திருமணத்திற்கு பெண் தேடிய தேனி இன்ஜினியர்.. ஒரே பொய்யில் 88 லட்சம் பறித்த பெண்.. கடைசியில் ட்விஸ்ட்
தேனி: திருமண தகவல் மையம் மூலம் பெண் தேடுவோர் கண்டிப்பாக கவனமாக இருக்க வேண்டும்.. தேனியை சேர்ந்த இன்ஜினியரை ஒரு கும்பல் நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு ஏமாற்றி உள்ளது. தொழில் அதிபர் மகனான அவருக்கு 32 வயது ஆகிறது. திருமண தகவல் மையம் மூலம் பெண் தேடியவரிடம் 88 லட்சம் பணத்தை பெண் பெயரில் பறிக்கப்பட்டுள்ளது. அவர்களால் இதுவரையில் பணத்தை மீட்கவே முடியவில்லை.. இனிக்க இனிக்க பேசி ஏமாற்றிய கும்பலை பற்றி இந்த செய்தி தொகுப்பில் பார்ப்போம்.
தேனியை சேர்ந்த தொழில் அதிபர் ஒருவர் தனது 32 வயது மகனுக்கு பெண் பார்த்துள்ளார். இன்ஜினியரான 32 வயது இளைஞருக்கு பெண் தேவை என்று பிரபல மேட்ரிமோனியல் ஆப் ஒன்றில் தங்களது விவரங்களை பதிவு செய்தார். அவருக்கு அந்த செயலி மூலம் சில பெண்களின் விவரங்கள் பரிந்துரை செய்தார்கள். அதில், ஒரு பெண்ணின் விவரங்கள் திருமண பொருத்தம் இருப்பதாக கூறப்பட்டிருந்தது.

அதன்பேரில் அவர் அந்த பெண்ணின் செல்போன் எண்ணுக்கு தொடர்பு கொண்டு பேசியிருக்கிறார்கள். எதிர்முனையில் பேசிய பெண் தனது விவரங்களை கூறினாராம். செல்போன் மூலமும், வாட்ஸ்-அப் வீடியோ கால் மூலமாகவும் அவர் அந்த பெண், தேனி இன்ஜினியரிடம் அடிக்கடி இனிக்க இனிக்க பேசி பழகி வந்தாராம். ஒரு கட்டத்தில் அந்த பெண்ணும் அவரை திருமணம் செய்து கொள்வதாக உறுதி அளித்தாராம்.
நன்றாக பேசி பழகி வந்த அந்த பெண், கிரிப்டோ வர்த்தகம் மூலம் தான் சம்பாதித்து வருவதாகவும், அதில் நல்ல லாபம் கிடைப்பதாகவும் தேனி இன்ஜினியரிடம் கூறினார். ஒரு கட்டத்தில் அந்த பெண், தனது தந்தை பங்குச்சந்தையில் நஷ்டம் அடைந்து விட்டதாக கூறினாராம். பின்னர் அவரிடம், கிரிப்டோ வர்த்தகம் தான் நல்ல லாபம் தருவதாக கூறியிருக்கிறார். மேலும், அந்த வாலிபரையும் கிரிப்டோ வர்த்தகத்தில் முதலீடு செய்யுமாறு ஆசையை தூண்டினாராம்.
அந்த பெண்ணின் பேச்சைக் கேட்டு அவர், கிரிப்டோ வர்த்தகத்தில் முதலீடு செய்ய தேனி இன்ஜினியர் முடிவு செய்தாராம். அந்த பெண் தெரிவித்த இணையதள செயலி மூலமாக அவர் முதலீடு செய்துள்ளாரம். தேனி இன்ஜினியர் தனது வங்கிக் கணக்கில் இருந்து 25 தவணையாக மொத்தம் ரூ.88 லட்சத்து 58 ஆயிரத்து 988 முதலீடு செய்தாராம். ஆனால் அப்படி முதலீடு செய்த பணத்தை திரும்ப பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதற்கிடையே கிரிப்டோவில் 88 லட்சம் பணம் போட்ட பிறகு, திருமண தகவல் செயலியில் இருந்து அந்த பெண்ணின் விவரங்கள் மாயமாகி இருந்தது. பின்னர் அந்த பெண்ணை தொடர்பு கொள்ள முயற்சித்த போது அவரால் முடியவில்லை. இதனால், தன்னிடம் மோசடி செய்யப்பட்டதை தேனி என்ஜினியர் உணர்ந்தார்.
