ஓபிஎஸ் மகன் மட்டும் ஜெயிச்சிடட்டும்.. நான் அரசியலை விட்டே விலகிடுறேன்.. தேனியில் ஆர்.பி.உதயகுமார்
தேனி: இப்போது தேர்தல் நடத்தி அதில் ஓபிஎஸ் மகன் ஓ ரவீந்திரநாத் வெற்றி பெற்றால் நான் பொது வாழ்க்கையிலிருந்து விலகுகிறேன் என தேனியில் முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் சவால் விடுத்துள்ளார்.
Recommended Video
தமிழகத்தில் மின் கட்டண உயர்வு குறித்து அதிமுக நேற்றைய தினம் ஆர்ப்பாட்டம் நடத்துவதாக இருந்தது. ஆனால் அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி டெல்லி சென்றதால் அந்த ஆர்ப்பாட்டம் 27 ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் டெல்லியில் சில கசப்பான சம்பவங்களால் எடப்பாடி பழனிச்சாமி தனது டெல்லி நிகழ்ச்சிகளை பாதியிலேயே முடித்துக் கொண்டு நேற்று முன் தினமே சென்னை திரும்பினார். இதையடுத்து நேற்றைய தினம் தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் மாவட்டச் செயலாளர்கள் , முன்னாள் அமைச்சர்கள் தலைமையில் போராட்டம் நடைபெற்றது.

ஓபிஎஸ் சொந்த மாவட்டம்
இந்த நிலையில் ஓபிஎஸ்ஸின் சொந்த மாவட்டமான தேனியில் இன்றைய தினம் ஆர்ப்பாட்டம் நடத்த எடப்பாடி பழனிச்சாமி அணியினர் திட்டமிட்டிருந்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்தும் பொறுப்பு மாஜி அமைச்சர் ஆர் பி உதயகுமாரிடம் ஒப்படைக்கப்பட்டது. ஆர் பி உதயகுமார் ஏற்கெனவே தேனி மக்களவைத் தேர்தலில் ஓபிஎஸ் மகன் ஓபிஆருக்காக தேர்தல் பணியாற்றிய அனுபவம் இருக்கிறது. அத்துடன் அந்த மாவட்ட அதிமுகவினர் பெரும்பாலானோரை ஆர்பி உதயகுமாருக்கு தெரியும்.

பொறுப்பு
இதனால் அவரிடம் அந்த பொறுப்பு வழங்கப்பட்டிருந்தது. ஓபிஎஸ் கோட்டையில் அவரே அசந்து போகும் அளவுக்கு பெரிய அளவில் கூட்டத்தை கூட்டி தென் மாவட்டங்களில் ஓபிஎஸ்ஸின் செல்வாக்கை சரிய வைக்க திட்டமிட்டிருந்தனர் எடப்பாடி பழனிச்சாமி அணியினர். இந்த நிலையில் இன்றைய தினம் முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

ஆர் பி உதயகுமார்
இந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய ஆர் பி உதயகுமார், தேனி மக்களவை தொகுதியில் உண்மையான அதிமுக தொண்டர்களின் கடும் உழைப்பால் ஓபிஎஸ் மகன் ஓ பி ரவீந்திரநாத் எம்பியாக வெற்றி பெற்றார். நான் சவால் விடுகிறேன், இப்போது தேர்தல் நடத்தி அதில் ஓபி ரவீந்திரநாத் போட்டியிட்டு வெற்றி பெற முடியுமா?

துரோக சிரிப்பு ஓபிஎஸ்
அவ்வாறு வெற்றி பெற்றால் நான் அரசியலை விட்டே விலகுகிறேன். ஓபிஎஸ் எப்போதும் சிரித்த முகத்தோடு இருக்கிறார் என்கிறார்கள், ஆனால் அது துரோக சிரிப்பு. தனது சுயநலத்திற்காக மட்டுமே ஓபிஎஸ் போராடுவார் என ஆர் பி உதயகுமார் கடுமையாக விமர்சனம் செய்தார்.












Click it and Unblock the Notifications