணிகள் செய்ய யாரும் ஆட்கள் வரவில்லை.

ஆர்வம்
இதனால் என்ன செய்வது என்று நினைத்த வரலட்சுமியிடம் மகன் பிரகதீஷ், தான் விவசாயம் செய்வதாக தெரிவித்ததை அடுத்து தாயும், மகனும் விவசாயம் செய்து வந்துள்ளனர். பிரகதீஷ் தனது தாய்க்கு உதவியாக வரப்பு வெட்டுதல், உரம் தெளித்தல், மருந்து அடித்தல் மற்றும் களை பறித்தல் போன்ற விவசாய பணிகளை ஆர்வமாக செய்து வருகிறான்.

விவசாயத் தொழில்
இது குறித்து சிறுவன் பிரகதீஷ் தெரிவிக்கையில், விவசாயம் செய்தால்தான் எங்களுக்கு சோறு. அப்பா வெளிநாட்டில் சிக்கிக் கொண்டதால் அம்மாவிற்கு துணையாக நானே விவசாயப் பணியில் ஈடுபட்டேன். மேலும் உயர் படிப்பு முடித்து விவசாய கல்லூரியில் சேர்ந்து விவசாயத் தொழிலில் நான் ஈடுபடுவேன் என இந்த சிறிய வயதில் தெரிவிப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

விவசாயம்
சிறுவனின் தாய் வரலட்சுமி தெரிவிக்கையில் இந்தனை ஆண்டுகள் மாமியார் பார்த்து வந்த விவசாயத்தை, அவருக்கு உடல் நலம் சரியில்லாமல் போனதால் இந்த ஆண்டு நான் முதன்முதலாக பார்க்கிறேன். கணவரும் வெளிநாட்டில் இருக்க, ஊரடங்கு காலத்தில் எப்படி விவசாயம் செய்வது என தவித்து வந்த எனக்கு மகன் பேருதவியாக இருந்தான். மகனின் ஆசைப்படியே அவனை விவசாயம் சார்ந்த படிப்பு படிக்க வைப்பேன் என தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications