தில்லுடன் குரல் கொடுத்த தினகரன்! மீண்டும் கட்சி நிகழ்ச்சிகளில் பிஸி! அமமுக தொண்டர்கள் உற்சாகம்!
தஞ்சாவூர்: அமலாக்கத்துறை நோட்டீஸ் உள்ளிட்ட பல்வேறு இடர்பாடுகள் தன்னை சூழ்ந்தாலும் பெட்ரோல், டீசல் விலை உயர்வை குறிப்பிட்டு மத்திய அரசுக்கு எதிராக தில்லுடன் குரல் கொடுத்திருக்கிறார் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்.
இந்தி மொழி தொடர்பாக நேற்று அமித்ஷா பேசியது குறித்து தனக்கு சரியாக விவரம் தெரியவில்லை எனக் கூறி எடப்பாடி பழனிசாமி அது பற்றி கருத்துக் கூறுவதை தவிர்த்த நிலையில் தினகரனின் தஞ்சை பிரஸ்மீட் கவனிக்கத்தக்கது.
மீண்டும் கட்சி நிகழ்ச்சிகளில் பிஸியாக இருக்கத் தொடங்கிய தினகரனை கண்டு அமமுக தொண்டர்களும், நிர்வாகிகளும் உற்சாகம் அடைந்துள்ளனர்.

தஞ்சாவூர் நிகழ்ச்சி
தஞ்சாவூரில் நலத்திட்ட உதவிகள் வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக சென்ற தினகரன் அங்கு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், இன்னும் பழைய ஆட்சியாளர்களையே குறை கூறிக்கொண்டிருக்காமல் திமுக அரசு செயல்பட வேண்டும் எனவும் தேர்தலின் போது அளித்த வாக்குறுதிகளுக்கு நேர்மாறாக முதலமைச்சர் ஸ்டாலின் செயல்படுகிறார் எனவும் விமர்சித்தார்.

பெட்ரோல் டீசல்
பெட்ரோல், டீசல் விலை உயர்வால் விலைவாசி உயர்வு ஏற்படுவதாகவும் மத்திய அரசு எரிபொருள் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார். மத்திய அரசும் மாநில அரசும் ஒருவரை ஒருவர் குறைக் கூறிக்கொண்டிருக்காமல் ஓட்டுப்போட்டு தேர்வு செய்த மக்களுக்கு நன்மை செய்ய வேண்டும் எனக் கோரினார். கொரோனாவிலிருந்து இப்போது தான் மக்கள் மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பி வரும் சூழலில் எரிபொருள் விலை உயர்வு அவர்களுக்கு சுமையை அளிக்கக் கூடியதாக தெரிவித்தார்.

தினகரன் குரல்
பெட்ரோல் டீசல் விலை உயர்வால் ஏற்படும் பாதிப்புகள் பற்றி மத்திய அரசுக்கு தெரியாதது ஒன்றுமில்லை என்றும் இருப்பினும் அமமுக சார்பில் இந்த கோரிக்கை வைப்பதாகவும் கூறினார். பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எதிராக இதுவரை பிரதான எதிர்க்கட்சியான அதிமுக சார்பில் பெரியளவில் குரல் கொடுத்து, சொத்து வரி உயர்வை கண்டித்து நடத்திய ஆர்ப்பாட்டத்தை போல் எதுவும் செய்யாத நிலையில், தினகரன் இந்த விவகாரத்தில் மத்திய அரசுக்கு எதிராக குரல் கொடுத்திருப்பது கவனிக்கத்தக்கது.

நலத்திட்ட உதவிகள்
அமமுக சார்பில் நலத்திட்ட உதவிகள், நாளை முதல் ஆலோசனைக் கூட்டங்கள் என பிஸியாக செயல்படத் தொடங்கிய தினகரனை கண்டு அவரது கட்சி தொண்டர்கள் உற்சாகமடைந்துள்ளனர். இதனிடையே இரட்டை இலை வழக்கில் முக்கிய சாட்சியாக கருதப்பட்டவர் தற்கொலை செய்து கொண்டது தொடர்பான கேள்விக்கு, அவரை யார் என்றே தனக்குத் தெரியாத போது அதைப்பற்றி தன்னிடம் கேட்பதற்கு ஒன்றுமில்லை என மிஸ்டர் கூலாக தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications