Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

85% வாக்கு வங்கி.. அதிராம்பட்டினத்தில் திமுகவினரால் பாதிப்பு! ஸ்டாலினுக்கு தமீமுன் அன்சாரி கோரிக்கை

Subscribe to Oneindia Tamil

தஞ்சாவூர்: தேர்தல் தேதி அறிவித்த பிறகு கூட்டணி நிலைபாட்டை தெரிவிப்பதாக கூறிய மனிதநேய ஜனநாயக கட்சித் தலைவர் தமீமுன் அன்சாரி, 85% திமுக வாக்குவங்கியை கொண்டு உள்ள அதிராம்பட்டினத்தில் சொந்த கட்சியினரால் பாதிப்பு ஏற்படுவதை முதலமைச்சர் ஸ்டாலின் தலையிட்டு தீர்க்க வேண்டும் என தெரிவித்தார்.

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தில் ஒன் இந்தியா தமிழ் செய்தியாளர் எழுப்பிய கேள்விகளையும் அதற்கு தமீமுன் அன்சாரி அளித்த பதில்களையும் பார்ப்போம்.

Thamimun Ansari exclusive interview to One india regarding 2024 Lok sabha election

கேள்வி: ஏற்கனவே இமாம் ஷாபி பழைய பள்ளி இட மீட்பு போராட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றினீர்கள். அதன் பின் பள்ளியின் சீல் அகற்றப்பட்டதால் போராட்டம் நிறுத்தப்பட்டது. ஆனால், இன்னும் அரசு தரப்பில் பேச்சுவார்த்தைக்கு அழைக்கப்படாததால் பள்ளியை திறக்க முடியவில்லை என்று கூறி மீண்டும் போராட்டம் செய்யப்போவதாக மக்கள் அறிவித்து உள்ளனர். இது பற்றிய உங்கள் கருத்து என்ன?

பதில்: அதிராம்பட்டினம் வரலாற்று சிறப்பு மிக்க ஊர். முஸ்லிம்கள் பெரும்பான்மையாக இருந்தாலும் எல்லா சமுதாய மக்களும் இணக்கமாக வாழ்கின்றனர். இங்குள்ள முஸ்லிம்கள் எல்லா சமூக மக்களுக்கும் பல்வேறு சேவைகளை செய்து வருகின்றனர். குறிப்பாக கல்விப் பணி செய்து வருகிறார்கள். அப்படிப்பட்ட ஒரு ஊரில் இமாம் ஷாபி கல்விச் சாலைக்கு அரசு தரப்பில் இருந்து நெருக்கடியை ஏற்படுத்துகிறார்கள் என்று சொன்னபோது நாமெல்லாம் குரல் கொடுத்தோம்.

பேச்சுவார்த்தை சுமூகமாக முடிந்து பிரச்சனைக்கு தீர்வு எட்டப்பட வேண்டும் என விரும்பினோம். ஆனால், இந்த விவகாரத்தில் உரிய தீர்வை சரியான நேரத்தில் எட்டவில்லை என்ற பிறகு போராட்டக்குழு மீண்டும் போராட்டத்தை அறிவித்து இருப்பதை நாம் வரவேற்கிறோம். அதே நேரம் இந்த நிலைக்கு செல்லாதபடி ஆட்சியரும் அரசு அதிகாரிகளும் அதிராம்பட்டினம் நகராட்சி நிர்வாகமும் இணைந்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என விரும்புகிறோம்.

ஏற்கனவே இந்த போராட்டத்துக்கு நான் வருகை தந்தபோது இந்த விவகாரத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் தலையிட வேண்டும் என்ற வேண்டுகோளை வைத்தேன். இந்த ஊரில் 80% முதல் 85% மக்கள் சிந்தாமல் சிதறாமல் திமுகவுக்கு வாக்களித்தார்கள். அப்படிப்பட்ட மக்களுக்கு தங்களுடைய கட்சியை சேர்ந்தவர்கள் சிக்கலை ஏற்படுத்திய நிலையில் முதலமைச்சரே அழைத்து சரி செய்ய வேண்டும் என்பதையே எங்களுடைய கருத்தாக வைத்தோம். அதையே தற்போது வைக்கிறோம்.

கேள்வி: நாடாளுமன்ற தேர்தல் ஃபீவர் இந்தியா முழுவதும் தொற்றி இருக்கிறது. கூட்டணி பேச்சுவார்த்தையை திமுக தரப்பும் அதிமுக தரப்பும் தொடங்கி உள்ளார்கள். மஜகவின் கூட்டணி நிலைபாடு என்ன?

பதில்: மனிதநேய ஜனநாயக கட்சி எந்த கூட்டணியிலும் இல்லை. நாம் மக்கள் பிரச்சனைகளை கையில் எடுத்து தொடர்ச்சியாக பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறோம். தேர்தல் தேதியை இன்னும் தேர்தல் ஆணையம் வெளியிடவில்லை. அதன் பிறகுதான் ஒவ்வொரு அரசியல் கட்சியும் தங்கள் நிலைபாடுகளை வெளிப்படுத்துவார்கள். மனிதநேய ஜனநாயக கட்சியும் அதற்காக காத்திருக்கிறது. தேர்தல் தேதி வந்தவுடன் கூட்டணி பற்றி பேசுவோம் என்பதே எங்கள் நிலைபாடு.

கேள்வி: முஸ்லிம்களின் பிரதான கோரிக்கையாக இருந்து வந்த சிறைவாசிகள் விடுதலை தற்போது நடந்துள்ளது. குறிப்பிட்ட எண்ணிக்கையிலான சிறைவாசிகள் விடுவிக்கப்பட்டு உள்ளார்கள். இதை எப்படி பார்க்கிறீர்கள்?

பதில்: இந்து, முஸ்லிம் என்ற பேதமின்றி சாதி, மத பேதமின்றி 20 ஆண்டுகளை கடந்த அனைத்து ஆயுள் சிறைவாசிகளையும் முன்விடுதலை செய்ய வேண்டும் என்பதுதான் எங்கள் கோரிக்கை. சட்டமன்றத்தில் நாங்கள் இருந்தபோதும் இதையே வலியுறுத்தினோம். அந்த நேரத்தில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவின்போது 1500க்கும் மேற்பட்ட சிறைவாசிகளை விடுதலை செய்ததில் எங்களுக்கு, கருணாஸ், தனியரசு ஆகியோருக்கு பெரும் பங்கு உண்டு. 7 தமிழர் விடுதலையில் எங்கள் பணிகளை தமிழ்நாடு அறியும்.

அதன் தொடர்ச்சியாகதான் 36 முஸ்லிம் கைதிகள் உட்பட அனைவருடைய விடுதலையையும் நாங்கள் வலியுறுத்தினோம். இதற்காக மிகுந்த நேர்மையோடு மனிதநேய ஜனநாயக கட்சி செயலாற்றியது என்பது தமிழ்நாட்டில் உள்ள எல்லோருக்கும் தெரியும். நாங்கள் கடந்த சட்டமன்றத்தில் 5 ஆண்டுகள் சமரசம் இன்றி குரல் கொடுத்தோம். திண்டுக்கல் மீரான் முகைதீன் போன்றவர்கள் விடுதலையாக காரணமாக இருந்தோம்.

இந்த ஆட்சியில் முதலமைச்சர் தங்கள் கோரிக்கையை ஏன் நிறைவேற்றவில்லை என்று கேட்டு தொடர்ச்சியாக கோவை மத்திய சிறை முற்றுகை, சேலம் மத்திய சிறை முற்றுகை, நெல்லை மத்திய சிறை முற்றுகை, கடலூர் மத்திய சிறை முற்றுகை, தலைமைச் செயலக முற்றுகை என வரிசையாக போராட்டங்களை நடத்திவிட்டு, திருச்சியில் பிப்ரவரி 10 ஆம் தேதி போராட்டம் அறிவித்து இருந்தோம். லட்சம் பேரை கூட்ட திட்டமிட்டு வேலைகளை தொடங்கி இருந்தோம். மிகப்பெரிய வரவேற்பு அலைகள் இருந்தன. இந்த சமயத்தில் சட்டமன்றம் கூடுகிறது. ஆளுநர் உரையாற்ற வருகிறார்.

இது சட்டசபையில் பெரிய விவாதத்தை உருவாக்கும் என்பது அரசுக்கும் ஆளுநருக்கும் தெரிந்துவிட்டது. நல்ல வேளையாக எங்களை போன்ற பல ஜனநாயக சக்திகள் இதேபோன்று போராடி இருக்கிறார்கள். எங்களின் உணர்வுகளை புரிந்துகொண்டு தமிழ்நாடு ஆளுநர் சிறைவாசிகளை விடுவித்து உள்ளார். இதுவரை 10 பேரை விடுவிப்பதாக செய்திகள் வருகின்ற. எனவே திருச்சி போராட்டத்தை ரத்து செய்துள்ளோம். எங்கள் கோரிக்கை இத்துடன் நிறைவடையாது. சாதி, மத பேதமின்றி எல்லோரையும் விடுவிக்க தொடர்ந்து வலியுறுத்துவோம்.

