தஞ்சை பெரியகோயில் சித்திரை திருவிழா கோலாகல கொடியேற்றம் - ஏப்.13ல் தேரோட்டம்
புகழ்பெற்ற தஞ்சை பெரியகோயிலில் 18 நாட்கள் நடக்கும் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
தஞ்சாவூர்: புகழ்பெற்ற பிரகதீஸ்வரர் ஆலயமான தஞ்சை பெரிய கோவிலில் சித்திரை திருவிழா கோலாகலமாக கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். வரும் ஏப்ரல் 13ஆம் தேதி தேரோட்டம் பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.
ஆயிரம் ஆண்டுகள் பழமையான தஞ்சை பெரிய கோவில் உலக பிரசித்தி பெற்றது. கட்டிடக்கலைக்கு எடுத்துக்காட்டாக திகழும் இந்த ஆலயம் உலக பாரம்பரிய சின்னமாகவும் விளங்கி வருகிறது.

பாரம்பரியம் கொண்ட இந்த ஆலயத்தைக் காண வெளிநாடுகளில் இருந்து தினமும் ஏராளமான பக்தர்கள், சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். இந்த கோவிலில் சித்திரை திருவிழாவையொட்டி தேரோட்டமும் நடைபெற்று வருகிறது.
சித்திரை திருவிழா 18 நாட்கள் நடைபெறும் நிலையில் கடந்த 2 ஆண்டுகளாக கொரோனாவால்,இந்த பிரசித்தி பெற்ற கோவிலின் தேரோட்டம் நடைபெறாமல் இருந்து வந்தது. இந்நிலையில் கொரோனா குறைந்து மீண்டும் இயல்பு வாழ்க்கை படிப்படியாக திரும்பி வரும் நிலையில் தஞ்சை பெரிய கோவிலில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் இன்று தொடங்கியுள்ளது.
கடந்த மாதம் ஏழாம் தேதி பந்தக்கால் நடப்பட்ட நிலையில் இன்று காலை பெரிய கோவிலில் கொடியேற்றத்துடன் விழா தொடங்கியுள்ளது. இன்று மாலை முதல் சாமி புறப்பாடு நிகழ்ச்சிகள் தொடங்கி நடைபெற்று வரும். 18 நாட்களும் தஞ்சை பெரிய கோவிலில் சாமி புறப்பாடு ,அலங்காரம்,பூஜைகள் என வெகு விமர்சையாக நடைபெறும்.
பெரிய கோயிலில் சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வாக சொல்லப்படும் திருத்தேரோட்டம் வருகிற ஏப்ரல் 13ஆம் தேதி நடைபெறும். தஞ்சையில் உள்ள நான்கு ராஜ வீதிகளிலும் தேர் வலம் வரும். நான்கு ராஜ வீதிகளிலும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வசதியாக தேர் நிறுத்தப்படுகிறது. பின்னர் தேர் நிலை மண்டபத்தை வந்தடைகிறது. இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு பெரிய கோவிலில் தேரோட்டம் நடைபெறுவது பக்தர்கள் மத்தியில் பெரும் உற்சாகத்தையும், மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தேரோட்டத்தில் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications