இனி நிம்மதி.. கேரளா செல்ல 3 வகை இ-பாஸ்கள்.. தமிழக தொழிலாளர்கள் மகிழ்ச்சி
தேனி: கேரளா மாநிலத்திற்கு செல்ல 6 மாதத்திற்கு பின் நெருக்கடி குறைந்துள்ளது. கேரளா செல்ல 3 வகை இ-பாஸ்கள் வழங்கப்பட்டுள்ளதால் தமிழகத்தைச் சேர்ந்த தோட்ட தொழிலாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் லட்சக்கணக்கான ஏக்கர் நிலத்தில் ஏலக்காய் விவசாயம் நடைபெறுகிறது. இங்குள்ள தோட்டங்களில் 70 சதவீதம் தேனி மாவட்டத்தைச் சேர்ந்தவர்களுக்கு சொந்தமானதாகும். இங்குள்ள தோட்டங்களில் பணிபுரிய தினசரி ஜீப்களில் ஏராளமான தொழிலாளர்கள், கம்பம் மற்றும் போடி, தேவாரம் பகுதியில் இருந்து சென்று வந்தனர்.
கொரோனா காரணமாக 6 மாதங்களாக ஊரடங்கால் தொழிலாளர்கள் கேரளா சென்று வர அனுமதி அளிக்கப்படவில்லை. இ பாஸ் அனுமதியில் கடும் கட்டுப்பாடுகள் இருந்ததால் தமிழக தோட்ட தொழிலாளர்கள் தினசரி சென்று வர முடியாத நிலை இருந்தது.
தமிழக தொழிலாளர்கள்
இந்நிலையில் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் தினசரி கேரளா சென்று திரும்பும் வகையில் தளர்வுகளுடன் கூடிய இ-பாஸ் நேற்று முதல் வழங்கப்பட்டுள்ளது. தமிழக தொழிலாளர்களுக்காக ரெகுலர் இபாஸ், ஷார்ட் டைம் இ பாஸ், டொமெஸ்டிக் இபாஸ் என 3 வகையான இ-பாஸ்ஸை கேரள அரசு வழங்குகிறது.
மாலையில் திரும்ப வேண்டும்
ரெகுலர் இ-பாஸ்: கேரளாவுக்கு வேலைக்கு வரும் தொழிலாளி ஆதார் மூலம் 30 நாட்களுக்கு விண்ணப்பித்து ரெகுலர் இ-பாஸ் பெறலாம். முதல் நாளில் மட்டும் சான்றிதழ் சரிபார்த்து டோக்கன் வழங்கப்படும். அடுத்த நாள் முதல் டோக்கன் என்ணை மட்டும் பதிவு செய்து கேரளா வரலாம். இவர்கள் காலையில் சென்று மாலையில் திரும்ப வேண்டும். தனிமைப்படுத்துதல் கிடையாது,
தனிமைப்படுத்துதல் கிடையாது
ஷார்ட் டைம் இ-பாஸ் : தமிழக விவசாயிகள், தொழிலாளர்கள் ஏலத்தோட்டங்களில் தங்கி வேலை செய்ய ஷார்ட் டைம் இ பாஸ் வழங்கப்படுகிறது. தனிமைப்படுத்துதல் கிடையாது.
7 நாட்கள் தனிமை
டொமெஸ்டிக் இ-பாஸ்: கேரளாவில் விவசாயம், கட்டுமானம் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு செல்லும் தொழிலாளர்கள் 6 மாதங்கள் தங்கி பணிபுரிய டொமெஸ்டிக் இ-பாஸ் வழங்கப்படுகிறது. இவர்களுக்கு 7 நாட்கள் தனிமைப்படுத்துதல் உண்டு. அதன்பின்னர் பணிகளை செய்யலாம். இந்த அறிவிப்பு தேனி மாவட்டத்தைச் சேர்ந்த தோட்டத் தொழிலாளர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.