நடிகர் கார்த்திக் பூர்வீக கிராமம் இதுதான்! எப்போது வருவார்? ஏக்கத்தில் தேடும் உறவினர்கள்
தஞ்சாவூர்: நடிகர் கார்த்திக் அவரது தந்தை முத்துராமன் பிறந்த பூர்வீக கிராமத்திற்கு ஒருமுறைகூட வந்ததே இல்லை என அக்கிராமத்தில் உள்ள உறவினர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ளது ஒக்கநாடு மேலையூர் என்ற கிராமம்தான் நடிகர் கார்த்திக்கின் பூர்வீகம். அதாவது கார்த்திக்கின் தந்தை முத்துராமன் பிறந்த ஊர் இதுதான். இவரது உறவினர்கள் இப்போது இங்கே வாழ்ந்துவருகிறார்கள். இவரது குடும்பத்தை ஓந்திரியர் என்று சொல்கிறார்கள். அதாவது ஓந்தரையர் என்பது சரியான சொல். இங்கே குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள் பெரும்பான்மையாக வாழ்ந்துவருகின்றனர். கார்த்திக் பிறந்தது என்னவோ ஊட்டிதான்.

முத்துராமனின் தந்தை ராதாகிருஷ்ணன். தாய் ரத்னாவதி. அப்பா அந்தக் காலத்திலேயே வழக்கறிஞர். இந்தத் தம்பதியின் மூத்த பிள்ளையாக 1929இல் இங்கே பிறந்துள்ளார். இவருடன் பிறந்தவர் கணேஷ். நடிகர் கார்த்திக்கை நவரச நாயகன் என்பார்கள். இவரது தந்தை முத்துராமனை நவரச திலகம் என்று அந்தக் காலத்தில் அழைத்தனர். இன்றைக்கும் இவர் பிறந்த கிராமம் தமிழ்நாட்டில் ஒரு குக்கிராமமாகத்தான் இருக்கிறது. சகஸ்ரநாமம் நடத்தி வந்த 'சேவா ஸ்டேஜ்' அமைப்பில் நாடக நடிகராக இருந்த முத்துராமன் பின்னாளில் சினிமாவுக்குள் சென்றார். முத்துராமன் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு ஜோடியாக நடித்தவர். 'பார் மகளே பார்', 'நெஞ்சில் ஓர் ஆலயம்', 'காதலிக்க நேரமில்லை', 'ஊட்டிவரை உறவு' எனப் பல ஹிட் படங்கள் கொடுத்தவர்.

"கார்த்திக் அப்பா முத்துராமனுடன் பிறந்தவர் மொத்தம் 3 பேர். அவர்தான் குடும்பத்தில் மூத்தவர். இரண்டாவது சகோதரர் துரை. இவரும் அவரது அண்ணனும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த அக்கா, தங்கையை திருமணம் செய்து கொண்டவர்கள். முத்தராமனுக்கு ஒரு தங்கையும் இருந்தார். அவரை ஒரத்தநாடு அடுத்து 6 கிமீட்டர் தூரத்தில் உள்ள ஊரில் கட்டிக் கொடுத்தார்கள். அவர் பெயர் மல்லிகா. அவர் மறைந்துவிட்டார்.
முத்துராமன் உயிருடன் இருந்த காலத்திலேயே சொந்த ஊரிலிருந்து யாரேனும் பார்க்கச் சென்னை சென்றால் முத்துராமனை பார்க்கவிடமாட்டார்கள். அவருக்கு இந்தக் கிராமத்தில் வீடு, வயல் எல்லாம் இருந்தது. அதை எல்லாம் விற்றுவிட்டார்கள். இந்த ஊரில் உள்ள கோயிலுக்குப் பங்கு இருக்கிறது. ஆனால், யாரும் தொடர்பு இல்லை" என்கிறார் அந்த ஊரில் வசித்து வரும் முதியவர்.

இப்போது முத்துராமன் வாழ்ந்த வீடு இல்லை. முற்றிலும் இடந்து தரைமட்டமாக ஆகிவிட்டது. ஆனால், இந்த நிலத்தின் பக்கத்தில் அவரது பங்காளிகள் குடும்பம் மொத்த 6 வீடுகள் உள்ளன. இங்கே முத்துராமனின் சகோதரர் வழியில் உறவினரான பாட்டி இங்கே வாழ்ந்து வருகிறார். இங்கே உள்ள கோயில் கும்பாபிஷேகம் நடைபெற்ற போது முத்திராமன் வந்ததாகத் தெரிவிக்கிறார். ஆனால், கார்த்திக்கோ அவரது பிள்ளைகளே ஊர் பக்கம் வந்ததில்லை என்கிறார் இந்தப் பாட்டி.

இதே ஊரில் உள்ள இளவழகி கோபிநாதன் என்பவர் முத்தராமனுக்கு உறவினர் என்கிறார். அவர் பேசும்போது கோயில் கும்பாபிஷேகத்திற்குப் பல ஆண்டுகள் முன்னதாக வந்த முத்துராமன், கலசத்திற்குள் கழற்றி போட்ட மோதிரத்தைச் சம்பிரதாயம் தெரியாமல் மீண்டு கொண்டு போய்விட்டார். அதை ஊரில் உள்ளவர்கள் ஒரு குற்றமாக இப்போது சொல்வார்கள். அவர் சென்னையிலிருந்தவர். ஊர் வழக்கம் தெரியாது செய்துவிட்டார் என்கிறார். மேலும் இவரது மகன்கள் கவுதம் கார்த்திக் நடித்த 'கடல்' படத்தைப் பார்த்துவிட்டு உறவினர் என்று வந்து வியந்து பேசியதை நினைவுக் கூறுகிறார்.

இந்தக் கிராமத்திற்கு கார்த்திக் வந்ததில்லை. ஆனால், மதுரையில் தான் அதிக முறை அவர் போய் வருகிறார் என்கிறார் அண்ணாதுரை என்பவர். இவர் மத்திய அரசுப் பணியில் சென்னை இருந்துள்ளார். கடந்த 3 ஆண்டுகளாக ஸ்டாலினுக்குப் பாதுகாப்புப் பணியிலிருந்துள்ளார். இப்போது ஓய்வுபெற்று சொந்த ஊர் வந்துவிட்டார். இவர் கார்த்திக்கை நேரில் சந்தித்து சொந்த கிராமத்திற்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ளார். அவர், 'கட்டாயம் வருகிறேன்' என்று சொன்னதோடு சரி. இந்தப் பக்கம் அவர் வரவே இல்லை என்றே கவலையாகச் சொல்கிறார்.












Click it and Unblock the Notifications