தேனியில் நட்சத்திர ஓட்டலில் ஓபிஎஸ்- செல்லூர் ராஜு திடீர் சந்திப்பு.. பின்னணி என்ன?
தேனி: தேனியில் துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வத்தை,கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு தனியாக சந்தித்து பேசியுள்ளார். இந்த சந்திப்பின் பின்னணி என்ன, எதற்காக சந்தித்தார்கள் என்பது குறித்து தெரியவில்லை.
கடந்த செப்டம்பர் 28ம் தேதி நடந்த செயற்குழு கூட்டத்தில் துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் இந்த முறை தன்னை வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.
இதற்கு அப்போது பதில் அளித்த எடப்பாடி பழனிசாமி, தான் இப்போது நன்றாக ஆட்சி செய்து வருவதால தன்னையே முதல்வர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என்றார். இரு தரப்பிலும் காரசாரமான விவாதங்கள் நடந்தன.
அமைச்சர்கள் ஆதரவு
கூட்டத்தில் பேசிய 99 சதவீதம் பேரும் முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமியை முன்னிறுத்த வேண்டும் என்றே குரல் எழுப்பியதாக கூறப்பட்டது போதாதகுறைக்கு, அமைச்சர் உதயகுமார், திண்டுக்கல் சீனிவாசன் ஆகியோரும் வெளிப்படையாகவே முதல்வராக எடப்பாடி தான் வர வேண்டும் என்ற கூறினார். இதனால் முதல்வர் வேட்பாளர் அறிவிப்பு தள்ளிப்போனது.
தனித்தனி ஆலோசனை
முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஒரு அணியாகவும், ஓ பன்னீர்செல்வம் தலைமையில் ஒரு அணியாகவும் முதல்வர் வேட்பாளர் விவகாரத்தில் மோதல் எழுந்தது. துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுடன் பெரியகுளத்தில் ஆலோசனை நடத்தினார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
வழிகாட்டுக்குழு
அக்டோபர் 7ம் தேதி முதல்வர் வேட்பாளர் அறிவிக்க வேண்டிய நிலையில், அக்டோபர் 6ம் தேதி வேலுமணி, தங்கமணி உள்ளிட்ட மூத்த அமைச்சர்கள் களம் இறங்கி ஓ பன்னீர்செல்வத்திடம் பல மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது வழிகாட்டு குழு அமைக்க வலியுறுத்தினார். இதன்படி அதிமுகவில் 11 பேர் கொண்ட வழிகாட்டு குழு அமைக்கப்பட்டது. இருவரும் சமாதானம் அடைந்தனர்.
ஓபிஎஸ் அறிவிப்பு
அதன்பின்னர் அக்டோபர் 7ம் தேதி முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமியை ஓ பன்னீர்செல்வம் அறிவித்தார். முதல்வர் எடப்பாடி, 11 பேர் கொண்ட வழிகாட்டுக்குழுவை அறிவித்தார்.இந்தகுழுவில் ஓபிஎஸ் தரப்பில் 5 பேரும், எடப்பாடி தரப்பில் 6 பேரும் அறிவிக்கப்பட்டனர். அத்துடன் பிரச்சனை முடிந்தது.
தேனியில் நடந்த சந்திப்பு
இந்நிலையில் துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வத்தை சந்திக்க கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ நேற்று தேனி வந்தார். விருந்தினர் மாளிகையில் தங்கியிருந்த ஓ பன்னீர்செல்வத்தை அப்போது சந்திக்கவில்லை. அதன்பிறகு தேனி பழனிசெட்டிபட்டியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் இருவரும் சந்தித்து கொண்டனர். இந்த சந்திப்பின் ரகசியம் என்ன? ஏன் சந்தித்து கொண்டார்கள் என்பது குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை. இதனால் தேனியில் பரபரப்பு ஏற்பட்டது.