திடீர் மீட்டிங்கில் ‘ஆரத்தழுவி'.. அமமுக முக்கிய புள்ளியுடன் வைத்திலிங்கம்.. அரசியல் களத்தில் பரபர!
தஞ்சாவூர் : ஓபிஎஸ் ஆதரவாளரும், அதிமுக துணை ஒருங்கிணைப்பாளருமான வைத்திலிங்கம், இன்று அமமுக-வின் முக்கிய நிர்வாகி ஒருவரைச் சந்தித்து கைகுலுக்கி ஆரத்தழுவியுள்ளார்.
Recommended Video
அதிமுகவில் சூடுபிடித்துள்ள ஒற்றைத் தலைமை விவகாரத்தைத் தொடர்ந்து, ஓபிஎஸ் தரப்பினர் சசிகலா ஆதரவை நாடி வருவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.
இந்நிலையில், அ.ம.மு.க நிர்வாகியுடன் ஓ.பி.எஸ் ஆதரவாளரான வைத்திலிங்கம் அளவளாவியுள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
எல்லாத்துக்கும் 'இதுதான்’ காரணம்! ஓபிஎஸ் டீம் எடிப்பாடி டீமுக்கு தாவிய பின்னணி? இத யாரும் யோசிக்கலயே
ஆரத்தழுவிக்கொண்ட நிர்வாகிகள்
ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளரும், அதிமுக துணை ஒருங்கிணைப்பாளருமான வைத்திலிங்கம் எம்.எல்.ஏ, இன்று தஞ்சாவூரில் நடைபெற்ற திருமண நிகழ்வு ஒன்றில் பங்கேற்றார். இந்தத் திருமணத்தில் பங்கேற்ற அ.ம.மு.க துணைப் பொதுச் செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான ரங்கசாமியும், வைத்திலிங்கமும் ஒருவருக்கொருவர் கைகளைக் குலுக்கி ஆரத்தழுவிக் கொண்டனர்.
ரங்கசாமி
அ.ம.மு.க துணை பொதுச்செயலாளராக இருப்பவர் ரங்கசாமி. இவர் அ.தி.மு.கவில் தஞ்சை மாவட்ட செயலாளராக இருந்தார். கடந்த 2016 சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்டார். ஆனால், தேர்தல் தள்ளி வைக்கப்பட்டது. பின்னர், ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்தபோது நடந்த இடைத்தேர்தலில் ரங்கசாமி போட்டியிட்டு வெற்றி பெற்றார். பின்னர், டி.டி.வி.தினகரன் அணிக்குச் சென்றதால் தனது எம்.எல்.ஏ பதவியை இழந்தார். பின்னர் டிடிவி தினகரன் அமமுக தொடங்கியதும் கட்சியில் பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டார்.
திடீர் சந்திப்பு
அதிமுகவில் சூடுபிடித்துள்ள ஒற்றைத் தலைமை விவகாரத்தைத் தொடர்ந்து, கட்சியைக் கைப்பற்றுவதற்காக ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் சசிகலா ஆதரவை நாடி வருவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்நிலையில்தான், அ.ம.மு.க துணை பொதுச்செயலாளர் ரங்கசாமியை திருமண விழாவில் சந்தித்து கைகுலுக்கி ஆரத் தழுவியுள்ளார் அ.தி.மு.க துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம். இது லோக்கல் கட்சிக்காரர்களின் புருவத்தை உயரச் செய்துள்ளது.
சசிகலா ஆதரவு
டெல்டா மாவட்டமான தஞ்சையில் செல்வாக்கு பெற்றுள்ள வைத்திலிங்கம், சசிகலா தரப்பினரோடு இணக்கமான தொடர்பில் இருப்பதாக முன்பிருந்தே விமர்சிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், ஓ.பி.எஸ் ஆதரவாளராக உள்ள அவர், சசிகலாவின் ஆதரவை ஓபிஎஸ்ஸுக்கு பெற்றுத்தர முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக கிசுகிசுக்கப்பட்டு வருகிறது.
விரைவில் ரகசிய சந்திப்பு?
இந்நிலையில், அமமுக துணை பொதுச் செயலாளர் ரங்கசாமியை திருமண விழாவில் சந்தித்து ஆரத்தழுவி நலம் விசாரித்துக் கொண்டுள்ளனர். இது யதேச்சையான சந்திப்பாக இருந்தாலும் கூட, விரைவில் இருவரும் தனியாகச் சந்தித்து, அதிமுகவில் தற்போது நிலவி வரும் குழப்பங்கள் தொடர்பாக பேசக்கூடும் என்றும் கூறப்படுகிறது.
வைத்திலிங்கம்
இந்த திருமண விழாவில் பங்கேற்ற பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த வைத்திலிங்கம், "பொதுக்குழுவில் இல்லாத நபர்கள் சுமார் 600 பேர் பொதுக்குழு கூட்டத்திற்கு வந்ததால்தான் பிரச்சனை ஏற்பட்டது. ஓ.பன்னீர்செல்வத்துக்கு தமிழகம் முழுவதும் நல்ல செல்வாக்கு இருக்கிறது. அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு பிறகு தொண்டர்கள் மத்தியிலும் பொதுமக்கள் மத்தியிலும் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தின் செல்வாக்கு பல மடங்கு கூடியிருக்கிறது" என வைத்திலிங்கம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.