தேனியில் தாலிக்கட்டும் நேரத்தில் கல்யாணத்தை நிறுத்திய புதுப்பெண்.. ஆடிப்போன அமெரிக்க மாப்பிள்ளை
தேனி: தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி பகுதியை சேர்ந்த ஒரு பட்டதாரி வாலிபர் அமெரிக்காவில் உள்ள பன்னாட்டு நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். அமெரிக்காவில் உள்ள தனது மகனுக்கு புதுச்சேரியைச் சேர்ந்த பெண்ணை திருமணம் செய்து வைக்க முடிவு செய்தனர். திருமண ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடந்தது. ஆனால் தாலிக்கட்டும் நேரத்தில் திருமணத்தை நிறுத்திய மணப்பெண்ணால் அமெரிக்க மாப்பிள்ளை ஆடிப்போனார்.
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி பகுதியை சேர்ந்த ஒரு பட்டப்படிப்பு முடித்த கார்த்திக் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) அமெரிக்காவில் உள்ள நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். அவருடைய பெற்றோர், கார்த்திக்கிற்கு திருமணம் செய்து வைக்க பெண் தேடி வந்தனர். ஒரு கட்டத்தில் அவரது பெற்றோர், திருமண தகவல் மையம் மூலம் மணப்பெண் தேடியிருக்கிறார்கள்.. அப்போது புதுச்சேரி மாநிலத்தை சேர்ந்த ஒரு பெண் வீட்டாரிடம் திருமண பேச்சுவார்த்தை நடத்தினர்.

இந்தநிலையில் இரு தரப்பிற்கும் சம்மதம் தெரிவித்தனர். ஆண்டிப்பட்டி அருகே, திருமண ஏற்பாடுகள் தடபுடலாக நடந்து வந்தது. திருமணப்பத்திரிகை அச்சடிக்கப்பட்டு உற்றார், உறவினர்களுக்கு வழங்கப்பட்டிருந்தது.. இதைத்தொடர்ந்து திருமண விழா, ஆண்டிப்பட்டி அருகே ஒரு தனியார் திருமண மண்டபத்தில் நேற்று நடைபெற தயாராகியது. முன்னதாக நேற்று முன்தினம் மணமக்களுக்கு நிச்சயதார்த்தம் நடந்தது.
அப்போது மணமக்களின் பெற்றோர்களுக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு வாக்குவாதமாக மாறியிருக்கிறது.. இதையடுத்து அருகில் இருந்த உறவினர்கள் இருதரப்பினரையும் சமாதானப்படுத்தி உள்ளார்கள். அதன்பிறகு திருமண ஏற்பாடு மீண்டும் தீவிரமாக நடந்தது.
இந்தநிலையில் நேற்று காலை சொந்த பந்தங்கள் சூழ மணமக்கள் மணமேடையில் அமர்ந்ததிருந்தார்கள். மந்திரங்கள், வாத்தியங்கள் முழங்கி கொண்டிருந்தது. அப்போது மணமகன் தாலியை எடுத்து மணப்பெண்ணுக்கு கட்ட சென்றார். மணமேடையில் இருந்து மணப்பெண் திடீரென எழுந்தார். தொடர்ந்து மணப்பெண் இந்த திருமணத்தில் தனக்கு விருப்பமில்லை என்று கூறினார். இதனைக்கேட்ட மாப்பிள்ளை மற்றும் உறவினர்கள் ஆடிப்போனார்கள். இதனால் திருமண மண்டபத்தில் சலசலப்பு ஏற்பட்டது.
இதற்கிடையே இரு வீட்டார் இடையே சமரச முயற்சியில் உறவினர்கள் ஈடுபட்டார்கள். ஆனால் பேச்சுவார்த்தை அனைத்தும் தோல்வியில் முடிந்தது. பின்னர் அந்த திருமணம் நிறுத்தப்பட்டது. இதையடுத்து மணமகன் தரப்பில் திருமண ஏற்பாட்டிற்காக செய்த செலவுக்கு மணமகள் வீட்டாரிடம் நஷ்டஈடாக கேட்டார்கள். மணமகள் குடும்பத்தினரும் குறிப்பிட்ட தொகையை கொடுத்துவிட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றார்கள். தாலி கட்டும் நேரத்தில் அமெரிக்க மாப்பிள்ளையிடம், தனக்கு திருமணத்தில் விருப்பமில்லை எனக்கூறி, மணப்பெண் எழுந்து திருமணத்தை நிறுத்திய சம்பவம் ஆண்டிபட்டியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அமெரிக்க மாப்பிள்ளை, கல்யாணம் நடக்காத நிலையில் சோகத்துடன் திரும்பி சென்றார்.












Click it and Unblock the Notifications