ஓபிஎஸ் உடன் தினகரனை சந்திக்கச் செல்லாதது ஏன்? எடப்பாடி கிளப்பிய சந்தேகம்.. வைத்திலிங்கம் விளக்கம்!
தஞ்சாவூர் : டிடிவி தினகரன் - ஓபிஎஸ் சந்திப்பின்போது ஓபிஎஸ்ஸின் ஆதரவாளர்களான வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன், ஜேசிடி பிரபாகர் ஆகியோர் எங்கே சென்றனர் என எடப்பாடி பழனிசாமி சந்தேகம் கிளப்பிய நிலையில், அதற்கு ஓபிஎஸ் ஆதரவாளர் வைத்திலிங்கம் விளக்கம் அளித்துள்ளார்.
அதிமுக விவகாரத்தில் நீதிமன்றம், தேர்தல் ஆணையத்தில் அடுத்தடுத்து ஏற்பட்ட சறுக்கல்களால் மக்கள் மன்றத்தை நாடும் முடிவை எடுத்துள்ளார் ஓ.பன்னீர்செல்வம். இதற்கிடையே, டிடிவி தினகரனுடன் கைகோர்த்திருக்கிறார் ஓபிஎஸ். சென்னை அடையாறில் உள்ள அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் இல்லத்திற்கு சென்ற ஓ.பன்னீர்செல்வம் அவரை சந்தித்து பேசினார். இந்தச் சந்திப்பின்போது ஓபிஎஸ் உடன் பண்ருட்டி ராமச்சந்திரனும் இருந்தார்.

இந்நிலையில், சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி, "ஓபிஎஸ் - டிடிவி தினகரன் சந்திப்பானது காலியான கூடாரத்தில் ஒட்டகம் புகுந்ததை போன்று தான். மாயமானும் மண் குதிரையும் ஒன்று சேர்ந்தது போல தான் ஓபிஎஸ் - டிடிவி தினகரன் இணைப்பு. பண்ருட்டி ராமச்சந்திரன் எங்கே சென்றாலும் அந்த கட்சி அவரோடு முடிந்துவிடும். எந்த கட்சிக்கும் விசுவாசம் இல்லாமல் இருந்தவர் பண்ருட்டி ராமச்சந்திரன்.
டிடிவி தினகரன் உடனான சந்திப்பின்போது ஓபிஎஸ்ஸின் ஆதரவாளர்களாக இருக்கும் வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன், ஜேசிடி பிரபாகர் ஆகியோர் எங்கே சென்றனர்? அவர்கள் 3 பேரும் ஓ.பன்னீர்செல்வத்தை கைவிட்டு விட்டனர்." எனக் கூறினார் எடப்பாடி பழனிசாமி.
எடப்பாடி பழனிசாமியின் இந்தக் கருத்து ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள் இடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. ஓபிஎஸ் எங்கு சென்றாலும் உடன் நிற்கும் இவர்கள் மூவரும் டிடிவி தினகரன் உடனான சந்திப்பின்போது உடன் செல்லாதது, ஓபிஎஸ் அணியில் ஓட்டை விழுந்துள்ளதா என்ற கேள்வியை எழுப்பியது.
இந்நிலையில் ஓபிஎஸ் ஆதரவாளர் வைத்திலிங்கம் தஞ்சாவூரில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், "ஓ.பன்னீர் செல்வம் மற்றும் டிடிவி தினகரன் சந்திப்பு குறித்து எடப்பாடி பழனிசாமி கருத்து தெரிவித்து இருந்தார். அதில், நான், ஜேசிடி பிரபாகர், மனோஜ் பாண்டியன் ஆகியோர் ஓபிஎஸ் உடன் செல்லவில்லை என்றும், எங்களுக்கு இதில் உடன்பாடு இல்லை என்றும் தெரிவித்து இருந்தார். அதிமுக ஒன்று சேர்ந்து, மீண்டும் தமிழ்நாட்டில் அதிமுக ஆட்சிக்கு வர வேண்டும் என்ற நல்ல எண்ணத்தில் தான் ஓ.பன்னீர்செல்வம், டிடிவி தினகரனை சந்தித்தார்.
ஆனால், எங்களுக்கு அதில் விருப்பம் இல்லை என்று முன்னாள் முதல்வர் கற்பனையில் பேசுவது அவர் வகித்த பதவிக்கு அழகல்ல. டிடிவி தினகரன் - ஓபிஎஸ் முதன்முதலில் சந்திக்கிறார்கள். எனவேதான் மூத்த தலைவர்கள் மட்டும் செல்லட்டும், கும்பலாக செல்லவேண்டாம் என்றுதான், ஓபிஎஸ்சை தனியாக சென்று சந்திக்கச் சொன்னோம். நான், கு.ப.கிருஷ்ணன் உள்ளிட்டோர் சேர்ந்து பேசித்தான் ஓபிஎஸ் உடன் செல்லவில்லை.

ஒன்றுபட்டால்தான் உண்டு வாழ்வு என்பதை சிந்தித்தால் இன்று டிடிவி தினகரனுடன் சேர்ந்துள்ளோம். பொய் சொல்லி ஏதோ ஒரு சூழ்ச்சியில் தான் எடப்பாடி பழனிசாமி முதல்வர் ஆனார். மாயமான், மண் குதிரை இல்லை என்றால் இவர் முதல்வராக இருந்து இருக்க முடியாது. எடப்பாடி பழனிசாமி ஒரு சண்டிக் குதிரை. இந்தக் குதிரை எதற்கும் பயன்படாது.
ஜெயக்குமார் ஒரு விளையாட்டுப் பிள்ளை. அவரைப் பற்றி கருத்துக்கூற நான் விரும்பவில்லை. எடப்பாடி பழனிசாமிக்கு 2% வாக்கு கூட இல்லை. ஒபிஎஸ், டிடிவி தினகரன், சசிகலாவை தவிர்த்து அதிமுக ஆட்சி அமைக்க முடியாது. ஓபிஎஸ், டிடிவி தினகரனுக்கு மட்டுமே அதிமுக தொண்டர்களின் ஆதரவு உள்ளது. " எனத் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications