கொடியில கை வச்சிட்டாங்க.. எடப்பாடி அணியினருக்கு எதிராக திரண்டு வந்த அமமுக.. ஓபிஎஸ் டீம் ‘கப்சிப்’!
தேனி : தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் எம்ஜிஆர் பிறந்தநாள் விழாவில் எம்ஜிஆர் சிலை அருகே கொடி கட்டுவதில் அதிமுக எடப்பாடி பழனிசாமி அணியினருக்கும் அமமுகவினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. போலீசார் தலையிட்டு இரு தரப்பினரையும் சமாதானப்படுத்தினர்.
எடப்பாடி பழனிசாமி அணியினர், அமமுக கொடியை அகற்றியதை அறிந்து அங்கு வந்த அமமுகவினர் அதிமுக கொடியை அகற்றியதால் மோதல் ஏற்பட்டது.
அதிமுக எடப்பாடி பழனிசாமி அணியினருக்கும், அமமுகவினருக்கும் இடையே மோதல் ஏற்பட்ட நிலையில், ஓபிஎஸ் அணியினர் அமைதியாக வந்து எம்ஜிஆர் சிலைக்கு மரியாதை செலுத்தினர்.
அந்த 1 காரணம்.. கை கோர்க்கும் எடப்பாடி - ஓபிஎஸ் - சசிகலா.. அடுத்தடுத்து நடந்ததை கவனிச்சீங்களா? ஆஹா
கொடியை அகற்றிய ஈபிஎஸ் அணியினர்
மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் 106-வது பிறந்தநாள் விழா இன்று பல்வேறு தரப்பினரால் கொண்டாடப்பட்டது. தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் டிடிவி தினகரனின் அமமுகவைச் சேர்ந்த நிர்வாகிகள், தொண்டர்கள் எம்.ஜி.ஆர் சிலைக்கு மாலையணிவித்துச் சென்றபிறகு அடுத்து மாலை அணிவிக்க வந்த அதிமுக எடப்பாடி பழனிசாமி அணியினர் எம்ஜிஆர் சிலையருகே கட்டப்பட்டிருந்த அமமுக கட்சிக்கொடியை அகற்றினர்.
அதிமுக கொடி
இதனால் ஆத்திரமடைந்த அமமுகவினர் அங்கு வந்து அதிமுக கொடியை அகற்றினர். இதனால் இருதரப்பிற்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு பின்னர் அது மோதலாக முற்றியதால் அப்பகுதியில் கடும் பதற்றம் ஏற்பட்டது. இதையடுத்து போலீசார் தலையிட்டு சமாதானம் செய்து இரு கட்சிகளின் கொடிகளையும் எம்ஜிஆர் சிலைக்கு அருகே கட்ட ஏற்பாடு செய்தனர். இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.
அமைதியோ அமைதி ஓபிஎஸ்
அதிமுக ஈபிஎஸ் அணி - அமமுக இடையே தகராறு நடந்து கொண்டிருந்ததால், அதுவரை எம்ஜிஆர் சிலைக்கு அருகிலேயே வராமல் சிறிதுதூரம் தள்ளி நின்று காத்திருந்த ஓபிஎஸ் அணியின் தேனி மாவட்ட செயலாளர் சையது கான் தலைமையிலான அதிமுகவினர் ஆரவாரம் இல்லாமல் கோஷங்கள் ஏதும் எழுப்பாமல் அமைதியாக வந்து எம்ஜிஆர் சிலைக்கு மாலையணிவித்தனர்.
பதற்றம்
ஓபிஎஸ் அணியினர் மாலை அணிவித்து முடிந்தவுடன் அந்த இடத்தை விட்டு உடனடியாக கலைந்து சென்றனர். ஏற்கனவே கடுமையான பதற்றம் ஏற்பட்டு தணிந்த நிலையில் மீண்டும் பிரச்சனை ஏற்படாத வகையில் ஓபிஎஸ் அணியினர் அமைதியாக மாலையணிவித்துச் சென்றது அப்பகுதியில் இருந்தவர்களால் கவனிக்கப்பட்டது.