சட்டென காரிலிருந்து இறங்கிய முதலமைச்சர் ஸ்டாலின்... உசிலம்பட்டியில் நடந்தது என்ன?
மதுரை: சாலை மார்க்கமாக தேனியில் நடைபெறும் விழாவிற்கு மதுரையிலிருந்து புறப்பட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், திடீரென காரை நிறுத்தி உசிலம்பட்டி தீயணைப்புத்துறை அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்டார்.
தேனியில் நாளை நடைபெற இருக்கும் அரசு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முடிவடைந்த அரசு திட்டப்பணிகளை தொடங்கி வைக்கிறார்.
ஆண்டிப்பட்டி காவலர் குடியிருப்பையும், உசிலம்பட்டி தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலையத்தையும் பார்வையிட்டு ஆய்வு செய்தேன்.
— M.K.Stalin (@mkstalin) April 29, 2022
இந்த ஆய்வுகளில் பெறப்பட்டுள்ள உள்ளீடுகள் அந்தத் துறைகளின் மானியக் கோரிக்கையில் எதிரொலிக்கும்! pic.twitter.com/phU9yrgZKu
மேலும் புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்ட இருக்கும் முதலமைச்சர் ஸ்டாலின், பல்வேறு நலத்திட்ட உதவிளையும் வழங்க இருக்கிறார்.

தேனி, திண்டுக்கலில் அரசு விழா
தேனி அன்னஞ்சி பிரிவு அருகே பைபாஸ் சாலையில் நாளை காலை 10 மணிக்கு தொடங்கும் விழாவுக்கான ஏற்பாடுகள் பிரம்மாண்டமாக நடைபெற்றன. அதேபோல் மாலை திண்டுக்கலில் நடைபெற உள்ள அரசு விழாவில் பங்கேற்கும் அவர் ரூ.300 கோடி மதிப்பில் முடிவடைந்த திட்டப் பணிகளை தொடங்கி வைக்கிறார்.

தேனி பயணம்
இந்த நிலையில் விழாவில் பங்கேற்பதற்காக இன்று மாலை 5:30 மணியளவில் சென்னையிலிருந்து புறப்பட்டு மதுரைக்கு விமானம் மூலம் வந்தடைந்தார். மதுரை விமான நிலையத்தில் அவருக்கு திமுக நிர்வாகிகள் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனையடுத்து அங்கிருந்து காரில் புறப்பட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உசிலம்பட்டி வழியாக தேனிக்கு பயணித்தார்.

தீயணைப்பு அலுவலகத்தில் ஆய்வு
இதனிடையே கான்வாய் உசிலம்பட்டி அருகே சென்று கொண்டிருந்தபோது திடீரென காரை நிறுத்த சொன்ன முதலமைச்சர், அங்குள்ள தீயணைப்புத் துறை அலுவலகத்துக்கு சென்றார். அங்கு, பணியில் இருந்த முத்தழகு என்ற தீயணைப்பு வீரரிடம் "தீயணைப்பு நிலையத்தில் எத்தனை பேர் பணியில் உள்ளனர். மற்றும் குறைகள் ஏதும் உண்டா?" என கேட்டறிந்ததுடன் கோப்புகளை பார்வையிட்டார்.

தேனியில் தங்கும் முதலமைச்சர்
இந்த ஆய்வின்போது தமிழ்நாடு காவல்துறை தலைவர் சைலேந்திர பாபுவும் உடன் இருந்தார். அலுவலக கட்டிடம் சைலேந்திர பாபுவால் திறந்து வைக்கப்பட்டது என்பதால் அங்குள்ள கல்வெட்டு அருகே நின்று புகைப்படம் எடுத்துவிட்டு முதலமைச்சருடன் அவர் தேனி நோக்கி சென்றார். தேனியில் இரவு தங்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை அரசு விழாக்களில் பங்கேற்று ரூ.300 கோடி மதிப்பில் முடிவடைந்த திட்டப்பணிகளை தொடங்கி வைக்கிறார்.












Click it and Unblock the Notifications