பொறுத்தது போதும் என்று... திமுக அரசுக்கு எதிராக சீறிய அய்யாதுரை பாண்டியன்... காரணம் என்ன..?
தென்காசி: தென்றல் தவழும் தென்காசி என வர்ணிக்கப்படும் அந்த ஊரில் தான் இப்போது அனல் பறக்கும் அரசியல் சடுகுடு அரங்கேறி வருகிறது.
திமுக வர்த்தக அணியின் மாநில துணைச் செயலாளராக இருந்த அய்யாதுரை பாண்டியன், தமிழகத்தில் நடப்பது மக்களாட்சியா அல்லது மன்னர் ஆட்சியா என வினவியுள்ளார்.
திமுக மாவட்டச் செயலாளர்களும், ஒன்றியச் செயலாளர்களும் தங்கச்சுரங்கத்தை ஏலம் விடுவது போல் கிராமப்புற உள்ளாட்சித் தேர்தலில் பணத்தை வாரி கொட்டியதாக விமர்சித்துள்ளார்.

அய்யாதுரை பாண்டியன்
திமுக வர்த்தக அணியின் மாநில துணைச் செயலாளராக இருந்தவர் அய்யாதுரை பாண்டியன். குஜராத்தின் முன்னணி மின் உற்பத்தி நிறுவனம் ஒன்றில் சி.இ.ஒ.வாக இருந்துவிட்டு அரசியல்வாதியாக அவதாரம் எடுத்தவர். அதிமுகவிலிருந்து பலமுறை அழைப்பு விடுக்கப்பட்டும் அதனை திடமாக மறுத்து, தன்னை திமுகவில் இணைத்து செயலாற்றியவர் அய்யாதுரை பாண்டியன். கடையநல்லூர் தொகுதியை தனக்கு எப்படியும் ஸ்டாலின் கொடுப்பார் என்ற நம்பிக்கையில் அந்த தொகுதிக்குள் மட்டும் பல கோடிகளை கொரோனா காலத்தில் கரைத்தவர்.

மோதல்
அய்யாதுரை பாண்டியனிடம் இருக்கும் ஒரு குணம் என்னவென்றால், மக்களுக்கு எந்த நலத்திட்ட உதவிகள் வழங்கினாலும் தானே நேரடியாக சென்று கொடுக்க வேண்டும் என எண்ணுபவர். மாவட்டச் செயலாளர்களிடமோ, ஒன்றியச் செயலாளர்களிடமோ பணத்தை கையில் கொடுக்கமாட்டார். இதனால் திமுக மாவட்டச் செயலாளருக்கும் இவருக்கும் ஏழாம் பொருத்தமாகவே இருந்து வந்தது. சட்டமன்றத் தேர்தலில் கடையநல்லூர் தொகுதியை ஒரு வேளை கூட்டணிக் கட்சிக்கு ஒதுக்கினாலும் கூட, அம்பாசமுத்திரம் தொகுதியையோ, அல்லது தென்காசி தொகுதியையோ தனக்கு ஒதுக்கித் தர வேண்டும் என ஸ்டாலினிடம் நேர்காணலிலேயே சொல்லிவிட்டு வந்தவர்.

சீட் இல்லை
இதனிடையே திமுக வேட்பாளர்கள் பட்டியலை மு.க.ஸ்டாலின் தொலைக்காட்சி நேரலையில் வாசித்து முடித்த அடுத்த 3 மணி நேரத்தில், அமமுகவில் இணைந்ததோடு மட்டுமல்லாமல் கடையநல்லூர் தொகுதி அமமுக வேட்பாளராகவும் அறிவிக்கப்பட்டு அதிர்ச்சிக் கொடுத்தார் அய்யாதுரை பாண்டியன். கடையநல்லூர் தொகுதியில் கணிசமான வாக்குகளை பிரித்ததால் அந்த தொகுதியில் திமுக கூட்டணி வேட்பாளர் அபுபக்கர் தோல்வியை தழுவினார்.

நீக்கம் இல்லை
சீட் கிடைக்கவில்லை என்ற கோபத்தில் சென்ற அய்யாதுரை பாண்டியனை இதுவரை கட்சியிலிருந்து நீக்கப்பட்டதாக திமுகவும் அறிவிக்கவில்லை. இதனிடையே மீண்டும் அய்யாதுரை பாண்டியன் திமுகவில் இணைவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதற்கு மாறாக திமுக அரசுக்கு எதிராக சீறியிருக்கிறார். ஊரக உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் குளறுபடிகள் நிகழ்ந்துள்ளதாகவு புகார் கூறியுள்ள அவர் தென்காசி மாவட்டத்தில் மறு தேர்தல் நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்துள்ளார்.

அதிமுக ஆட்சி
அதிமுக ஆட்சியில் நடைபெற்ற ஊரக உள்ளாட்சித் தேர்தலில், திமுக சார்பில் போட்டியிட யாரும் முன்வரவில்லை என்றும் தாம் தான் அதற்கு கூட ஆள் பிடித்ததாகவும் கூறியிருக்கும் இவர், இப்போது தங்கச்சுரங்கத்தை ஏலம் விடுவது போல் ஊரக உள்ளாட்சித் தேர்தலை வைத்து திமுக மாவட்டச் செயலாளர்களும், ஒன்றியச் செயலாளர்களும் பணத்தை வாரி குவித்துள்ளதாக சாடியுள்ளார். தென்காசி மாவட்டத்தில் சுயேச்சைகளாக தனது ஆதரவாளர்களை இவர் தேர்தலில் நிற்க வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications