எடப்பாடிக்கு எதிராக ஓபிஎஸ் டீமின் ‘ஸ்கெட்ச்’.. "பேராசை பழனிசாமி வெளியேறு!" - பரபர போஸ்டர் யுத்தம்!
தமிழ்நாடு முழுவதும் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக போஸ்டர்கள் பரபரக்கின்றன.
தேனி : எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் ஓ.பன்னீர்செல்வம் அணியினர் போஸ்டர்களை ஒட்டி வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. துரோகி என்றும், அதிமுகவின் தோல்விக்குக் காரணம் எடப்பாடி பழனிசாமி என்றும் விமர்சித்து போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.
அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி கை ஓங்கியுள்ள நிலையில், அவரை விமர்சிக்கும் வகையில் போஸ்டர்களை ஒட்டும் திட்டத்தைக் கையில் எடுத்துள்ளது ஓ.பன்னீர்செல்வம் அணி.
இந்த போஸ்டர்களைக் கண்ட எடப்பாடி பழனிசாமி அணியை சேர்ந்த அதிமுகவினர் அதிர்ச்சி அடைந்து, காவல் நிலையத்தில் புகார் அளித்து வருகின்றனர்.

ஓபிஎஸ் - ஈபிஎஸ்
ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுகவில் ஏற்பட்ட குழப்பத்தைத் தொடர்ந்து, எடப்பாடி பழனிசாமி முதலமைச்சர் ஆனார். தனியாகச் செயல்பட்ட ஓபிஎஸ், பின்னர் ஈபிஎஸ்ஸுடன் இணைந்த நிலையில், சசிகலா கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார். அதிமுகவில் ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வமும் இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமியும் பணியாற்றி வந்தனர். ஆட்சியில் முதலமைச்சராக எடப்பாடி பழனிசாமியும், துணை முதலமைச்சராக ஓ.பன்னீர்செல்வமும் பணியாற்றினர். ஆட்சி காலம் முடிவடைந்த நிலையில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் அதிமுகவின் ஓபிஎஸ் - ஈபிஎஸ் இடையே மோதல் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து, இரு தரப்பினரும் தனித்தனி அணிகளாகச் செயல்பட்டு வருகின்றனர்.

ஈரோட்டில் தோல்வி
பொதுக்குழுவைக் கூட்டி, ஓபிஎஸ்ஸை கட்சியை விட்டு நீக்கிவிட்டு, இடைக்கால பொதுச் செயலாளராக பொறுப்பேற்றார் எடப்பாடி பழனிசாமி. இதற்கு எதிராக நீதிமன்றம் சென்றார் ஓபிஎஸ். சமீபத்தில் வந்த உச்ச நீதிமன்ற தீர்ப்பின் மூலம் எடப்பாடி பழனிசாமி வசமே அதிமுக இருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்து ஓபிஎஸ் தொடர்ந்த வழக்கு நிலுவையில் இருக்கிறது. இதனிடையே சமீபத்தில் நடைபெற்ற ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் தென்னரசு, காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனிடம் படுதோல்வியை தழுவினார். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தோல்வி எடப்பாடி பழனிசாமிக்கு சறுக்கலாக அமைந்துள்ளது. ஓபிஎஸ் - ஈபிஎஸ் பிளவே இந்த படுதோல்விக்குக் காரணம் என விமர்சிக்கப்படுகிறது.

ஓபிஎஸ் அணி பிளான்
இந்நிலையில், எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக ஓபிஎஸ் தரப்பினர் அடுத்தகட்ட நடவடிக்கைகளில் இறங்கியுள்ளனர். அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக ஓபிஎஸ் ஆதரவாளர்கள் பல்வேறு மாவட்டங்களில் போஸ்டர்கள் ஒட்டி தங்களின் எதிர்ப்பைக் காட்டி வருகின்றனர். எடப்பாடி பழனிசாமியை துரோகி என்று விமர்சித்து, அதிமுக தொண்டர்கள் மத்தியில் விவாதத்தை உருவாக்கும் வகையில் போஸ்டர்களை ஒட்டி வருகின்றனர். இது தொடர்பான போஸ்டர்கள் சமூக வலைதளங்களிலும் வைரலாகி வருகிறது.

பதவிவெறி பழனிசாமியே
தேனி மாவட்டம் கடமலைக்குண்டு பகுதியில் அதிமுகவின் இடைக்கால பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. அந்த போஸ்டர்களில் "அதிமுகவின் நிரந்தர பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை நீக்கிவிட்டு பொய்வேஷம் போடும் பதவிவெறி பழனிசாமியே! அதிமுகவை விட்டு வெளியேறு! வெளியேறு!" என்ற வாசகங்கள் இடம்பெற்றிருந்தது. மேலும் தேனி மாவட்ட அதிமுக எம்.ஜி.ஆர் இளைஞர் அணி சார்பில் ஒட்டப்பட்டுள்ள இந்த போஸ்டர்களில் ஓபிஎஸ் அணியின் மாவட்ட செயலாளர் சையதுகான், எம்ஜிஆர் இளைஞர் அணி மாவட்ட செயலாளர் சிவக்குமார் ஆகியோர் பெயரும் இடம்பெற்றுள்ளது.

கழகத்தை விட்டு வெளியேறு
இதேபோல, திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் எடப்பாடி பழனிசாமியை கட்சியில் இருந்து வெளியேறுமாறு வலியுறுத்தி போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. அந்த போஸ்டரில்
"எட்டு தோல்வி நாயகன் எடப்பாடியே!
தங்கமகன் ஓபிஎஸ் கையெழுத்தால் பதவி பெற்ற தறுதலையே
கழகத்தை விட்டு உடனே வெளியேறு!
வெட்கம், மானம், சூடு, சொரணையற்ற எடப்பாடி
பின்னால் செல்லும் 62 எம்எல்ஏக்களே பதவியை விட்டு விலகு
கழகத்தை விட்டு வெளியேறு.. மக்களை சந்தித்து மீண்டு வா என்றும் அஇஅதிமுக உண்மை தொண்டர்கள் வேடசந்தூர் சட்டமன்ற தொகுதி திண்டுக்கல் கிழக்கு மாவட்டம்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

பேராசைப்படும் பழனிசாமி
கரூர் மாவட்டத்தில் எடப்பாடி பழனிசாமியை விமர்சித்து ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்களில், அதிமுகவை 8 முறை படுதோல்வி பெறச்செய்து ஜெயலலலிதாவின் நிரந்தர பொதுச்செயலாளர் பதவிக்கு பேராசைப்படும் துரோகி எடப்பாடியை கண்டிக்கிறோம்!
வெளியேறு! வெளியேறு! அதிமுக சட்ட விதிக்கு முரணாக சமத்துவ பேரியக்கத்தை தனது இயக்கமாக மாற்றிய எடப்பாடியே கட்சியை விட்டு வெளியேறு! இப்படிக்கு கரூர் மேற்கு மாவட்ட, மாநகர அதிமுக உண்மை தொண்டர்கள் என்று அந்த போஸ்டரில் குறிப்பிடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications