ஆண்டிப்பட்டியில் ஆரம்பமே அமர்களம்.. புது டாஸ்மாக் கடைக்கும் பூஜை கூட போடலை.. சபாஷ் பெண்கள்
தேனி: டாஸ்மாக் கடை அமைக்க கடும் எதிர்ப்பு தெரிவித்து தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே கிராமத்தைச் சேர்ந்த பெண்கள் மதுபாட்டில்கள் ஏற்றி வந்த வேனை சிறைபிடித்து போராட்டம் நடத்தினார்கள். இந்த போராட்டத்தில் டாஸ்மாக்கிற்கு வந்த லாரி,மதுபானங்களை இறக்காமல் அப்படியே திருப்பி அனுப்பி வைக்கப்பட்டது. டாஸ்மாக் கடைகளை எந்த காரணம் கொண்டும் திறக்க விட மாட்டோம் என்று பெண்கள் கூறினார்கள்.
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே மறவபட்டி கிராமத்தில் டாஸ்மாக் மதுபான கடை செயல்பட்டு வருகிறது. கடந்த 10 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் இந்த கடையை, அருகில் உள்ள அனுப்பப்பட்டி என்ற கிராமத்துக்கு மாற்ற டாஸ்மாக் நிர்வாகம் முடிவு செய்தது. இதையடுத்து அனுப்பப்பட்டியில் புதிய கடை தொடங்குவதற்காக கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டது.

ஆனால் அங்கு டாஸ்மாக் கடை தொடங்க போகிறது என்பதை அறிந்த அப்பகுதி பெண்கள் மற்றும் மாணவ-மாணவிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இந்தநிலையில் எதிர்ப்பை மீறி புதிய கடையை தொடங்குவதற்காக நேற்று காலை தேனியில் இருந்து மினி வேனில் மதுபாட்டில்கள் கொண்டுவரப்பட்டன.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் அனுப்பப்பட்டியை சேர்ந்த பெண்கள், டாஸ்மாக் கடை முன்பு திரண்டார்கள். மேலும் அங்கு வந்த மினி வேனை சிறைபிடித்தனர். பின்னர் டாஸ்மாக் கடை அமையவுள்ள இடம், பெண்கள் மற்றும் மாணவ-மாணவிகள் நடமாடும் பகுதியாக இருக்கிறது என்று எததிர்ப்பு தெரிவித்தனர். மேலும் இங்கு டாஸ்மாக் கடை அமைக்கப்பட்டால் பெண்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் ஏற்படும். எனவே டாஸ்மாக் கடையை அமைக்கும் நடவடிக்கை கைவிடக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டார்கள்.
இதையடுத்து டாஸ்மாக் ஊழியர்கள், போராட்டம் நடத்திய பெண்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அவர்களிடம், பெண்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பெண்கள் கடும் எதிர்ப்பை தொடர்ந்து டாஸ்மாக் கடைக்கு மதுபாட்டில்கள் ஏற்றி வந்த லாரி திருப்பி அனுப்பி வைக்கப்பட்டது. போராட்டம் குறித்து கூறிய அனுப்பப்பட்டி கிராமத்தில் டாஸ்மாக் கடை தொடங்க எந்த காரணம் கொண்டும் அனுமதிக்க மாட்டோம் என்றும், அவ்வாறு கடை அமைக்கப்பட்டால் தொடர் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று திட்டவட்டமாக தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications