ஒரே ஒரு ரயில்வே மேம்பாலம்.. மொத்த தேனி நகரின் வியாபாரமும் காலி.. ஸ்தம்பிக்கும் வாகனங்கள்
தேனி: தேனியில் ஒரே ஒரு ரயில்வே மேம்பாலம் தான் கட்டுகிறார்கள்.. அதற்காக கடந்த 4 நாட்களாக போக்குவரத்து வழித்தடம் மாற்றப்பட்ட நிலையில், நகர வியாபாரிகளின் மொத்த வியாபாரமும் காலியாகிவிட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேம்பால பணி ஆமை வேகத்தில் நடப்பதால் பொதுமக்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.
தேனியில், மதுரை சாலையில் ரயில்வே மேம்பாலம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இந்த பாலம் அமைக்கும் பணிக்காக அப்பகுதியில் சர்வீஸ் ரோடு அமைக்கப்பட்டு வருகிறது. இதன் காரணமாக கடந்த ஜூலை 19-ந் தேதி முதல் வருகிற ஜூலை 28-ந்தேதி வரை தேனி நகரில் போக்குவரத்து வழித்தடம் மாற்றம் செய்யப்படும் என்று மாவட்ட கலெக்டர் ஷஜீவனா அறிவித்துள்ளார்.

அதன்படி கடந்த 19-ந் தேதி முதல் தேனி நகரில் போக்குவரத்து வழித்தடம் மாற்றப்பட்டுள்ளது. இந்த போக்குவரத்து வழித்தடம் மாற்றத்தால் தினமும் காலை முதல் இரவு வரை தேனி நகரில் பெரியகுளம் சாலை, புறவழிச்சாலை, புதிய பஸ் நிலையம் பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. ரயில் வரும் நேரங்களான காலை, மாலை நேரங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. நெரிசலை சீரமைக்கவும், போக்குவரத்தை ஒழுங்குபடுத்தவும் ஏராளமான போலீசார் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
ரயில்வே கேட்டை கடந்து தான் தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு போக முடியும் என்கிற நிலையில், இந்த நெரிசல் காரணமாக நோயாளிகளை ஏற்றிச் செல்லும் ஆம்புலன்சுகளும் நெரிசலில் சிக்கி தவிக்கின்றன. இதேபோல் பள்ளி, கல்லூரி வாகனங்களும் காலை, மாலை நேரங்களில் சிக்கிக் கொள்வதால், தாமதமாக பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் நிலை ஏற்படுகிறது.

நேற்று ரயில்வே சிக்னல் முடிந்துதும் பகலில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. புதிய பஸ் நிலையம் அருகே சிவாஜி நகர் சாலையிலும் வாகனங்கள் நீண்ட தூரம் அணிவகுத்து நின்றதால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டனர். இதனிடையே ரயில்வே மேம்பாலம் அமைக்கும் பணி ஆமை வேகத்தில் நடப்பதால் வாகன ஓட்டிகள் கவலை அடைந்துள்ளனர்.
தேனியில் அரண்மனைப்புதூர் விலக்கில் இருந்து பங்களாமேடு நோக்கி செல்லும் சாலையில் புதிய சாலை அமைக்கும் பணிகள் நடைபெறாத காரணத்தால் வாகன ஓட்டிகள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். போக்குவரத்து வழித்தடம் மாற்றத்தால் நெரிசலில் சிக்கி மக்கள் பரிதவித்து மக்கள் பணிகளை திட்டமிட்ட வேகத்தில் முடிக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளனர்.
இதனிடையே தேனியில் போக்குவரத்து வழித்தடம் மாற்றம் காரணமாக நேரு சிலை சிக்னல் பகுதியில் இருந்து மதுரை சாலைக்கு வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. புதிய பஸ் நிலையத்தில் இருந்து ஒரு வழிப்பாதையாக மட்டும் மதுரை சாலையில் பஸ்கள், இலகுரக வாகனங்கள் இயக்கப்படுவதால், மக்கள் நடமாட்டம் குறைந்துள்ளது. இதனால் தேனி நகரில் அனைத்து விதமான கடைகளிலும் வியாபாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக வியாபாரிகள் கவலை தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications