தேனியில் தங்க நகையை அடகு வைக்கும் போது செய்த சிறு தவறு.. 12 வருடமாக கனவுடன் காத்திருக்கும் மக்கள்
தேனி: தங்க நகையை அடகு வைக்கும் மக்கள் சரியான நிறுவனத்தில் வைக்க வேண்டும். ரிசர்வ் வங்கி அங்கீகாரம் பெற்ற நிதி நிறுவனங்களில் வைக்க வேண்டும். முடிந்த வரை பொதுத்துறை வங்கிகளில் தங்க நகைகளை அடகு வைப்பதே சிறந்தது. தேனியில் ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் அதிக பணம் தருகிறார்கள் என்று 12 வருடம் முன்பு அடகு வைத்த மக்கள், இன்று வரை தங்கள் நகைகளை மீட்க முடியாமல் அவதிப்பட்டு வருகிறார்கள்..அவர்கள் செய்த தவறு.. என்ன நடந்தது என்பதை பார்ப்போம்.
அதிக பணம் தருவதாகவும், வட்டி விகிதம் நம்ப முடியாத அளவிற்கு குறைவு என்றும் கூறி தேனி மாவட்டத்தில் பல்வேறு கிராமங்களில், நகரங்களில் பெரிய விளம்பரங்களுடன் நகை அடகு கடைகள் கடந்த 2012, 2013ம் ஆண்டுகளில் ஆரம்பிக்கப்பட்டன அப்படி, தேனி மாவட்டத்தில் கடந்த 2013-ம் ஆண்டு சில நகை அடகுக்கடை நிறுவனங்கள் தங்களிடம் பொதுமக்கள் அடகு வைத்த நகைகளை தனியார் நிதி நிறுவனங்கள், வங்கிகளில் மறுஅடகு வைத்து மோசடி செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.

அதுதொடர்பாக தேனி மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த மோசடியில் ஆயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டனர். பாதிக்கப்பட்ட மக்களுக்கு கோர்ட்டு அனுமதியுடன் நகைகளை திருப்பிக் கொடுக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில், இந்தவழக்கில் தொடர்புடைய ஒரு தனியார் நகை அடகுக்கடையில் நகைகளை அடகு வைத்த மக்கள் சிலர் கடந்த 12 ஆண்டுகளாக தங்களின் நகைகளை திரும்பப் பெற முடியாமல் தவித்து வருகிறார்கள்.
பாதிக்கப்பட்ட மக்கள், போடி தனியார் நகை அடகுக்கடையில் நகை அடகு வைத்து பாதிக்கப்பட்டோர் நலச்சங்கம் என்ற அமைப்பை தொடங்கி தங்களின் நகைகளை திருப்பித் தரக்கோரி கோரிக்கைகள் வைத்து வருகிறார்கள். ஆனால் இன்று வரை நகைகள் திரும்ப கிடைக்கவே இல்லை.. பாதிக்கப்பட்ட மக்கள் சிலர் தேனி கலெக்டர் அலுவலகத்துக்கு நேற்று வந்து புகார் அளித்தனர்.
தேனி மாவட்ட வருவாய் அலுவலர் ராஜகுமாரிடம் அவர்கள் தங்களின் கோரிக்கைகளை மனுவாக கொடுத்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறுகையில், "'நகை அடகு வைத்த 28 பேர் கடந்த 12 ஆண்டுகளாக நகைகளை திரும்பப் பெற முடியாமல் அலைக்கழிக்கப்பட்டு வருகிறோம். நாங்கள் 2012-ம் ஆண்டு நகை அடகு கடையில் நகைகளை அடகு வைத்தோம். அந்த நிறுவனம் நகைகளை தனியார் நிதி நிறுவனத்தில் அவற்றை மறு அடகு வைத்தது. போலீஸ் விசாரணைக்கு பிறகு எங்களின் நகைகளை திரும்பப் பெற கடந்த 2013-ம் ஆண்டு எங்களுக்கு மாவட்ட குற்றப்பிரிவில் டோக்கன் வழங்கப்பட்டது.
டோக்கனை கொண்டு சென்று நகைகளை திருப்ப முயன்றபோது அலைக்கழித்தனர். தற்போது வரை நகைகளை திரும்பப் பெற முடியவில்லை. பலமுறை மனுக்கள் கொடுத்தும் தீர்வு கிடைக்கவில்லை. எனவே நகைக்கடன் தொகையை பெற்றுக் கொண்டு எங்களின் நகைகளை திருப்பிக் கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" இவ்வாறு கூறியுள்ளனர்.












Click it and Unblock the Notifications