இதுகுறித்து தேனி சைபர் கிரைம் காவல் நிலையத்தில், பாதிக்கப்பட்ட தேனி இன்ஜினியர் நடந்த சம்பவங்கள் அனைத்தையும் கூறி புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். விசாரணையில், அவர் பணம் அனுப்பிய வங்கிக் கணக்குகள் 2 பெண்களின் பெயரில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டிருந்தது. அந்த பெண்களை கண்டுபிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்.
அப்போது, ஈரோடு வி.வி.சி.ஆர்.நகரை சேர்ந்த 30 வயதாகும் நந்தகோபால் என்பவர் தங்கள் பெயரில் வங்கிக் கணக்குகள் தொடங்கி அதன் விவரங்களை வாங்கிக் கொண்டதாகவும், அதற்கு கமிஷனாக ரூ.2 ஆயிரம் கொடுத்ததாகவும் தெரிவித்தனர். அதன்பேரில், நந்தகோபாலை பிடித்து போலீசார் விசாரித்துள்ளனர்.
அவர் இதுபோன்ற வங்கிக் கணக்கு விவரங்களை விலைக்கு வாங்கி அவற்றை ஈரோடு கிரிணாம்பாளையத்தை சேர்ந்த 33 வயதாகும், கோவை காந்திபுரத்தை சேர்ந்த பத்மநாபன் ஆகியோரிடம் கொடுத்து பணம் பெற்றதும் தெரியவந்தது. மேலும் இந்த மோசடிக்கு கிரிணாம்பாளையத்தை சேர்ந்த 32 வயதாசுகும் சிவா என்பவரும் உடந்தையாக இருந்துள்ளார். இதையடுத்து யுவராஜன், பத்மநாபன், சிவா ஆகியோரையும் போலீசார் பிடித்து விசாரித்தனர்.
தோண்ட தோண்ட பூதம் வெளிவந்த கதையாக, நடந்த விசாரணையில், யுவராஜன், பத்மநாபன் ஆகியோர் கம்போடியோ நாட்டை சேர்ந்த மோசடி கும்பல்களுடன் நேரடி தொடர்பில் இருப்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து இந்த வழக்கில் நந்தகோபால், யுவராஜன், பத்மநாபன், சிவா ஆகிய 4 பேரையும் போலீசார் கைது செய்து தேனிக்கு அழைத்து வந்தனர். அவர்களிடம் மேலும் நடத்திய விசாரணையில், திருமண தகவல் செயலி பெயரில் இதுபோன்று அதிக அளவில் மோசடி நடந்து வருவதாகவும், அதன் பின்னணியில் ஒரு பெரிய கும்பல் இயங்கி வருவதும் கண்டுபிடிக்கப்பட்டது.
பாதிக்கப்பட்ட தொழில் அதிபரின் மகனிடம் பேசியது பெண் அல்ல என்றும், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பெண்ணின் பெயரில் வீடியோ கால் மற்றும் செல்போன் உரையாடலில் ஈடுபட்டு மோசடிக்கு வலைவிரித்து தேனி என்ஜினியரிடம் 88 லட்சத்தை அந்த கும்பல் பறித்ததும் விசாரணையில் தெரியவந்தது.
கைதான 4 பேரிடம் இருந்தும் ரூ.3 லட்சத்து 90 ஆயிரம், 6 செல்போன்கள், 29 ஏ.டி.எம். கார்டுகள், 18 வங்கி காசோலை புத்தகங்கள், 12 வங்கிக் கணக்கு புத்தகங்கள், 46 சிம் கார்டுகள் மற்றும் கணக்கு விவரங்கள் அடங்கிய 3 ஆவணங்கள் ஆகியவற்றை தேனி சைபர் கிரைம் போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி தேக்கம்பட்டியில் உள்ள மாவட்ட சிறையில் போலீசார் அடைத்தனர். இந்த வழக்கில் தொடர்புடைய மேலும் சிலரை தேனி போலீசார் தேடி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications