தேனி அருகே ஒரே பொய் தான்.. கோடிகளை குவித்த பெண்கள்... சிக்கிய சரண்யா.. கைதானது எப்படி?
தேனி: தேனி மாவட்டம் பெரியகுளம் தென்கரையை சேர்ந்த சுந்தர விக்னேஷ் என்பவர் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவர் தேனி மாவட்ட காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரில் அரசு வேலை வாங்கித் தருவதாக கனகதுர்கா என்ற முனியம்மா மற்றும் ஒச்சு என்ற சூர்யா (38), கம்பம் வடக்கு பட்டியை சேர்ந்த நாகராஜ் மனைவி சரண்யா (34) ஆகியோர் ஏமாற்றியதாக புகார் அளித்தார். இதில் தற்போது சரண்யாவும் கைது செய்யப்பட்டுள்ளார். வேலை வாங்கி தருவதாக ரூ.1 கோடி மோசடி வழக்கின் விவரங்களை பார்ப்போம்.
தேனி மாவட்டம் பெரியகுளம் தென்கரையை சேர்ந்தவர் சுந்தர விக்னேஷ் என்ற பொறியாளர், தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வருகிறார். சுந்தர விக்னேஷ் தேனி மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றைக் கொடுத்தார்.

அதில், 'எனது அக்காள் திவ்யா, அவருடைய தோழி செல்வராதா ஆகியோர் தேனி பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியைகளாக வேலை செய்து வருகிறார்கள். திண்டுக்கல் மாவட்டம் கன்னிவாடியை சேர்ந்த கனகதுர்கா என்ற முனியம்மா (வயது 35), செல்வராதாவிடம் தான் கல்வித்துறையில் இணை இயக்குனராக பணியாற்றுவதாகவும், தன்னிடம் பணம் கொடுத்தால் கல்வித்துறையில் வேலை வாங்கித் தருவதாகவும் தெரிவித்தார்.
மேலும், திவ்யாவுக்கு ஆசிரியை வேலையும், எனக்கு கணினி ஆய்வாளர் வேலையும் வாங்கி தருவதாக தெரிவித்தார். நாங்கள் 2 பேர் மற்றும் எனது நண்பர்கள் இஜாஜ்அகமது, பாண்டி, பாலஸ்ரீகோகுல் ஆகியோர் அரசு வேலைக்காக கனகதுர்காவிடம் வங்கிக் கணக்கு மூலம் ரூ.33 லட்சம் கொடுத்திருந்தோம்.
இதேபோல் இ.புதுப்பட்டியை சேர்ந்த ஒச்சு என்ற சூர்யா (38), கம்பம் வடக்கு பட்டியை சேர்ந்த நாகராஜ் மனைவி சரண்யா (34) ஆகியோர் சேர்ந்து, மேலும் 26 பேரிடம் ரூ.78 லட்சத்து 21 ஆயிரம் மோசடி செய்திருக்கிறார்கள். மொத்தம் இவர்கள் 3 பேரும் ரூ.1 கோடியே 11 லட்சத்து 21 ஆயிரம் மோசடி செய்து விட்டார்கள். இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
இந்த புகாரை விசாரித்த தேனி மாவட்ட குற்றப்பிரிவு போலீசார், கடந்த ஆண்டு மார்ச் மாதம் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் தொடர்புடைய ஒச்சு என்ற சூர்யா, கனகதுர்கா என்ற முனியம்மா ஆகியோர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டனர்.
மேலும் கனகதுர்கா கல்வித்துறை அதிகாரி இல்லை என்றும், ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வந்ததும் விசாரணையில் தெரியவந்தது. இந்த வழக்கில் தொடர்புடைய சரண்யாவை போலீசார் தேடி வந்தனர். அவர், மற்றொரு மோசடி வழக்கில் கன்னியாகுமரி போலீசாரால் கைது செய்யப்பட்டு தக்கலையில் உள்ள சிறையில் இருப்பதாக தெரியவந்தது.
இதையடுத்து சரண்யாவை தேனியில் பதிவு செய்த வழக்கிலும், தேனி மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். அவரை அங்கிருந்து அழைத்து வந்து தேனி ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் போலீசார் ஆஜர்படுத்தினர். பின்னர் அவரை மீண்டும் தக்கலை சிறையில் போலீசார் நேற்று அடைத்தனர்.












Click it and Unblock the Notifications