“அடுத்த ஜென்மத்தில் விவசாயி குடும்பத்தில் பிறக்க வேண்டும்”.. பச்சை துண்டுடன் வந்து பேசிய விஜய்!
தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் செங்கிப்பட்டியில் தவெக நிர்வாகிகளை தவெக தலைவர் விஜய் இன்று சந்தித்தார். அப்போது பேசிய அவர், "அடுத்த ஜென்மத்தில் நான் விவசாயி குடும்பத்தில் பிறக்க ஆசைப்படுகிறேன். நானும் டெல்டா காரன் என யார் காதிலும் டால்டா ஊற்ற வரவில்லை." எனக் கூறினார்.
தமிழக சட்டசபை தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. இந்த தேர்தலில் முதல்முறையாக களம் கண்டுள்ள தமிழக வெற்றிக் கழகம் மிக தீவிரமாக பணியாற்றி வருகிறது. அக்கட்சியின் தலைவர் விஜய் மாவட்ட வாரியாக சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் தஞ்சாவூர் மாவட்டம் செங்கிப்பட்டியில் அக்கட்சியின் நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் இன்று நடைபெற்றது.

இதற்காக சென்னையில் இருந்து தனியார் விமானம் மூலம் திருச்சி வந்த விஜய் சாலை மார்க்கமாக நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு வருகை தந்தார். அவருக்கு வழி எங்கும் தொண்டர்கள் வரவேற்பளித்தனர். ஏராளமான விஜய் ரசிகர்கள், விஜய்யின் வாகனத்தை பின்தொடர்ந்து வந்தனர்.
தொடர்ந்து தவெக நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சியில் பேசிய விஜய், "வேலூரில் பேசும்போது தமிழ்நாடு தான் விஜய்.. விஜய் தான் தமிழ்நாடு" என சொன்னேன். விஜய் vs ஸ்டாலின் சார் என சொன்னேன். மக்களின் உண்மையான ஒரே பிரதிநிதி என்பதால் அப்படி சொன்னேன். கிரிக்கெட்டில் கூட தமிழ்நாடு அணியை, டெல்லி அணியால் தொட்டுக் கூட பார்க்க முடியாது. கிரிக்கெட்டில் சிஎஸ்கேவுக்கு எப்படி விசில் போடுவோமா, அதேபோல் தவெகவுக்கு விசில் போடப் போறாங்க.
தமிழ்நாட்டை காப்பாற்றுவது ஸ்டாலின், திமுக என்பதெல்லாம் இனி வொர்க் அவுட் ஆகாது. எனக்கும், மக்களுக்கும் நடுவில் யாராலும் நுழைய முடியாது. வீட்டுக்கு வீடு விஜய் என்பது இந்த தேர்தலில் 100 சதவிகிதம் உறுதியாகும். அடுத்த ஜென்மத்தில் நான் விவசாயி குடும்பத்தில் பிறக்க ஆசைப்படுகிறேன். நானும் டெல்டா காரன் என யார் காதிலும் டால்டா ஊற்ற வரவில்லை.
கடன் வாங்கி திமுக ஆட்சி குப்புறப்படுத்து விட்டது. விவசாயிகளுக்காக ஒரு போராட்டத்தில் கூட கலந்து கொள்ளவில்லை. அவர்கள் மீது குண்டர் சட்டம் போட்டது திமுக. மணல் மாஃபியா குடும்பத்திற்கு திமுக அரசு தான் உறுதுணையாக இருந்து வருகிறது. ஆட்சியின் கடைசி காலத்தில் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுவது ஏன் என கேள்வி எழுப்பிய விஜய், தவெக ஆட்சிக்கு வந்தவுடன் மிகப்பெரிய திட்டங்கள் உடனுக்குடன் கொண்டு வரப்படும்" எனப் பேசியுள்ளார் விஜய்.












Click it and Unblock the Notifications