முன்னாள் முதல்வர் ஓ பன்னீர் செல்வத்தின் தாயார் காலமானார்
தேனி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருந்த முன்னாள் முதல்வர் ஓ பன்னீர் செல்வத்தின் தாயார் பழனியம்மாள் உயிரிழந்தார்.
தேனி: வயது முதிர்வு மற்றும் உடல்நலக்குறைவால் தேனியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருந்த முன்னாள் முதல்வர் ஓ பன்னீர் செல்வத்தின் தாயார் பழனியம்மாள் இன்று இரவு உயிரிழந்தார்.
தமிழ்நாடு முன்னாள் முதல்வர் ஓ பன்னீர் செல்வம். அதிமுக விவகாரத்தில் தொடர்ந்து சட்ட போராட்டம் நடத்தி வருகிறார்.
இவரது தாயார் பழனியம்மாள் (வயது 95). வயது முதிர்வு மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக பழனியம்மாளின் உடல் நிலை கடந்த சில நாட்களாக மோசமாகி வந்தது.

ஆஸ்பத்திரியில் அனுமதி
இதையடுத்து தேனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் நேற்று முன் தினம் பழனியம்மாள் அனுமதிக்கப்பட்டார். பழனியம்மாளுக்கு ரத்த அழுத்தம் குறைவாக இருந்ததால் அவருக்கு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் தனது தாயாரை பார்ப்பதற்காக ஓ பன்னீர்செல்வம் பெரியகுளம் சென்றார். அங்கு மருத்துவமனைக்கு நேரில் சென்ற ஓ பன்னீர் செல்வம் தாயாரின் உடல் நலம் குறித்து விசாரித்தார்.

சிகிச்சை பலனின்றி காலமானார்
தொடர்ந்து ஓ பன்னீர்செல்வம், பொதுக்குழு வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் தீர்ப்பு அளித்ததாலும் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாள் இன்று கொண்டாடப்பட்டதாலும் அதில் பங்கேற்பதற்காக சென்னை புறப்பட்டார். இந்த நிலையில் தான் தேனி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பழனியம்மாள் திடீரென சிகிச்சை பலனின்றி காலமானார். தாயார் மறைவு செய்தி கேட்டதும் கலங்கிப் போன ஓ பன்னீர் செல்வம் உடனடியாக பெரிய குளம் விரைந்துள்ளார்.

கலங்கிப்போன ஓ பன்னீர் செல்வம்
பெரியகுளத்தில் ஓ பன்னீர் செல்வத்தின் தாயார் இறுதிச்சடங்கு நடைபெற உள்ளதாக முதல் கட்ட தகவல்கள் கூறுகின்றன. முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாளான இன்று தாயார் மறைவு அடைந்தது ஓ பன்னீர் செல்வத்திற்கும் மேலும் வருத்தம் அளித்து இருப்பதாக சொல்லப்படுகிறது. ஏற்கனவே பொதுக்குழு வழக்கு தீர்ப்பு பின்னடைவாக அமைந்தத நிலையில், இன்று தாயார் மறைவு அடைந்த செய்தி ஓ பன்னீர்செல்வத்தை கலங்க வைத்துள்ளது.

5 மகன்கள் மற்றும் 4 மகள்கள்
பழனியம்மாளுக்கு ஓ பன்னீர்செல்வம், ஓ ராஜா, ஓ சண்முகசுந்தரம், ஓ சுசேந்திரன், ஓ பாலமுருகன் என 5 மகன்கள் மற்றும் 4 மகள்கள் உள்ளனர். பழனியம்மாள் உடலுக்கு இறுதிச்சடங்குகள் நாளை சொந்த ஊரான பெரிய குளத்தில் நடைபெற உள்ளது.












Click it and Unblock the Notifications