தேனியில் கடத்தப்பட்ட 30 நாள் குழந்தை, பால் கேனில் இருந்து சடலமாக மீட்பு.. கதறி அழுத இன்ஸ்பெக்டர்
தேனி: தேனி மாவட்டம் கம்பம் அருகே காணாமல் போன 30 நாள் குழந்தை, வீட்டில் உள்ள பால் கேனில் சடலமாக மீட்கப்பட்டது. சிசிடிவி காட்சிகளை அடிப்படையாக கொண்டு அந்த வழியாக சென்ற குடுகுடுப்பைகாரர்களிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள். இதனிடையே குழந்தையை உயிருடன் மீட்க முடியாமல் இன்ஸ்பெக்டர் கதறி அழுத காட்சி வெளியாகி உள்ளது.
கேரளாவில் ஏலத்தோட்ட தொழிலாளர்களாக வேலை செய்து வருபவர்கள் சௌந்தரவேல் - பாண்டீஸ்வரி தம்பதியினர். இவர்கள் தேனி மாவட்டம் கம்பம் கிராம சாவடி பகுதியைச் சேர்ந்தவர்கள் ஆவார். இவர்களது மகள் சினேகா என்பவருக்கும் போடியைச் சேர்ந்த மணிகண்டன் என்பவருக்கும கடந்த ஓராண்டுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்த தம்பதி போடியில் வசித்து வருகிறார்கள்.

சினேகா வளைகாப்பு முடிந்து நிறைமாத கர்ப்பிணியாக இரண்டு மாதம் முன்பு தனது தாய் வீடான கம்பம் கிராமசவாடி பகுதிக்கு வந்தார். சினேகாவிற்கு கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு ஆண் குழந்தை பிறந்துள்ளது. பெற்றோர் கேரளாவில் தோட்ட வேலைக்குச் சென்றுவிட்டார்கள்.
சினேகா தனது குழந்தையுடன் தனது பாட்டியின் பாதுகாப்பில் இருந்து வந்தார். ஞாயிற்றுக் கிழமை காலை சினேகா, தனது குழந்தையை தொட்டிலில் தூங்க வைத்து விட்டு குளிப்பதற்காக சென்றிருக்கிறார். பாட்டி அருகில் உள்ள கடைக்குச் சென்றுவிட்டார்.
குளித்து முடித்துவிட்டு சினேகா திரும்பி வந்து பார்த்தபோது தொட்டிலில் குழந்தை இல்லை. இதனை கண்டுஅதிர்ச்சி அடைந்து தேடி பார்த்துள்ளார். கடைக்குச் சென்று திரும்பிய பாட்டியும் குழந்தையை எடுத்துச் செல்லவில்லை எனத் தெரிந்ததும் குழந்தையை காணாத சினேகா சுற்றி முற்றி தேடி பார்த்துவிட்டு, கதறி அழுதபடி வந்து தேனி மாவட்டம் கம்பம் தெற்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இதுகுறித்து உடனடியாக உத்தமபாளையம் டிஎஸ்பி மதுக்குமாரிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து டிஎஸ்பி மதுக்குமாரி, கம்பம் தெற்கு காவல் ஆய்வாளர் லாவண்யா ஆகியோர் விரைந்து வந்து குழந்தையை தேடி பார்த்தார்கள். ஒரு பக்கம் சினேகாவின் உறவினர்களும் குழந்தையை தேடும் பணியை தீவிரமாக செய்தனர,
சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது கடைசியாக குடுகுடுப்பைக்காரர் கடந்து சென்றது தெரியவந்தது. அவரை கம்பத்தில் எங்கு இருக்கிறார் என்று தீவிரமாக தேடி பிடித்து விசாரிக்க தொடங்கினர். அதேநேரம் வீட்டில் குழந்தை எங்காவது மறைத்துவைக்கப்பட்டுள்ளதா என்று தீவிரமாக காவலர்கள் தேடினர். அப்போது காவலர்கள் சினேகாவின் வீட்டில் இருந்த பால் கேன் ஒன்றில் குழந்தை கிடப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தனர்
இதையடுத்து அதிலிருந்து குழந்தையை மீட்டு கம்பம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.அங்கு குழந்தையை பரிசோதித்த டாக்டர்கள்குழந்தை ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர், கடத்தப்பட்டதாக கூறப்பட்ட குழந்தை வீட்டில் இருந்த பால்கேனிற்கு வந்தது எப்படி? குழந்தையை கடத்தியவர்கள் யார்? குழந்தை இறப்பிற்கு யார் காரணம் என்பது குறித்து தீவிரமாக விசாரணை நடந்து வருகிறது.
சினேகாவின் குடும்பத்தினர் அனைவரிடமும் தீவிர விசாரணை நடந்து வருகிறது. அதோடு, சிசிடிவி காட்சிகளைக் கொண்டு, குழந்தை கடத்தப்பட்ட நேரத்தில் அந்த வழியாக கடந்து சென்ற குறிசொல்லும் குடுகுடுப்பைக்காரரிடமும் தீவிர விசாரணை நடந்து வருகிறது. சினோகா குடும்பத்தினர், மற்றும் குடுகுப்பைகாரரிடம் நடந்து வரும் விசாரணை முடிந்த பின்னரே குழந்தை இறப்புக்கான காரணம் தெரியவரும் என்று போலீசார் தெரிவித்தனர். பிறந்து 30 நாட்களே ஆன குழந்தையை உயிருடன் மீட்க முடியாததால் காவல் ஆய்வாளர் லாவண்யா கதறி அழுதார். இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகி உள்ளது.












Click it and Unblock the Notifications