பிரச்சாரத்திற்கு குறுக்கே வந்து விழுந்த அந்த கேள்வி.. "நேரம் பார்த்து" அடிக்குறீங்க.. சிரித்த ஓபிஎஸ்
தேனி: தேனி மாவட்டத்தில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், "நேரம் பார்த்து அடிக்கிறீங்கப்பா.." என்று சொல்ல கூட்டத்தில் கலகலப்பு ஏற்பட்டது.
Recommended Video
போடிநாயக்கனூர் தொகுதியில் போட்டியிடுகிறார் ஓ.பன்னீர்செல்வம். இதையொட்டி நேற்று தேனி மாவட்டத்தில் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.
தேனி ஒன்றியத்துக்கு உட்பட்ட உப்பார்பட்டி, பாலகுருநாதபுரம் உள்ளிட்ட பல பகுதிகளில் திறந்தவெளி ஜீப்பில் நின்றபடி அவர் பிரச்சாரம் செய்தார்.
வீடு கட்டிக் கொடுத்தோம்
இந்த பிரச்சாரத்தின்போது அதிமுக அரசு செய்த மக்கள் நல பணிகளை அவர் பட்டியலிட்டார். தேனி மாவட்டத்தில் மட்டும், ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில் 2000 வீடுகள் கட்டி கொடுக்கப்பட்டுள்ளன. இன்னும் 2400 வீடுகள் கட்டப்பட உள்ளன. பேறுகால நிதி உதவி 1000 என்ற அளவிலிருந்து 18 ஆயிரம் ரூபாய் என்ற அளவுக்கு உயர்த்தியுள்ளது அதிமுக அரசு என்றார் ஓ.பன்னீர்செல்வம்.
பெரியார் சமூக நீதி
அண்ணன்கள் பைக் ஓட்டும்போது தங்கச்சிகள் பின்னால் உட்கார்ந்து செல்வதை பார்த்திருப்பீர்கள். ஆனால் அதிமுக அரசின் மானிய விலை ஸ்கூட்டர் திட்டத்தால் தங்கைகள் வாகனம் ஓட்ட, அண்ணன்கள் பின்னால் அமர்ந்து பயணித்துக் கொண்டிருக்கிறார்கள். இதுதான் பெரியார் கண்ட சமூகநீதி கனவு, பெண் சுதந்திரம். அதை இந்த அரசுதான் செயல்படுத்தி உள்ளது.
மின் வெட்டு
திமுக ஆட்சியில் மின்சாரத்துறை அமைச்சராக இருந்தவர் ஆற்காடு வீராசாமி. அவர் ரொம்ப நல்ல மனிதர் என்பதால் சொன்னது சொன்னபடி பலிக்கும். மின்தட்டுப்பாடு காரணமாக திமுக மீண்டும் ஆட்சிக்கு வராது என்று அவர் சொன்னார், அது போல பத்து வருடமாக அந்த கட்சி ஆட்சிக்கு வரமுடியவில்லை என்று கிண்டலாக கூறினார் ஓ.பன்னீர்செல்வம்.
ஜல்லிக்கட்டு
இதனிடையே, ஜல்லிக்கட்டு விளையாட்டுக்கு காங்கிரஸ் திமுக அரசு ஆட்சி காலத்தில் தடை விதிக்கப்பட்டதாகவும், தான் முதல்வராக இருந்த போது பிரதமர் மோடியிடம் பேசி 24 மணி நேரத்தில் நான்கு அரசாணைகள் வெளியிட்டு ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்பட்டதையும் குறிப்பிட்டு பெருமிதம் தெரிவித்தார் பன்னீர்செல்வம்.
நேரம் பார்த்து அடிக்கிறீங்களேப்பா
அப்போது கூட்டத்தில் இருந்த சில மாணவர்கள் ..ஐயா "12ம் வகுப்பில் அனைவரையும் ஆல் பாஸ் செய்ய உத்தரவு போடுங்கள்.." என்று கூட்டத்திலிருந்து கோஷம் போட்டனர். இது ஓபிஎஸ் காதுகளில் விழுந்தது. உடனடியாக உங்கள் கோரிக்கை பற்றி முதலமைச்சருடன் கலந்து பேசி கண்டிப்பாக நடவடிக்கை எடுப்பேன் என்றார். அத்தோடு விட்டார்களா மாணவர்கள்.. "நம்ம ஊரில் விளையாட்டு மைதானம் தேவை.." என்று அடுத்தாற்போல் ஒரு கோஷம் போட்டனர். ஓ பன்னீர்செல்வம் "நிச்சயம் அமைத்துக் கொடுக்கிறேன்" என்றார். அப்புறம் என்ன நினைத்தாரோ தெரியவில்லை.. இப்படியே விட்டால் ஒவ்வொரு கோரிக்கையாக இந்த இளைஞர்கள் முன் வைக்க ஆரம்பித்து விடுவார்கள் என்று நினைத்தார் பன்னீர்செல்வம். அதனால், அவரே குறுக்கிட்டு, "நேரம் பார்த்து அடிக்கிறீங்கப்பா.." என்று தனக்கே உரித்தான சிரிப்புடன் சொல்ல, அங்கு கூடியிருந்தவர்கள் மத்தியில் கலகலப்பு ஏற்பட்டது..