பயங்கர ஷாக்.. ஐஎஸ் பயங்கரவாத அமைப்புக்கு ஆள் அனுப்பியவர் கைது? தேனியில் என்ஐஏ அதிரடி - யார் இவர்?
தேனி: தேனி மாவட்டம் உத்தமபாளையத்தில் பதுங்கி இருந்த ராமநாபுரத்தை சேர்ந்த இம்ரான் கான் என்பதை என்ஐஏ அதிகாரிகள் இன்று அதிரடியாக கைது செய்துள்ளனர். இந்நிலையில் தான் இம்ரான் கான் குறித்த திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
தேனி மாவட்டத்தில் உத்தமபாளையம் உள்ளது. இந்நிலையில் தான் இன்று அதிகாலையில் உத்தமபாளையத்தில் திடீரென்று என்ஐஏ எனும் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் அதிரடியாக சோதனை நடத்தினர்.

உத்தமபாளையத்தில் உள்ள ஒரு வீட்டில் என்ஐஏ அதிகாரிகள் நடத்திய இந்த சோதனை என்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் மக்கள் குழம்பி போயினர்.
இந்த சோதனையின் முடிவில் அங்கு பதுங்கி இருந்ததாக கூறி ஒருவரை என்ஐஏ அதிகாரிகள் கைது செய்தனர். விசாரணையில் அவர் இந்தியாவுக்கு இலங்கையில் இருந்து சட்டவிரோதமாக ஆட்களை அழைத்து வந்ததாகவும், ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்புக்கு ஆட்சேர்த்ததாகவும் தகவல்கள் வெளியாகின.
மேலும் கைதானவர் ராமநாதபுரத்தை சேர்ந்த இம்ரான் கான் என்பதும், அவர் சட்டவிரோதமான நடவடிக்கையில் தொடர்ந்து ஈடுபட்டு வந்துள்ளார் என்பதும் தெரியவந்தது. . இதையடுத்து என்ஐஏ அதிகாரிகள் கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக தீவிரமாக கண்காணித்து வந்துள்ளனர்.
அப்போது அவர் இலங்கையில் இருந்து சட்டவிரோதமாக அவர் மக்களை இந்தியாவுக்கு அழைத்து வந்துள்ளதும், தடை செய்யப்பட்ட அமைப்பை சேர்ந்தவரோடு தொடர்பில் இருந்ததும் தெரியவந்தது. குறிப்பாக இலங்கையில் இருந்து ஏராளமானவர்களை கள்ள படகில் ராமநாதபுரத்துக்கு வரவழைத்து பெங்களூர் உள்பட பிற இடங்களுக்கு அனுப்பி வைத்ததாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் தான் இம்ரான் கான் தேனி மாவட்டம் உத்தமபாளையத்தில் பதுங்கி இருப்பதை என்ஐஏ அதிகாரிகள் கண்டுபிடித்தனர். இதையடுத்து இன்று அதிகாலையில் அவர் தங்கிய இடத்தில் என்ஐஏ அதிகாரிகள் அதிரடியாக நுழைந்து சோதனை நடத்தி அவரை கைது செய்துள்ளனர். இதையடுத்து மேல் விசாரணைக்காக அவரை என்ஐஏ அதிகாரிகள் தேனி மாவட்டம் உத்தமபாளையத்தில் இருந்து மதுரைக்கு அழைத்து சென்றுள்ளனர்.
இந்த சம்பவம் உத்தமாபாளையத்தில் கைது செய்யப்பட்டு இருப்பது என்பது அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கிடையே இன்னொரு தகவலும் வெளியாகி உள்ளது. அதாவது கைது செய்யப்பட்ட நபர் இந்தியாவில் தடை செய்யப்பட்ட அமைப்பை சேர்ந்தவருடன் தொடர்பில் இருந்துள்ளார்.
இலங்கையில் உள்ள மக்களுக்கு வேலை உள்ளிட்ட பிற வாய்ப்புகளை பெற்று தருவதாக கூறி ஏமாற்றி கள்ளப்படகில் தமிழ்நாட்டின் ராமநாதபுரத்துக்கு அழைத்து வந்து பெங்களூர் வழியாக மங்களூருக்கு அனுப்பினார். மங்களூரில் உரிய ஆவணங்கள் இன்றி இலங்கை மக்கள் இருந்த நிலையில் அவர்கள் கொடுத்த தகவலின்படி இம்ரான் கான் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications