அத்திக் அகமது கொலை! உ.பி.யில் பாஜகவின் காட்டாட்சியை கலைக்க வேண்டும்! தமிமுன் அன்சாரி ஆவேசம்!
தஞ்சை: உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் பாஜக காட்டாட்சி தர்பார் நடத்திக் கொண்டிருப்பதாகவும் அந்த ஆட்சியை கலைக்க வேண்டும் எனவும் மனிதநேய ஜனநாயக கட்சி பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி வலியுறுத்தியுள்ளார்.
தஞ்சை மாவட்டம் பண்டாரவடையில் மனிதநேய ஜனநாயக கட்சியின் மருத்துவ சேவை அணி சார்பில் நேற்று மாலை இஃப்தார் விழா நடைபெற்றது. அதில் கலந்துகொண்ட அக்கட்சியின் பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், காஷ்மீர் முன்னாள் கவர்னர் சத்யபால் மாலிக் புல்வாமா தாக்குதலில் 40 இந்திய வீரர்கள் கொல்லப்பட்ட சம்பவத்தில் ஒன்றிய அரசின் அலட்சியம் இருந்ததாக கூறுவதும் இது பற்றி எதுவும் பேச வேண்டாம் என பிரதமர் கூறினார் என்றும் அளித்துள்ள பேட்டி அதிர்ச்சி அளிப்பதாக உள்ளதாக தெரிவித்தார்.

மேலும் தொடர்ந்து பேசிய தமிமுன் அன்சாரி, சத்யபால் மாலிக் கூறிய மர்மங்கள் வெளிக்கொண்டு வரப்பட வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.
இதற்காக தற்போது பணியில் உள்ள உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில் 6 மாத காலக்கெடுவுடன் கூடிய ஒரு விசாரணை ஆணையம் அமைக்கப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.
பாஜக ஆளும் உத்தரப்பிரதேச மாநிலத்தில் காவல்துறை பாதுகாப்பில் இருக்கும் போதே முன்னாள் எம்.எல்.ஏ. அத்திக் அகமது என்பவர் சுட்டுக் கொல்லப்படுகிறார் என்றால் அங்கு எந்தளவுக்கு சட்டம் ஒழுங்கு இருக்கிறது என்பதை புரிந்துகொள்ள வேண்டும் எனத் தெரிவித்தார்.
உத்தரப்பிரதேசத்தில் நடந்த அத்திக் அகமது கொலை போன்ற நிகழ்வு இதுவரை வேறு எங்கும் நடைபெற்றதில்லை என்று கூறிய தமிமுன் அன்சாரி, உ.பி.யில் காட்டாட்சி தர்பார் நடப்பதாக குற்றம்சாட்டியதோடு பாஜக ஆட்சியை கலைக்க வேண்டும் என ஆவேசம் காட்டினார்.
பாஜக ஆட்சியில் நீதிமன்ற சுதந்திரம், தேர்தல் ஆணையத்தின் தனித்தன்மை, வருமான வரித்துறை, மத்திய புலனாய்வு துறை ஆகியவற்றின் நம்பகத்தன்மை பாதிக்கப்பட்டுள்ளதாக தமிமுன் அன்சாரி கூறியிருக்கிறார்.












Click it and Unblock the Notifications