இப்போது இந்த முயற்சியை எடுத்த தமிழ்நாடு ஆளுநர், பரிந்துரை செய்த முதலமைச்சர், சட்டமன்றத்தில் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்தை கொண்டு வந்த எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட எல்லோருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். சட்டசபையில் மனிதநேய ஜனநாயக கட்சி ஆளுங்கட்சி தரப்பு, எதிர்க்கட்சித் தரப்பு என எல்லோரையும் சந்தித்து இந்த கோரிக்கையை கவன ஈர்ப்பு தீர்மானமாக கொண்டு வர எவ்வளவு முயற்சி செய்தது என்பது எல்லோருக்கும் தெரியும். அதுதான் இந்த பிரச்சனையை மக்கள்மயப்படுத்துவதற்கு காரணமாக அமைந்தது.

நாங்கள் எடுத்த நுட்பமான ராஜ தந்திர நடவடிக்கை. இந்த விசயத்தில் பங்கேற்ற, ஆதரவளித்த எல்லோருக்கும் நன்றியை தெரிவிக்கிறோம். எல்லோருடனும் மகிழ்ச்சியையும் பாராட்டையும் பகிர்ந்து கொள்கிறோம். நாங்கள் மட்டுமே இதை செய்ததாக நினைக்கவில்லை. எல்லோரும் சேர்ந்து செய்தோம். அதில் நாங்கள் முன்னிலையில் இருந்தோம் என்பதை சொல்லிக்கொள்கிறோம். இதே விசயத்தில் இன்னும் சிறையில் உள்ள எல்லா சமுதாயத்தினருக்காகவும் மனிதநேய ஜனநாயக கட்சியின் குரல் தொடர்ந்து ஒலித்துக்கொண்டே இருக்கும்.

கேள்வி: ராமர் கோயில் கட்டப்பட்டு இருக்கிறது. ஞானவாபி மசூதியில் பூஜை நடந்து இருக்கிறது. கீழக்கரையிலும் ஒரு மசூதியை குறிவைத்து பதிவிடுகிறார்கள். இதை பற்றி என்ன சொல்கிறீர்கள்?

பதில்: 1992 டிசம்பர் 6 ஆம் தேதி பாபர் மசூதி இடிக்கப்பட்ட பிறகு நாடு முழுவதும் வெடித்த கலவரங்களை தொடர்ந்து அப்போதைய காங்கிரஸ் அரசு நாடாளுமன்றத்தில் வழிபாட்டுத் தலங்கள் பாதுகாப்பு சட்டங்களை கொண்டு வந்தது. சுதந்திரத்துக்கு முன் எந்த வழிபாட்டுத் தலங்கள் எப்படி இருந்ததோ அப்படியே அனைத்தையும் பாதுகாக்க வேண்டும் என்று அச்சட்டம் சொல்கிறது. அதற்கு விரோதமாக எந்த நீதிமன்றம் தீர்ப்பு சொன்னாலும், எந்த அரசியல் கட்சிகள், எந்த தனிநபர் கருத்து சொன்னாலும் அது சட்டவிரோதம். இதுபோன்ற பேச்சுக்களை நாட்டில் உள்ள சகல ஜனநாயக கட்சிகள் ஓரணியில் நின்று எதிர்க்க வேண்டும். தண்டிக்க வேண்டும்.

குறிப்பாக இங்கு தாயாக பிள்ளையாக வாழும் இந்து சமுதாய மக்கள் இதையெல்லாம் விரும்புவது இல்லை. இப்படிப்பட்ட விஷமத்தனமான கருத்தை ஏற்பதும் இல்லை. எனவே நாம் அச்சப்பட வேண்டியது இல்லை. அதே சமயம் சட்டப்பூர்வமாக சகல ஜனநாயக சக்திகள் துணையோடு நாம் எதிர்க்க ஆயத்தமாக வேண்டும். அந்த எதிர்ப்பு ஜனநாயகப்பூர்வமாக, எல்லா தரப்பு மக்களையும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும். தனித்து நின்று போராடுவது பாதிப்பையே ஏற்படுத்தும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+