வளர்த்தவரை கொத்த வந்த பாம்பை கடித்து கொன்ற பப்பி நாய்.. விஷம் ஏறியதால் உயிர் விட்டது
Recommended Video
தஞ்சை: தன்னை வளர்த்து வந்த விவசாயியை கொத்த வந்த பாம்பை கடித்து கொன்ற நாய் ஒன்று, பாம்பின் விஷம் ஏறியதால் பலியான சம்பவம் தஞ்சாவூர் அருகே நெகிழ்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சாவூர் அருகேயுள்ள வேங்கராயன்குடிகாடு என்ற பகுதியை சேர்ந்தவர் விவசாயி நடராஜன் இவர் தனது மனைவி மற்றும் இரு மகன்களுடன் வசித்து வருகிறார் இவரது குடும்பத்தில் கடந்த 4 வருடங்களாக ஆண் நாய் ஒன்றை மிகுந்த பாசத்துடன் வளர்த்து வந்தனர் அந்த நாய்க்கு பப்பி என பெயரிட்டிருந்தனர்
விவசாயி நடராஜன் நாள்தோறும் காலையில் பப்பியை அழைத்துக் கொண்டு தன்னுடைய தோட்டத்தில் நடைபயிற்சி செய்வது வழக்கம். நேற்று காலை வழக்கம் போல பப்பியை கூட்டிக் கொண்டு தோட்டத்தில் நடைபயிற்சி செய்து கொண்டிருந்தார் அப்போது 5 அடி நீளமுள்ள நல்ல பாம்பு ஒன்று திடீரென்று தோட்டத்தில் இருந்து ஊர்ந்து வந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த நடராஜன் நகராமல் அங்கேயே நின்றார். ஆனாலும் நடராஜனை நோக்கி அந்த பாம்பு சீறிக் கொண்டு வந்தது.
அப்போது தான் அந்த சம்பவம் நொடிப் பொழுதில் அரங்கேறியது. தன்னை வளர்ப்பவரை பாம்பு கடிக்க பாய்ந்ததை கண்ட பப்பி, கடும் கோபம் கொண்டு பாம்பு மீது ஆக்ரோஷமாக பாய்ந்து கடித்து குதறியது. பப்பியிடமிருந்து தப்பிக்க அந்த பாம்பு அருகிலுள்ள முட்புதருக்குள் புகுந்தது.
20 ஆண்டுகளில் பிரதமர் மோடி ஒரு நாள் கூட விடுமுறை எடுக்கவில்லை- தேர்தல் பிரசாரத்தில் அமித்ஷா
ஆனாலும் பப்பி விடாமல் புதருக்குள் புகுந்து பாம்பை மறுபடியும் வெளியில் இழுத்து வந்து கடித்துக் குதறியது. இதனால், பாம்பு இறந்தது. இதனை கண்டு நெகிழ்ச்சியடைந்த நடராஜன், நாயைக் கட்டியணைத்தது தூக்கிக் கொண்டு வீட்டுக்கு ஓடினார். நடந்த சம்பவங்கள் அனைத்தையும் குடும்பத்ததாரிடம் விவரித்தார்
இதனால் குடும்பமே சேர்ந்து பப்பிக்கு நன்றி தெரிவித்து, கட்டியணைத்து மகிழ்ந்தனர் ஆனால் அந்த நேரத்தில் பப்பியோ சோர்ந்து காணப்பட்டது. ஒரு கட்டத்தில் நிற்கவும், உட்காரவும் முடியாமல் படுத்துவிட்டது. பாம்பிடம் சண்டை போட்ட போது அது கொத்தியதால், நாயின் உடலில் விஷம் ஏறி இருப்பதை கண்டுபிடித்து உடனடியாகக் கால்நடை மருத்துவருக்குத் தகவல் அளித்தார்.
ஆனால் சிறிது நேரத்திலேயே பப்பி இறந்துவிட்டது. இதனால் நடராஜன் குடும்பத்தினர் சோகத்தில் ஆழ்ந்தனர். பின்னர் இறந்து போன பப்பி நாயையும், பாம்பையும் குழி தோண்டி புதைத்தனர்.