தேனி காவல் நிலையத்தில் ஆட்டோ ஓட்டுநர் மீது கொடூரத் தாக்குதல்.. வெளியான சிசிடிவி.. போலீசார் டிரான்ஸ்பர்
தேனி: தேனி அருகே காவல் நிலையத்தில் ஆட்டோ ஓட்டுநரை கொடூரமாகத் தாக்கிய விவகாரத்தில் 5 போலீசார் ஆயுதப்படைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
திருப்புவனம் அஜித்குமார் கஸ்டடி மரணம் தமிழ்நாட்டை உலுக்கிய நிலையில் தேனி மாவட்டம் தேவதானப்பட்டி காவல் நிலையத்தில் கடந்த ஜனவரி மாதம் ஆட்டோ ஓட்டுநரை போலீசார் சரமாரியாக தாக்கிய சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சம்பந்தப்பட்ட காவல் ஆய்வாளர் மற்றும் காவலர்களை ஆயுதப்படைக்கு மாற்றி எஸ்பி சிவபிரசாத் உத்தரவிட்டார். 6 மாதங்களுக்கு முன்பு நடந்த சம்பவத்தின் வீடியோ தற்போது வெளியான நிலையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
தேனி மாவட்டம் தேவதானப்பட்டி பகுதியில் ஆட்டோ ஓட்டுநரான ரமேஷ் என்பவர் ஜனவரி 14 ஆம் தேதி மதுபோதையில் பொது இடத்தில் அநாகரீகமாக நடந்துகொண்ட புகாரில் தேவதானப்பட்டி காவல் நிலையத்திற்கு விசாரணைக்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.
தேவதானப்பட்டி காவல் நிலையத்தில் வைத்து ஆட்டோ ஓட்டுநர், காவலர்களால் தாக்கப்பட்ட சிசிடிவி காட்சி தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
இதையடுத்து இந்த விவகாரத்தில் ஏடிஎஸ்பி தலைமையில் விசாரணை நடத்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவிட்டுள்ளார்.
தொடர்ந்து இந்த விவகாரத்தில் காவல் ஆய்வாளர் உள்பட 5 பேர் ஆயுதப்படைக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். காவல் ஆய்வாளர் அபூதுல்யா, காவலர்கள் மாரிச்சாமி, பாண்டி, வாலி உள்பட 5 பேரை ஆயுதப்படைக்கு மாற்றி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவிட்டுள்ளார்.
அஜித்குமாரின் மரணம் தமிழ்நாட்டை உலுக்கிய நிலையில் தேனி மாவட்டம் தேவதானப்பட்டி காவல் நிலையத்தில் 14.1.2025 அன்று பட்டியலின இளைஞரை போலீசார் சரமாரியாக தாக்கிய சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.#Theni #Ajithkumar #PoliceStation #ViralWatch #OITamil pic.twitter.com/FGSNohhD1L
— Oneindia Tamil (@thatsTamil) July 2, 2025
இதுதொடர்பாக தேனி மாவட்ட காவல்துறை விடுத்துள்ள செய்திக் குறிப்பில், "ரமேஷ் என்கிற லெப்ட் என்பவர் கடந்த 14.01.2025 ஆம் தேதி 12.30 மணியளவில் தேவதாவப்பட்டி அரிசிக்கடை பேருந்து நிறுத்தம் அருகில் பொதுமக்கள் ஒன்று கூடி பொங்கள் விழா கொண்டாடி கொண்டிருந்தபோது குடிபோதையில் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் இடையுறு ஏற்படுத்திக்கொண்டும், அசிங்கமான செயல்களை செய்து கொண்டு போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்திக் கொண்டிருந்தார்.
தகவலின் அடிப்படையில் தேவதானப்பட்டி காவல் அலுவலர்கள் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்திக் கொண்டிருத்தவரை பிடிக்க முயன்றபோது காவலர்களுடன் பிரச்சனை செய்த அவரை காவல் நிலையம் கொண்டு வந்தபோது மேற்படி நபர் காவல் நிலையத்திலும் தொடர்ந்து குடிபோதையில் தகராறு செய்துள்ளார். அவரை ஆய்வாளர் மற்றும் உடன் பணிபுரிந்த காவலர்கள் கட்டுப்படுத்தியுள்ளனர்.
மேலும் அவர் மீது தேவதானப்பட்டி காவல் நிலைய சூ.எண் 13/2025 பிரிவு 296(டு) பிரகாரம் வழக்கு பதிவு செய்து பின்பு முறையாக நிலைய பிணையில் விடுவிக்கப்பட்டார். மேற்படி எதிரியை காவல் நிலையத்தில் வைத்து கட்டுப்படுத்த முயற்சித்த போது அதிகப்படியான பலப்பிரயோகம் பயன்படுத்தப்பட்டுள்ளது என்ற விவரம் தெரியவருகிறது. மேலும் இச்சம்பவம் குறித்து எந்தவொரு புகாரும் கொடுக்கப்படவில்லை.
மேலும் இது சம்பந்தமாக விசாரணை செய்து அறிக்கை சமர்ப்பிக்க கூடுதல் காவல் கண்காணிப்பாளர் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் சமூக வலைதளங்களில் தேவதானப்பட்டி காவல்நிலையத்தில் எதிரியை தாக்கியது சம்மந்தமாக பரப்பப்பட்டு வரும் வீடியோ குறித்து மேற்கூறிய விளக்கம் இப்பத்திரிக்கை செய்தி மூலம் தெரியப்படுத்தப்படுகிறது. விசாரணை அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.
இதற்கிடையே இந்த சம்பவம் தொடர்பாக தேவதானப்பட்டி காவல் ஆய்வாளர் அபூதுல்யா, மற்றும் காவலர்கள் மாரிச்சாமி, பாண்டி மற்றும் வாலி உள்பட 5 பேர் தேனி மாவட்ட ஆயுதப்படைக்கு மாற்றம் செய்து எஸ்பி சிவபிரசாத் உத்தரவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications