தூக்கி அடிச்சுருவேன் பாத்துக்க..யூரின் போனால் அலாரம் அடிக்கும்.. திறந்தவெளி கழிப்பிடத்துக்கு எண்ட்!
தஞ்சாவூர்: பொது சுவர்கள், பேருந்து நிலையங்கள், பொது இடங்கள் என பார்க்கும் இடங்களை எல்லாம் திறந்தவெளி கழிப்பிடமாக பயன்படுத்துவர்களால் பொதுமக்கள் கடும் அவதியை சந்தித்து வருகின்றனர். இந்த நிலையில் தஞ்சை மாநகராட்சி கண்டுபிடித்துள்ள ஐடியாவால் இனி திறந்தவெளி பாத்ரூம் நபர்களுக்கு சிக்கல் தான்.
சென்னை, கோவை போன்ற பெரிய நகரங்களாக இருந்தாலும் சரி, கிராம பகுதிகளாக இருந்தாலும் சரி, சாலையோரங்கள் பொது இடங்கள் பேருந்து நிலையங்களை திறந்தவெளி கழிப்பிடமாக பயன்படுத்தும் நபர்களை தினமும் நீங்கள் பார்த்திருக்கலாம்..

பேருந்து நிலையத்தில் இத்தனை பேர் இருக்கிறார்களே, பெண்கள் நடக்கிறார்களே, மாணவர்கள் அவதிப்படுகிறார்களே என கவலைப்படாமல் பேருந்து நிலைய சுவர்களை கழிப்பிடம் போல நினைத்து சிறுநீர் கழிப்பவர்கள் திருந்தவே முடியாது.
திறந்தவெளி கழிப்பிடம்:
இதனால் பொதுமக்கள் முகம் சுளித்தாலும் சிறுநீர் கழிப்பவர்கள் அதனை கண்டு கொள்வதும் இல்லை. சிறுநீர் கழிக்காதே, 500 ரூபாய் அபராதம், போலீசில் பிடித்துக் கொடுக்கப்படும் என போர்டு வைத்தாலும் அவர்கள் கண்களில் மட்டுமே அது படாது போல.. இந்த நிலையில் தஞ்சையில் மாநகராட்சி அதிகாரிகள் வித்தியாசமான முறையில் யோசித்து திறந்தவெளி கழிப்பிட பிரச்சனைக்கு தீர்வு கண்டு இருக்கின்றனர்.
தஞ்சாவூர் பேருந்து நிலையம்:
திறந்தவெளி கழிப்பிடத்தால் பாதிக்கப்பட்ட ஏதோ ஒரு அதிகாரி தான் இந்த ஐடியாவை கொடுத்திருப்பார் போல.. தஞ்சை பேருந்து நிலையத்தில் தான் அந்த வித்தியாசமான ஐடியா செயல்படுத்தப்பட்டு இருக்கிறது. டெல்டா மாவட்டங்களில் முக்கிய நகரமான தஞ்சைக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமானோர் வந்து செல்கின்றனர். இந்த நிலையில் தஞ்சை பேருந்து நிலையத்தில் துர்நாற்றம் மக்கள் முகம் சுளிக்கும் அளவுக்கு இருந்தது.
சிறுநீர் கழித்தால் அலாரம்:
பேருந்து நிலையத்தை சுற்றிலும் ஏராளமானோர் திறந்தவெளி கழிப்பிடம் போல பயன்படுத்தி வந்ததால் பேருந்து நிலையம் முழுவதுமே சிறுநீர் காடாக காட்சி அளித்தது. தண்ணீரை ஊற்றியும் ப்ளீச்சிங் பவுடர் தெளித்தும் சுத்தம் செய்தும் எவ்வளவோ நடவடிக்கை எடுத்தும் சிறுநீர் கழிப்பவர்களை கட்டுப்படுத்த முடியவில்லை. இதை அடுத்து பேருந்து நிலையத்தை சுற்றிலும் சிறுநீர் கழித்தால் அலாரம் அடிக்கும் வகையில் ஏற்பாடு செய்திருக்கின்றனர் மாநகராட்சி அதிகாரிகள்.

பொதுமக்கள் வரவேற்பு:
பேருந்து நிலையத்தை சுற்றியுள்ள சுவர்களில் இரும்பு தடுப்புகள் அமைக்கப்பட்டு அதில் சென்சார் பொருத்தப்பட்டுள்ளது. யாராவது சிறுநீர் கழித்தால் சென்சார் மூலம் அலாரம் அடிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனால் பேருந்து நிலையத்தில் சிறுநீர் கழிப்பதை தடுக்க முடியும் என்கின்றனர் அதிகாரிகள். அதே நேரத்தில் இந்த சென்சாரை பயன்படுத்தி தமிழகம் முழுவதும் இது போன்ற பிரச்சனைகளை சரி செய்யலாம் என்கின்றனர் பொதுமக்கள்..
என்ன செய்யலாம்?:
அதே நேரத்தில் அலாரம் அடித்தால் மட்டும் பத்தாது பிராங்க் வீடியோக்களில் வருவது போல சிறுநீர் கழிப்பவர்கள் மீது தண்ணீரை பீய்ச்சி அடிப்பது போன்ற வேறு ஏதாவது செய்ய வேண்டும் அல்லது அந்த இடத்தில் சிசிடிவி கேமராக்களை வைத்து சிறுநீர் கழிப்பவர்களின் வீடியோக்களை பேருந்து நிலையத்தில் வைத்து ஒளிபரப்ப வேண்டும் என்கின்றனர் தஞ்சாவூர் நெட்டிசன்கள். எது எப்படியோ அதிகாரிகள் செய்துள்ள இந்த ஏற்பாடுக்கு அப்பகுதி மக்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். மேலும் இதனை பெயருக்கு செயல்படுத்தாமல் தொடர்ந்து அதனை கண்காணிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கின்றனர்.












Click it and Unblock the Notifications